திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில்  அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள்  சார்ந்த நூல். கணிமேதாவியார்  என்பவர் இதனை இயற்றினார். இன்னொரு பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஏலாதியும் இவர் இயற்றியதே.

 

கீழ்க்கணக்கு வரிசையில் அகப்பொருள் நூல்கள் ஆறு. அவற்றுள் இரண்டு நூல்கள் 'திணை' என்றும், வேறு இரண்டு 'ஐந்திணை' என்றும் பெயர் பெறுவன. ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தந்துள்ளமையால் 'திணைமாலை' என்றும், பாடல் அளவினால் 'திணைமாலை நூற்றைம்பது' என்றும், இந்நூல் பெயர் பெற்றுள்ளது. கீழ்க்கணக்கில் அமைந்த ஐந்திணை நூல்களில் அளவால் பெரியது இதுவே. குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்னும் வரிசையில் ஐந்திணைகளை இந்நூல் முறைப்படுத்தியுள்ளது. திணை ஒவ்வொன்றும் 30 பாடல்களைக் கொண்டுள்ளது. எனினும் குறிஞ்சி, நெய்தல், முல்லைத் திணைகள் மூன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளன. அதனால், இந்நூலில் 153 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந் நூலின் ஆசிரியர் ஏலாதியை இயற்றிய கணிமேதாவியார். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.

 

 

 

1. குறிஞ்சி



நிலம் : மலையும் மலைசார்ந்த இடமும்.
ஒழுக்கம் புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.

நறைபடர் சாந்தம் அறஎறிந்து, நாளால்
உறைஎதிர்ந்து வித்தியஊழ் ஏனல் - பிறையெதிர்ந்த
தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர்!- காணீரோ
ஏமரை போந்தன ஈண்டு. (1)

சுள்ளி சுனைநீலம் சோபா லிகைசெயலை
அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி
இதணால் கடியடுங்கா ஈர்ங்கடா யானை
உதணால் கடிந்தான் உளன். (2)

சாந்தம் எறிந்துழுத சாரல் சிறுதினைச்
சாந்தம் எறிந்த இதண்மிசைச் - சாந்தம்
கமழக் கிளிகடியும் கார்மயில் அன்னாள்
இமிழக் கிளியழா ஆர்த்து. (3)

கோடா புகழ்மாறன் கூடல் அனையாளை
ஆடா அடகினும் காணேன்போர் - வாடாக்
கருங்கொல்வேல் மன்னர் கலம்புக்க கொல்லோ
மருங்குல்கொம் பன்னாள் மயிர். (4)

வினைவிளையச் செல்வம் விளைவதுபோல் நீடாப்
பனைவிளைவு நாமெண்ணப் பாத்தித் - தினைவிளைய
மையார் தடங்கண் மயிலன்னாய்! தீத்தீண்டு
கையார் பிரிவித்தல் காண்! (5)

மானீல மாண்ட துகில்உமிழ்வ(து) ஒத்தருவி
மானீல மால்வரை நாட! கேள் - மாநீலம்
காயும்வேற் கண்ணாள் கனையிருளின் நீவர
ஆயுமோ மன்றநீ ஆய். (6)

கறிவளர்பூஞ் சாரல் கைந்நாகம் பார்த்து
நெறிவளர் நீள்வேங்கை கொட்கும் - முறிவளர்
நன்மலை நாட! இரவரின் வாழாளால்,
நன்மலை நாடன் மகள். (7)

அவட்காயின் ஐவனம் காவல் அமைந்த(து)
இவட்காயின் செந்தினைகார் ஏனல் - இவட்காயின்
எண்ணுளவால் ஐந்திரண்(டு) ஈத்தான்கொல் என்னாங்கொல்
கண்ணுளவால் காமன் கணை. (8)

வஞ்சமே என்னும் வகைத்தாலோர் மாவினாய்த்
தஞ்சம் தமியனாய்ச் சென்றேன்என் - நெஞ்சை
நலங்கொண்டார் பூங்குழலாள் நன்றாயத்(து) அன்(று)என்
வலங்கொண்டாள் கொண்டாள் இடம். (9)

கருவிரல் செம்முகம் வெண்பல்சூல் மந்தி
பருவிரலால் பைஞ்சுனைநீர் தூஉய்ப் - பெருவரைமேல்
தேன்வார்க்(கு) ஓக்கும் மலை நாட! வாரலோ
வான்தேவர் கொட்கும் வழி. (10)

கரவில் வளமலைக் கல்லருவி நாட!
உரவில் வலியா ஒரு நீ - இரவின்
வழிகள்தாம் சால வரஅரிய வாரல்
இழிகடா யானை எதிர். (11)

வேலனார் போக மறிவிடுக்க வேரியும்
பாலனார்க்(கு) ஈக பழியிலாள் - பாலால்
கடும்புனலின் நீந்திக் கரைவைத்தாற்(கு) அல்லால்
நெடும்பனைபோல் தோள்நேராள் நின்று. (12)

ஒருவரைபோல் எங்கும் பல்வரையும் சூழ்ந்த
வருவரை யுள்ளதாம் சீறூர் - வருவரையுள்
ஐவாய நாதும் புறமெல்லாம் ஆயுங்கால்
கைவாய நாதும்சேர் காடு. (13)

வருக்கை வளமலையுள் மாதரும் யானும்
இருக்கை இதண்மேலே மாகப் - பருக்கைக்
கடாஅமால் யானை கடிந்தானை அல்லால்
தொடாஅவால் என்தோழி தோள். (14)

வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க்
கோடாது நீர்கொடுப்பின் அல்லது - கோடா
எழிலும் முலையும் இரண்டிற்கும் முந்நீர்ப்
பொழிலும் விலையாமோ போந்து. (15)

நாள்நாகம் நாறும் நனைகுழலாள் நல்கித்தன்
பூண்ஆகம் நேர்வளவும் போகாது - பூண்ஆகம்
என்றேன் இரண்டாவ(து) உண்டோ மடல் மாமேல்
நின்றேண் மறுகிடையே நேர்ந்து. (16)

அறி(கு)அவளை ஐய இடைம்மடவாய் ஆயச்
சிறிதவள்செல் வாள்இறுமென் றஞ்சிச் - சிறிதவள்
நல்கும்வாய் காணாது நைந்துருகி என்நெஞ்சம்
ஒல்கும்வாய் ஒல்கல் உறும். (17)

என்னாங்கொல் ஈடில் இளவேங்கை நாளுரைப்பப்
பொன்னாம்போர் வேலவர் தாம்புரிந்த - தென்னே
மருவியா மாலை மலைநாடன் கேண்மை
இருவியாம் ஏனல் இனி. (18)

பாலெத்த வெள்ளருவி பாய்ந்தாடிப் பல்பூப்பெய்
தாலொத்த ஐவனம் காப்பாள்கண் - வேலொத்(து)என்
நெஞ்சம்வாய்ப் புக்(கு)ஒழிவு காண்பானோ காண்கொடா
அஞ்சாயற் கேநோவல் யான். (19)

நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட!
கோள்வேங்கை போற்கொடியார் என்ஐயன்மார் - கோள்வேங்கை
அன்னையால் நீயும் அருந்தழையாம் ஏலாமைக்(கு)
என்னையோ நாளை எளிது. (20)

பொன்மெலியும் மேனியாள் பூஞ்சுணங்கு மென்முலைகள்
என்மெலிய வீங்கினவே பாவமென்று - என்மெலிவிற்(கு)
அண்கண்ணி வாடாமை யால்நல்ல என்(று)ஆற்றான்
உண்கண்ணி வாடாள் உடன்று. (21)

கொல்யானை வெண்மருப்பும் கொல்வல் புலியதளும்
நல்யானை நின்ஐயர் கூட்டுண்டு - செல்வர்தாம்
ஓரம்பி னான்எய்து போக்குவர்யான் போகாமல்
ஈரம்பி னால்எய்தாய் இன்று. (22)

பெருமலை தாம்நாடித் தேன்துய்த்துப் பேணா(து)
அருமலை மாய்க்குமவர் தங்கை - திருமுலைக்கு
நாணழிந்து நல்ல நலனழிந்து நைந்துருகி
ஏண்அழிதற்(கு) யாமே இனம். (23)

நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை
வெறும்புதல்போல் வேண்டாது வேண்டி எறிந்(து)உழுது
செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு
நொந்தினைய வல்லளோ நோக்கு. (24)

கொல்லியல் வேழும் குயவரி கோட்பிழைத்து
நல்லியல் தம்இனம் நாடுவபோல் - நல்லியல்
நாமவேல் கண்ணாள் நடுநடுப்ப வாராலோ
ஏமவேல் ஏந்திஇரா. (25)

கருங்கால் இளவேங்கை கான்றபூக் கள்மேல்
இருங்கால் வயவேங்கை ஏய்க்கும் - மருங்கால்
மழைவளரும் சாரல் இரவரின் வாழாள்
இழைவளரும் சாயல் இனி. (26)

பனிவரைநீள் வேங்கைப் பயமலைநன் நாட
இனிவரையாய் என்றெண்ணிச் சொல்வேன் - முனிவரையுள்
நின்றான் வலியாக நீவர யாய்கண்டாள்
ஒன்றாள்காப்(பு) ஈயும் உடன்று. (27)

மேகம்தோய் சாந்தம் விசைதிமிசு காழ்அகில்
நாகம்தோய் நாகம்என இவற்றைப் - போக
எறிந்(து)உழுவார் தங்கை இருந்தடங்கண் கண்டும்
அறிந்துழல்வான் ஓ!இம் மலை? (28)

பலாஎழுந்த பால்வருக்கைப் பாத்தி அதன்நேர்
நிலாஎழுந்த வார்மணல் நீடிச் - சுலாஎழுந்து
கான்யாறு கால்சீத்த காந்தளம்பூந் தண்பொதும்பர்
தான்நாறத் தாழ்ந்த இடம். (29)

திங்களுள் வில்லெழுதித் தேராது வேல்விலக்கித்
தங்களுள் ளாள்என்னும் தாழ்வினால் - இங்கண்
புனங்காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்தென்
மனங்காக்க வைத்தார் மருண்டு. (30)

தன்குறையி(து) என்னான் தழைகொணரும் தண்சிலம்பன்
நின்குறை என்னும் நினைப்பினனாய்ப் - பொன்குறையும்
நாள்வேங்கை நீழலுள் நண்ணான் எவன்கொலோ
கோள்வேங்கை யன்னான் குறிப்பு. (31)

2. நெய்தல்


நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்.
ஒழுக்கம் : இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.

பானலம் தண்கழிப் பாடறிந்து தன்னைமார்
நூனல நுண்வலையால் நொண்டெடுத்த - கானல்
படுபுலால் காப்பாள் படைநெடுங்கண் நோக்கம்
கடிபொல்லா என்னையே காப்பு. (32)

பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணா(து)
இருங்கடல் மூழ்குவார் தங்கை - இருங்கடலுள்
முத்தன்ன வெண்முறுவல் கண்டுருகி நைவார்க்கே
ஒத்தனம் யாமே உளம். (33)

தாமரை தான்முகமாத் தண்அடையீர் மாநீலம்
காமர்கண் ஆகக் கழிதுயிற்றும் - காமருசீர்த்
தண் பரப்ப! பாயிருள் நீவரின்தாழ் கோதையாள்
கண்பரப்பக் காணீர் கசிந்து. (34)

புலால்அகற்றும் பூம்புன்னைப் பொங்கு நீர்ச்சேர்ப்ப!
நிலாவகற்றும் வெண்மணல்தண் கானல் - சுலா அகற்றிக்
கங்குல்நீ வாரல் பகல்வரின்மார்க் கவ்வையாம்
மங்குல்நீர் வெண்திரையின்மாட்டு. (35)

முருகுவாய் முள்தாழை நீள்முகைபார்ப் பென்றே
குருகுவாய்ப் பெய்(து)இரை கொள்ளாது - உருகிமிக
இன்னா வெயில்சிற கால்மறைக்கும் சேர்ப்ப! நீ
மன்னா வரவு மற! (36)

ஓதநீர் வேலி உரைகடியாப் பாக்கத்தார்
காதல்நீர் வாராமை கண்ணோக்கி - ஓதநீர்
அன்றறியும் ஆதலால் வாரா(து) அலர்ஒழிய
மன்றறியக் கொள்ளீர் வரைந்து. (37)

மாக்கடல்சேர் வெண்மணல் தண்கானல் பாய்திரைசேர்
மாக்கடல்சேர் தண்பரப்பன் மார்(பு)அணங்கா - மாக்கடலே
என்போலத் துஞ்சாய் இதுசெய்தார் யார்உரையாய்
என்போலும் துன்பம் நினக்கு. (38)

தந்தார்க்கே ஆம்ஆல் தட மென்தோள் இன்னநாள்
வந்தார்க்கே ஆம்என்பார் வாய்காண்பாம் - வந்தார்க்கே
காவா இளமணல் தண்கழிக் கானல்வாய்ப்
பூவா இளஞாழல் போது. (39)

தன்துணையோ(டு) ஆடும் அலவனையும் தான் நோக்கா
இன்துணையோ(டு) ஆட இயையுமோ? - இன்துணையோ(டு)
ஆடினாய் நீயாயின் அந்நோய்க்(கு)என் நொந்தென்று
போயினான் சென்றான் புரிந்து. (40)

உருகுமால் உள்ளம் ஒருநாளும் அன்றால்
பெருகுமால் நம்அலர் பேணப் - பெருகா
ஒருங்குவால் மின்னோ(டு) உருமுடைத்தாய் பெய்வான்
நெருங்குவான் போல நெகிழ்ந்து. (41)

கவளக் களிப்பியனமால் யானைசிற் றாளி
தவழத்தான் நில்லா ததுபோல் - பவளக்
கடிகை யிடைமுத்தம் காண்தொறும் நில்லா
தொடிகை யிடைமுத்தம் தொக்கு. (42)

கடற்கோ(டு) இருமருப்புக் கால்பாக னாக
அடற்கோட் டியானை திரையா - உடற்றிக்
கரைபாய்நீள் சேர்ப்ப! கனையிருள் வாரல்
வரைவாய்நீ யாகவே வா! (43)

கடும்புலால் புன்னை கடியும் துறைவ!
படும்புலால் புட்கடிவான் புக்க - தடம்புலாம்
தாழையா ஞாழல் ததைந்துயர்ந்த தாய்பொழில்
எழைமான் நோக்கி இடம். (44)

தாழை தவழ்ந்துலாம் வெண்மணல் தண்கானல்
மாழை நுளையர் மடமகள் - ஏழை
இணைநாடில் இல்லா இருந்தடங்கண் கண்டும்
துணைநாடி னன்தோம் இலன்! (45)

தந்(து)ஆயல் வேண்டாஓர் நாட்கேட்டுத் தாழாது
வந்தால்நீ எய்துதல் வாயால்மற்(று) - எந்தாய்
மறிமகர வார்குழையாள் வாழாள்நீ வாரல்
எறிமகரம் கொட்கும் இரா. (46)

பண்ணாது பண்மேல்தே பாடும் கழிக்கானல்
எண்ணாது கண்டார்க்கே ஏரணங்கால் - எண்ணாது
சாவார்சான் றாண்மை சலித்திலா மற்றிவளைக்
காவார் கயிறுரீஇ விட்டார். (47)

திரை மேற்போந்(து) எஞ்சிய தெள்கழிக் கானல்
விரைமேவும் பாக்கம் விளக்காக் - கரைமேல்
விடுவாய் பசும்புற இப்பிகால் முத்தம்
படுவாய் இருளகற்றும் பாத்து. (48)

எங்கு வருதி இருங்கழித் தண்சேர்ப்ப!-
பொங்கு திரையுதைப்பப் போந்தெழிந்த - சங்கு
நரன்யியிர்த்த நித்திலம் நள்ளிருள்கால் சீக்கும்
வரன்றுயிர்த்த பாக்கத்து வந்து. (49)

திமில்களி றாகத் திரைபறையாப் பல்புள்
துயில்கெடத் தோன்றும் படையாத் - துயில்போல்
குறியா வரவொழிந்து கோலநீர்ச் சேர்ப்ப!
நெறியால்நீ கொள்வது நேர். (50)

கடும்புலால் வெண்மணற் கானலுறு மீன்கண்
படும்புலால் பார்த்தும் பகர்தும் - அடும்பெலாம்
சாலிகை போல்வலை சாலம் பலவுணங்கும்
பாலிகை பூக்கும் பயின்று. (51)

திரைபாக னாகத் திமில்களி றாகக்
கரைசேர்ந்த கானல் படையா - விரையாது
வேந்து கிளர்ந்தன்ன வேலைநீர்ச் சேர்ப்ப! நாள்
ஆய்ந்து வரைதல் அறம். (52)

பாறு புரவியாப் பல்களிறு நீள்திமிலாத் தேறு திரைபறையாப் புட்படையாத் - தேறாத
மன்கிளர்ந்த போலும் கடற்சேர்ப்ப! மற்றெமர்
முன்கிளர்ந்|(து) எய்தல் முடி! (53)

வாராய் வான்நீர்க் கழிக்கானல் நுண்மணல்மேல்
தேரின்மா காலாழும் தீமைத்தே - ஓரில்ஓர்
கோள்நாடல் வேண்டா குறியறிவார்க் கூஉய்க் கொண்டோர்
நாள் நாடி நல்குதல் நன்று. (54)

கண்பரப்பக் காணாய் கடும்பனி கால்வல்தேர்
மண்பரக்கும் மாயிருள் மேற்கொண்டு - மண்பரக்கும்
ஆறுநீர் வேலைநீ வாரல் வரின்ஆற்றாள்
ஏறுநீர் வேலை எதிர். (55)

கடற்கானல் சேர்ப்ப! கழியுலாஅய் நீண்ட
அடற்கானல் புன்னைதாழ்ந்(து) ஆற்ற - மடற்கானல்
அன்றில் அகவும் அணிநெடும் பெண்ணைத்(து)எம்
முன்றில் இளமணல்மேல் மொய்த்து. (56)

வருதிரை தானுலாம் வார்மணல் கானல்
ஒருதிரை ஓடா வளமை - இருதிரை
முன்வீழுங் கானல் முழங்கு கடற்சேர்ப்ப!
என்வீழல் வேண்டா இனி. (57)

மாயவனும் தம்முனும் போலே மறிகடலும்
கானலும்சேர் வெண்மணலும் காணாயோ - கானல்
இடையெலாம் ஞாழலும் தாழையும் ஆர்ந்த
புடையெலாம் புன்னை புகன்று? (58)

பகல்வரின் கவ்வை பலவாம் பரியாது
இரவரின் ஏதமும் அன்ன - புகஅரிய
தாழை துவளும் தரங்கநீர்ச் சேர்ப்பிற்றே
ஏழை நுளையர் இடம். (59)

திரையலறிப் பேராத் தெழியாத் திரியாக்
கரையலவன் காலினாற் கானாக் - கரையருகே
நெய்தல் மலர்கொய்யும் நீள்நெடுங் கண்ணினாள்
மையல் நுளையர் மகள். (60)

அறி(கு)அரி(து) யார்க்கும் அரவ நீர்ச் சேர்ப்ப!
நெறிதிரிவார் இன்மையால் இல்லை - முறிதிரிந்த
கண்டலந்தண் டில்லை கலந்து கழிசூழ்ந்த
மிண்டலந்தண் தாழை இணைந்து. (61)

வில்லார் விழவினும் வேலாழி சூழுலகில்
நல்லார் விழவகத்தும் நாம்காணேம் - நல்லாய்!
உவர்கத்(து) ஒரோஉதவிச் சேர்ப்பன்ஒப் பாரைச்
சுவர்கத்(து) உளராயின் சூழ். (62)

3. பாலை


நிலம் : குறிஞ்சியும் முல்லையும் திரிந்த மணல்வெளி.
ஒழுக்கம் : பிரிதலும் பிரிதல் நிமத்தமும்.

எரிநிற நீள்பிண்டி இணரினம் எல்லாம்
வரிநிற நீள்வண்டர் பாடப் - புரிநிறநீள்
பொன்னணிந்த கோங்கம் புணர் முலையாய்! பூந்தொடித்தோள்
என்னணிந்த ஈடில் பசப்பு? (63)

பேணாய் இதன்திறத்(து) என்றாலும் பேணாதே
நாணாய நல்வளையாய் நாணிண்மை - காணாய்
எரிசிதறி விட்டன்ன ஈர்முருக்(கு) ஈடில்
பொரிசிதறி விட்டன்ன புன்கு. (64)

தான்தாயாக் கோங்கம் தளர்ந்து முலைகொடுப்ப
ஈன்றாய்நீ பாவை இருங் குரவே! - ஈன்றாள்
மொழிகாட்டாய் ஆயினும் முள்ளெயிற்றாள் சென்ற
வழிகாட்டாய் ஈதென்று வந்து. (65)

வல்வருங் காணாய் வயங்கி முருக்கெல்லாம்
செல்வர் சிறார்க்குப்பொற் கொல்லர்போல் - நல்ல
பவளக் கொழுந்தின்மேல் பொற்றாலி பாஅய்த்
திகழக்கான் றிட்டன தேர்ந்து! (66)

வெறுக்கைக்குச் சென்றார் விளங்கிழாய்! தோன்றார்
பொறுக்கஎன் றால்பொறுக்க லாமோ? - ஒறுப்பபோல்
பொன்னுள் உறுபவளம் போன்ற புணர்முருக்கம்
என்னுள் உறுநோய் பெரிது! (67)

சென்றக்கால் செல்லும்வாய் என்னோ? இருஞ்சுரத்து
நின்றக்கால் நீடி ஒளிவிடா - நின்ற
இழைக்கமர்ந்த ஏஏர் இளமுலையாள் ஈடில்
குழைக்கமர்ந்த நோக்கின் குறிப்பு! (68)

அத்தம் நெடிய அழற்கதிரோன் செம்பாகம்
அத்தமறைந் தான்இவ் அணியிழையோ(டு) - ஒத்த
தகையினால் எம்சீறூர்த் தங்கினிராய் நாளை
வகையினிராய்ச் சேறல் வனப்பு. (69)

நின்நோக்கம் கொண்டமான் தண்குரவ நீழல்காண்
பொன்நோக்கம் கொண்டபூங் கோங்கம்காண் - பொன் நோக்கம்
கொண்ட சுணங்கணி மென்முலைக் கொம்பன்னாய்!
வண்டல் அயர்மணல்மேல் வந்து! (70)

அஞ்சுடர்நள் வாண்முகத்(து) ஆயிழையும் மாநிலா
வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக் கண்டு - அஞ்சி
ஒருசுடரும் இன்றி உலகுபா ழாக
இருசுடரும் போந்தனஎன் றார். (71)

முகந்தா மரைமுறுவல் ஆம்பல்கண் நீலம்
இகந்தார் விரல்காந்தள் என்றென்று - உகந்தியைந்த
மாழைமா வண்டிற்காம் நீழல் வருந்தாதே
ஏழைதான் செல்லும் இனிது. (72)

செவ்வாய்க் கரியகண் சீரினால் கேளாதும்
கவ்வையால் காணாதும் ஆற்றாதும் - அவ் வாயம்
தார்த்தத்தை வாய்மொழியும் தண்கயத்து நீலமும்
ஓர்த்தொழிந்தாள் என்பேதை ஊர்ந்து. (73)

புன்புறவே! சேவலோ(டு) ஊடல் பொருளன்றால்
அன்புறவே உடையார் ஆயினும் - வன்புற்று
அதுகாண் அகன்ற வழிநோக்கிப் பொன்போர்த்து
இதுகாண்என் வண்ணம் இனி! (74)

எரிந்து சுடும்இரவி ஈடில் கதிரான்
விரிந்து விடுகூந்தல் வெ·காப் - புரிந்து
விடுகயிற்றின் மாசுணம் வீயும்நீள் அத்தம்
அடுதிறலான் பின் சென்ற ஆறு. (75)

நெஞ்சம் நினைப்பினும் நெற்பொரியும் நீளத்தம்
அஞ்சல் எனஆற்றின் அஞ்சிற்றால் - அஞ்சப்
புடைநெடும் காதுறப் போழ்ந்தகன்று நீண்ட
படைநெடுங்கண் கொண்ட பனி. (76)

வந்தால்தான் செல்லாமோ வாரிடையாய்! வார்கதிரால்
வெந்தாற்போல் தோன்றும்நீள் வேய்அத்தம் - தந்தார்
தகரக் குழல்புரளத் தாழ்துகில்கை யேந்தி
மகரக் குழைமறித்த நோக்கு? (77)

ஒருகை, இருமருப்பின் மும்மதமால் யானை
பருகுநீர் பைஞ்சுனையில் காணா(து) - அருகல்
வழிவிலங்கி வீழும் வரைஅத்தம் சென்றார்
அழிவிலர் ஆக அவர்! (78)

சென்றார் வருதல் செறிதொடி! சேய்த்தன்றால்
நின்றார்சொல் தேறாதாய்! நீடின்றி - வென்றார்
எடுத்த கொடியின் இலங்கருவி தோன்றும்
கடுத்த மலைநாடு காண்! (79)

உருவேற் கண்ணாய்! ஒரு கால்தேர்ச் செல்வன்
வெருவிவீந்து உக்கநீள் அத்தம் - வருவர்
சிறந்து பொருள்தருவான் சேட்சென்றார் இன்றே
இறந்துகண் ஆடும் இடம். (80)

கொன்றாய்! குருந்தாய்! கொடி முல்லாய்! வாடினீர்
நின்றேன் அறிந்தேன் நெடுங்கண்ணாள் - சென்றாளுக்(கு)
என்னுரைத்தீர்க்(கு) என்னுரைத்தாட்(கு) என்னுரைத்தீர்க்(கு) என்னுரைத்தாள்
மின்னுரைத்த பூண்மிளிர விட்டு? (81)

ஆண்கட னாம்ஆற்றை ஆயுங்கால் ஆடவர்க்குப்
பூண்கடனாப் போற்றிப் புரிந்தமையால் - பூண்கடனாச்
செய்பொருட்குச் செல்வரால் சின்மொழி! நீசிறிது
நைபொருட்கண் செல்லாமை நன்று. (82)

செல்பவோ சிந்தனையும் ஆகாதே நெஞ்செரியும்
வெல்பவோ சென்றார் வினைமுடிய - நல்லாய்
இதடி கரையும்கல் மாபோலத் தோன்றுச்
சிதடி கரையும் திரிந்து. (83)

கள்ளியங் காட்ட கடமா இரிந்தோடத்
தள்ளியும் செல்பவோ தம்முடையார் - கொள்ளும்
பொருளில ராயினும் பொங்கெனப்போந்(து) எய்யும்
அருளில் மறவர் அதர். (84)

பொருள் பொருள் என்றார்சொல் பொன்போலப் போற்றி
அருள்பொருள் ஆகாமை யாக - அருளான்
வளமை கொணரும் வகையினால் மற்றோர்
இளமை கொணர இசை. (84)

ஒல்வார் உளரேல் உரையாய் ஒழியாது
செல்வார்என் றாய்நீ சிறந்தாயே - செல்லாது
அசைந்தொழிந்த யானை பசியால்ஆள் பார்த்து
மிசைந்தொழியும் அத்தம் விரைந்து. (86)

ஒன்றானும் நா(ம்)மொழிய லாமோ செலவுதான்
பின்றாது பேணும் புகழான்பின் - பின்றா
வெலற்கரிதாம் வில்வலான் வேல்விடலை பாங்காச்
செலற்(கு) அரிதாச் சேய சுரம். (87)

அல்லாத என்னையும் தீரமற்(று) ஐயன்மார்
பொல்லாத தென்பது நீபொருந்தாய் - எல்லார்க்கும்
வல்லி ஒழியின் வகைமைநீள் வாட்கண்ணாய்
புல்லி ஒழிவான் புலந்து. (88)

நண்ணிநீர் சென்மின் நமர்அவர் ஆபவேல்
எண்ணிய எண்ணம் எளிதரா - எண்ணிய
வெஞ்சுடர் அன்னானை யான்கண்டேன் கண்டாளாம்
தண்சுடர் அன்னாளைத் தான். (89)

வேறாக நின்னை வினவுனேன் தெய்வத்தால்
கூறாயோ கூறுங் குணத்தினனாய் - வேறாக
என்மனைக்(கு) ஏறக்கொணருமோ வெல்வளையைத்
தன்மனைக்கே உய்க்குமோ தான். (90)

கள்ளிசார் காரோமை நாரில்பூ நீள்முருங்கை
நற்றியவேய் வாழ்பவர் நண்ணுபவோ - புள்ளிப்
பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்தாண்(டு)
இருந்துறங்க வீயும் இடம். (91)

செல்பவோ தம்மடைந்தார் சீரழியச் சிள்துவன்றிக்
கொல்பபோல் கூப்பிடும் வெங்கதிரோன் - மல்கிப்
பொடிவெந்து பொங்கிமேல் வான்சுடும் கீழால்
அடிவெந்து கண்சுடும் ஆறு. (92)

4. முல்லை


நிலம் :காடும் காடு சார்ந்த இடமும்.
ஒழுக்கம் : ஆற்றி இருத்தலும் அதன் நிமித்தமும்.

கருங்கடல் மாந்திய வெண்தலைக் கொண்மூ
இருங்கடல்மா கொன்றான்வேல் மின்னிப் - பெருங்கடல்
தன்போல் முழங்கித் தளவம் குருந்தனைய
என்கொல்யான் ஆற்றும் வகை. (93)

பகல்பருகிப் பல்கதிர் ஞாயிறுகல் சேர
இகல்கருதித் திங்கள் இருளைப் - பகல்வர
வெண்ணிலாக் காலும் மருள்மாலை வேய்த்தோளாய்
உள் நிலாது என்ஆவி யூர்ந்து. (94)

மேல்நோக்கி வெங்கதிரோன் மத்தியநீர் கீழ் நோக்கிக்
கால்நோக்கம் கொண்டழகாக் காண்மடவாய் - மானோக்கி
போதாரி வண்டெலாம் நெட்டெழுத்தின் மேல்புரிய
சாதாரி நின்றறையுஞ் சார்ந்து. (95)

இருள்பரந்(து) ஆழியான் தன்னிறம்போல் தம்முன்
அருள்பரந்த ஆய்நிறம் போன்றும் - மருள்பரந்த
பால்போலும் வெண்ணிலவும் பையர அல்குலாய்
வேல்போலும் வீழ் துணைஇ லார்க்கு. (96)

பாழிபோல் மாயவன்தன் பற்றார் களிற்றெறிந்த
வாழிபோல் ஞாயிறு கல்சேரத் - தோழி
மான்மாலை தம்முன் நிறம்போல் மதிமுளைப்ப
யான்மாலை ஆற்றேன் நினைந்து. (97)

வீயும் வியப்புறவின் வீழ்துளியால் மாக்கடுக்கை
நீயும் பிறரொடும்காண் நீடாதே - ஆயும்
கழலாகிப் பொன்வட்டாய்த் தாராய் மடலாய்க்
குழலாகிக் கோல்சுரியாய்க் கூர்ந்து. (98)

பொன்வாளால் காடில் கருவரை போர்த்தாலும்
என்வாளா என்றி இலங்கெயிற்றாய் - என் வாள்போல்
வாள்இழந்த கண்தோள் வனம்பிழந்த மெல்விரலும்
நாள்இழந்த எண்மிக்கு நைந்து. (99)

பண்(டு)இயையச் சொல்லிய சொற்பழுதால் மாக்கடல்
கண்(டு)இயைய மாந்திக்கால் வீழ்த்(து) இருண்(டு) - எண்திசையும்
கார்தோன்றக் காதலர் தேர்தோன்றா தாகவே
பீர்தோன்றி நீர்தோன்றும் கண். (100)

வண்டினம் வௌவாத ஆம்பலும் வாரிதழான்
வண்டினம் வாய்வீழா மாலையும் - வண்டினம்
ஆராத பூந்தார் அணிதேரான் தான்போத
வாராத நாளே வரும். (101)

மான்எங்கும் தம்பிணையோ(டு) ஆட மறிஉகள
வான்எங்கும் வாய்த்து வளம்கொடுப்பக் - கான்எங்கும்
தேனிறுத்த வண்டோடு தீதா எனத்தேராது
யானிறுத்தேன் ஆவி இதற்கு. (102)

ஒருவந்தம் அன்றால் உறைமுதிரா நீரால்
கருமம்தான் கண்டழிவு கொல்லோ - பருவந்தான்
பட்டின்றே என்றி பணைத் தோளாய்! கண்ணீரால்
அட்டினேன் ஆவி அதற்கு. (103)

ஐந்துருவின் வில்லெழுத நாற்றிசைக்கும் முந்நீரை
இந்துருவின் மாந்தி இருங்கொண்மூ - முந்துருவின்
ஒன்றாய் உருமுடைத்தாய் பெய்வான்போல் பூக்கென்று
கொன்றாய்கொன் றாய்என் குழைத்து. (104)

எல்லை தருவான் கதிர் பருகி யீன்றகார்
கொல்லைதரு வான்கொடிகள் ஏறுவகாண் - முல்லை
பெருந்தண் தளவொடுதம் கேளிரைப்போல் காணாய்
குருந்(து)அங்(கு) ஒடுங்கழுத்தம் கொண்டு. (105)

என்னரே ஏற்ற துணைப்பிரிந்தார் ஆற்றென்பார்
அன்னரே யாவர் அவரவர்க்கு - முன்னரே
வந்(து)ஆரம் தேங்கா வருமுல்லை, சேர்தீந்தேன்
கந்தாரம் பாடுங் களித்து. (106)

கருவுற்ற காயாக் கணமயிலென்று றஞ்சி
உருமுஉற்ற பூங்கோடல் ஓடி - உருமுற்ற
ஐந்தலை நாகம் புரையும் மணிக்கார்தான்
எந்தலையே வந்த(து) இனி. (107)

கண்ணுள வாயின் முலையல்லை காணலாம்
எண்ணுள வாயின் இறவாவால் - எண்ணுளவா
அன்றொழிய நோய்மொழிச்சார் வாகா(து) உருமுடை வான்
ஒன்றொழிய நோய்செய்த வாறு. (108)

என்போல் இகுளை! இருங்கடல் மாந்தியகார்
பொன்போல்தார் கொன்றை புரிந்தன - பொன்போல்
துணைபிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர் தோன்றார்,
இணைபிரிந்து வாழ்வர் இனி. (109)

பெரியார் பெருமை பெரிதே இடர்க்காண்
அரியார் எளியரென்(று) ஆற்றாப் - பரிவாய்த்
தலையழுங்க தண்தளவம் தாம்நகக்கண்(டு) ஆற்றா
மலையழுத சால மருண்டு. (110)

கானம் கடியரங்காக் கைம்மறிப்பக் கோடலார்
வானம் விளிப்பவண்(டு) யாழாக - வேனல்
வளரா மயிலாட வாட்கண்ணாய்! சொல்லாய்
உளராகி உய்யும் வகை. (111)

தேரோன் மலைமறையத் தீங்குழல் வெய்தாக
வாரான் விடுவானோ வாட்கண்ணாய்! - காராய்
குருந்தோடு முல்லை குலைத்தனகாண் நாமும்
விருந்தோடு நிற்றல் விதி. (112)

பறியோலை மேலொடு கீழா இடையர்
பிறியோலை பேர்த்து விளியாக் - கதிப்ப
நரியுளையும் யாமத்தும் தோன்றாரால் அன்னாய்!
விரியுளைமான் தேர்மேல்கொண் டார். (113)

பாத்துப் படுகடல் மாந்திய பல்கொண்மூக்
காத்துக் கனைதுளி சிந்தாமைப் - பூத்துக்
குருந்தே! -பருவங் குறித்துவளை நைந்து
வருந்தேயென் றாய்நீ வரைந்து. (114)

படுந்தடங்கண் பல்பணைபோல் வான்முழங்க மேலும்
கொடுந்தடங்கண் கூற்றுமின் ஆக - நெடுந்தடங்கண்
நீர்நின்ற நோக்கின் நெடும்பணை மென்தோளாட்(கு)த்
தேர் நின்ற(து) என்னாய் திரிந்து. (115)

குருந்தே! கொடிமுல்லாய்! கொன்றாய்! தளவே!
முருந்தேய் எயிறொடுதார் பூப்பித்து - இருந்தே,
அரும்(பு)ஈர் முலையாள் அணிகுழல்தாழ் வேய்த்தோள்
பெரும்பீர் பசப்பித்தீர் பேர்ந்து. (116)

கதநாகம் புற்றிடையக் காரேறு சீற
மதநாகம் மாறு முழங்கப் - புதல்நாகம்
பொன்பயந்த வெள்ளி புறமாகப் பூங்கோதாய்!
என்பசந்த மென்தோள் இனி. (117)

கார்தோன்றிப் பூவுற்ற காந்தள் முகைவிளக்குப்
பீர்தோன்றித் தூண்டுவாள் மெல் விரல்போல் - நீர் தோன்றித்
தன்பருவம் செய்தது கானம் தடங்கண்ணாய்!
என்பருவம் அன்(று)என்றி இன்று. (118)

உகவும்கள் அன்றென்பார் ஊரார் அதனைத்
தகவு தகவனென்(று) ஓரேன் - தகவேகொல்
வண்துடுப்பாயப் பாம்பாய் விரலாய் வளைமுறியாய்
வெண்குடையாம் தண்கோடல் வீந்து. (119)

பீடிலார் என்பார்கள் காணார்கொல் வெங்கதிரால்
கோடெலாம் பொன்னாய்க் கொழுங்கடுக்கைக் கோடெலாம்,
அத்தம் கதிரோன் மறைவதன்முன் வண்டொடுதேன்
துத்தம் அறையும் தொடர்ந்து. (120)

ஒருத்தியான் ஒன்றல பல்பகை என்னை
விருத்தியாக் கொண்டன வேறாப் - பொருத்தில்
மடல்அன்றில் மாலை படுவசி ஆம்பல்
கடலன்றிக் காரூர் கறுத்து. (121)

கானம் தலைசெயக் காப்பார் குழல்தோன்ற,
ஏனம் இடந்த மணிஎதிரே - வானம்
நகுவதுபோல் மின்ஆட நாண்இல்என் ஆவி
புகுவது போலும் உடைந்து. (122)

இம்மையால் செய்ததை இம்மையே ஆம்போலும்
உம்மையே ஆமென்பார் ஓரார்காண் - நம்மை
எளியர் எனநலிந்த ஈர்ங்குழலார் ஏடி
தெளியச் சுடப்பட்ட வாறு. (123)

5. மருதம்


நிலம் : வயலும் வயல் சார்ந்த இடமும்.
ஒழுக்கம் : ஊடலும் ஊடல் நிமிர்த்தமும்.

செவ்வழியாழ்ப் பாண்மகனே! சீரார்தேர் கையினால்
இவ்வகை ஈர்த்துய்ப்பான் தோன்றாமுன் - இவ்வழியே
ஆடினான் ஆய்வய லூரன்மற்(று) எங்கையர்தோள்
கூடினான் பின் பெரிது கூர்ந்து. (124)

மாக்கோல்யாழ்ப் பாண்மகனே! மண்யானைப் பாகனார்
தூக்கோல் துடியோடு தோன்றாமுன் - தூக்கோல்
தொடியுடையார் சேரிக்குத் தோன்றுமோ சொல்லாய்
கடியுடையேன் வாயில் கடந்து. (125)

விளரியாழ்ப் பாண்மகனே! வேண்டா அழையேல்
முளரி மொழியா(து) உளரிக் - கிளரிநீ
பூங்கண் வயலூரன் புத்தில் புகுவதன்முன்
ஆங்கண் அறிய உரை. (126)

மென்கண் கலிவய லூரன்தன் மெய்ம்மையை
எங்கட்(கு) உரையாது எழுந்துபோய் - இங்கண்
குலம்காரம் என்(று(அணுகான் கூடும்கூர்த்(து) அன்றே
அலங்கார நல்லார்க்(கு) அறை. (127)

செந்தா மரைப்பூ உற நிமிர்ந்த செந்நெல்லின்
பைந்தார்ப் புனல்வாய்ப்பாய்ந்(து) ஆடுவாள் - அந்தார்
வயந்தகம்போல் தோன்றும் வயலூரன் கேண்மை
நயந்தகன்(று) ஆற்றாமை நன்று. (128)

வாடாத தாமரைமேல் செந்நெற் கதிர்வணக்கம்
ஆடா அரங்கினுள் ஆடுவாள் - ஈடாய
புல்லகம் ஏய்க்கும் புகழ்வயல் ஊரன்தன்
நல்லகம் சேராமை நன்று. (129)

இசையுரைக்கும் என்செய் திரம்நின் றவரை
வசையுரைப்பச் சால வழத்தீர் - பசைபொறை
மெய்ம்மருட்(டு) ஒல்லா மிகுபுனல் ஊரன்தன்
பொய்ம்மருட்டுப் பெற்ற பொழுது. (130)

மடங்(கு)இறவு போலும்யாழ்ப் பண்பிலாப் பாண!
தொடங்குறவு சொல்துணிக்க வேண்டா - முடங்கிறவு
பூட்டுற்ற வில்ஏய்க்கும் பூம்பொய்கை யூரன்பொய்
கேட்டுற்ற கீழ்நாள் கிளர்ந்து. (131)

எங்கை யரில்உள்ளா னேபாண! நீபிறர்
மங்கை யரில் என்று மயங்கினாய் - மங்கையரில்
என்னா(து) இறவா(து) இவணின் இகந்தேகல்
பின்னாரில் அந்தி முடிவு. (132)

பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகற்கு
மாலையாழ் ஓதி வருடாயோ? - காலையாழ்
செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு
நையும் இடமறிந்து நாடு. (133)

கிழமை பெரியோர்க்குக் கேடின்மை கொல்லோ
பழமை பயன்நோக்கிக் கொல்லோ- கிழமை
குடிநாய்கர் தாம்பல பெற்றாரில் கேளா
அடியேன் பெற்றா அருள். (134)

என்கேட்டி ஏழாய்! இருநிலத்தும் வானத்தும்
முன்கேட்டும் கண்டும் முடிவறியேன் - பின்கேட்டு
அணியிகவா நிற்க அவன்அணங்கு மாதர்
பணியிகவான் சாலப் பணிந்து. (35)

எங்கை இயல்பின் எழுவல் யாழ்ப் பண்மகனே!
தங்கையும் வாழும் அறியாமல் - இங்கண்
உளர உளர உவன்ஓடிச் சால
வளர வளர்ந்த வகை. (136)

கருங்கோட்டுச் செங்கண் எருமை கழனி
இருங்கோட்டு மென்கரும்பு சாடி - அருங்கோட்டால்
ஆம்பல் மயக்கி அணிவளை ஆர்ந்(து) அழகாத்
தாம்பல் அசையினவாய் தாழ்ந்து. (137)

கன்றுள்ளிச் சோர்ந்தபால் காலொற்றித் தாமரைப்பூ
வன்றுள்ளி அன்னத்தை ஆர்த்துவான் - சென்றுள்ளி
வந்(து)ஐ,ஆ என்னும் வகையிற்றே மற்றிவன்
தந்தையார் தம்மூர்த் தகை. (138)

மருதோடு காஞ்சி அமர்ந்துயர்ந்த நீழல்
எருதோடு உழல்கின்றார் ஓதை - குருகோடு
தாராத்தோ(று) ஆய்ந்தெடுப்பும் தண்ணம் கழனித்தே
ஊராத்தே ரான்தந்தை ஊர். (139)

மண்ணார் குலைவாழை உள்தொடுத்த தேன்நமதென்(று)
உண்ணாப்பூந் தாமரைப் பூவுள்ளும் - கண்ணார்
வயலூரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள்
மயல் ஊ ரரவர் மகள். (140)

அணிக்குரல்மேல் நல்லாரோ(டு) ஆடினேன் என்ன
மணிக்குரல்மேல் மாதராள் ஊடி - மணிச்சிரல்
பாட்டை இருந்தயரும் பாய்நீர்க் கழனித்தே
யாட்டை இருந்துறையும் ஊர். (141)

தண்கயத்துத் தாமரைநீள் சேவலைத் தாழ்பெடை
புண்கயத் துள்ளும் வயலூர ! - வண்கயம்
போலும்நின் மார்பு புளிவேட்கைத்(து) ஒன்(று)இவள்
மாலும்மா றாநோய் மருந்து. (142)

நல்வயல் ஊரன் நறுஞ்சாந்(து) அணிஅகலம்
புல்லிப் புடைபெயரா மாத்திரைக்கண் - புல்லியார்
கூட்டு முதலுறையும் கோழி துயிலெடுப்ப
பாட்டு முரலுமாம் பண். (143)

அரத்தம் உடீஇ, அணிபழுப்பப் பூசிச்
சிரத்தையால் செங்கழுநீர் சூடிப் - பரத்தை
நினைநோக்கிக் கூறினும் நீமொழியல் என்று
மனைநோக்கி மாண விடும். (144)

பாட்டார வம்பண் அரவம் பணியாத
கோட்டரவம் இன்னிவை தாங்குழுமக் - கோட்டரவம்
மந்திரம் கொண்டோங்கல் என்ன மகச்சுமந்து
இந்திரன்போல் வந்தான் இடத்து. (145)

மண்கிடந்த வையகத்தோர் மற்றுப் பெரியராய்
எண்கிடந்த நாளான் இகழ்ந்தொழுகப் - பெண்கிடந்த
தன்மை யழியத் தரள மூலையினாள்
மென்மைசெய் திட்டாள் மிக. (146)

செங்கண் கருங்கோட்(டு) எருமை சிறுகனையால்
அங்கண் கழனிப் பழனம்பாய்ந்(து) - அங்கண்
குவளையம் பூவொடு செங்கயல்மீன் சூடி
தவளையும்மேற் கொண்டு வரும். (147)

இருள்நடந்த(து) அன்ன இருங் கோட்(டு) எருமை
மருள்நடந்த மாப்பழனம் மாந்திப் - பொருள்நடந்த
கற்பேரும் கோட்டால் கனைத்துதன் கன்றுள்ளி
நெற்போர்வு சூடி வரும். (148)

புண்கிடந்த புள்மனுநுன் நீத்தொழுகி வாழினும்
பெண்கிடந்த தன்மை பிறி(து)அரோ - பண்கிடந்து
செய்யாத மாத்திரையே செங்கயல்போல் கண்ணினாள்
நையாது தான்நாணும் ஆறு. (149)

கண்ணுங்கால் என்கொல் கலவையாழ்ப் பாண்மகனே!
எண்ணுங்கால் மற்(று(இன்(று) இவளடுநேர் - எண்ணின்
கடல் வட்டத்(து) இல்லையால் கல் பெயர் சேராள்
அடல் வட்டத்(து) ஆர்உளரேல் ஆம். (150)

சேறாடுங் கிண்கிணிக்கால் செம்பொன்செய் பட்டத்து
நீறாடும் ஆயதிவன் இல்முனா - வேறாய
மங்கையரின் ஆடுமோ மாக்கோல்யாழ்ப் பாண்மகனே!
எங்கையரின் ஆடலாம் இன்று. (151)

முலையாலும் பூணாலும் முன்கண்தாம் சேர்ந்த
இலையாலும் இட்ட குறியை - உலையாது
நீர்சிதைக்கும் வாய்ப்புதல்வன் நிற்கும் உனைமுலைப்பால்
தார்சிதைக்கும் வேண்டா தழூம். (152)

துனிபுலவி ஊடலின் நோக்கு(எ)ன் தொடர்ந்த
கனிகலவி காதலினும் காணேன் -முனிஅகலின்
நாணா நடுங்கும் நளிவய லூரனைக்
காணாஎப் போதுமே கண். (153)

சிறப்புப் பாயிரம்

முனிந்தார் முனி(வு) ஒழியச் செய்யுட்கண் முத்துக்
கனிந்தார் களவியல் கொள்கைக் - கணிந்தார்
இணைமாலை யீடிலா இன்தமிழால் யாத்த
திணைமாலை கைவரத் தேர்ந்து.
Add a comment
நாலடியார்
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவூம் பெயர் பெறும். பல சந்தர்ப்பங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது. வாழ்க்கையின் எளிமையான விடயங்களை உவமானங்களாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது.

நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது.திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும். "ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி', 'சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது', 'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்' என்கிற கூற்றுகள் இதன் பெருமையை திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புவன.

கடவுள் வாழ்த்து

அறத்துப்பால்

 

  1. செல்வம் நிலையாமை

  2. இளமை நிலையாமை

  3. யாக்கை நிலையாமை

  4. அறன் வலியுறுத்தல்

  5. துய்தன்மை

  6. துறவு

  7. சினம் இன்மை

  8. பொறையுடைமை

  9. பிறர்மனை நயவாமை

  10. ஈகை

  11. பழவினை

  12. மெய்ம்மை

  13. தீவினையச்சம்

 

பொருட்பால்



  1. கல்வி

  2. குடிப்பிறப்பு

  3. மேன்மக்கள்

  4. பெரியாரைப் பிழையாமை

  5. நல்லினம் சேர்தல்

  6. பெருமை

  7. தாளாண்மை

  8. சுற்றந்தழால்

  9. நட்பாராய்தல்

  10. நட்பிற் பிழை பொறுத்தல்

  11. கூடா நட்பு

  12. அறிவுடைமை

  13. அறிவின்மை

  14. நன்றியில் செல்வம்

  15. ஈயாமை

  16. இன்மை

  17. மானம்

  18. இரவச்சம்

  19. அவையறிதல்

  20. புல்லறிவாண்மை

  21. பேதைமை

  22. கீழ்மை

  23. கயமை

  24. பன்னெறி

 

காமத்துப்பால்



  1. பொது மகளிர்

  2. கற்புடை மகளிர்

  3. காமநுதலியல்

Add a comment
கார் நாற்பது
பண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக்கூறுகின்ற நூல் கார் நாற்பது. அகப் பொருள்  சார்ந்தது. மதுரையைச் சேர்ந்த கண்ணங் கூத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு  நூல்களுள் இதுவும் ஒன்று.

கார்காலத்தின் இயற்கை நிகழ்வுகளையும், அக்காலத்தில் நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும், தலைவியின் மனநிலையோடு சேர்த்து இந் நூலில் எடுத்துக்கூறப்படுகின்றது.
(பாட வேற்றுமைகள் @ % & குறிகள் கொண்டு காட்டப்பட்டுள்ளது )

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது

பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பொழல் தாழ@
வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானங்
கருவிருந் தாலிக்கும் போழ்து% 1
@ தீம்பொழல் வீழ ஃ பொழுது

இதுவுமது
கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த
நெடுங்காடு நேர்சினை யீனக் கொடுங்குழாய்@
இன்னே வருவர் நமரென் றெழில்வானம்
மின்னு மவர்தூ துரைத்து. 2
@ கொடுங்குழை

பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி
தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது
வரிநிறப் பாதிரி வாட வளிபோழ்ந்
தயிர்மணற் றண்புறவி னாலி - புரள
உருமிடி வான மிழிய வெழுமே@
நெருந லொருத்தி திறத்து. 3
@ இழித்தெழுங் தோங்கும்

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது
ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக்
காடுங் கடுக்கை கவின்பெறப்@ பூத்தன
பாடுவண் டூதும் பருவம் பணைத்தோளி
வாடம பசலை மருந்து. 4
@ கவின்கொள்

இதுவுமது
இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல்
பகழிபோ லுண்கண்ணாய் பொய்யன்மை யீண்டைப்
பவழஞ் சிதறி யவைபோலக் கோபந்
தவழுந் தகைய புறவு. 5

இதுவுமது
தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி
வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல்
கடிதிடி வான முரறு நெடுவிடைச்@
சென்றாரை நீடன்மி னென்று. 6
@நெறியிடை

இதுவுமது
நச்சியார்க் கீதலு நண்ணார்த் தெறுதலுந்
தற்செய்வான் சென்றார்த் தரூஉந் தளரியலாய்
பொச்சாப் பிலாத புகழ்வேள்வித் தீப்போல
எச்சாரு மின்னு மழை. 7

இதுவுமது
மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப்
பெண்ணிய னல்லாய் பிரிந்தார் வால்கூறும்
கண்ணிய லஞ்சனங் தோய்ந்தபோற் காயாவும்
நுண்ணுரும் பூழ்த்த புறவு. 8

உருவினை கண்மலர்போற் பூத்தன கார்க்கோற்
றெரிவனப் புற்றன தோன்றி - வரிவளை
முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும்
இன்சொற் பலவு முரைத்து. 9

இதுவுமது
வானேறு வானத் துரற வயமுரண்
ஆனேற் றொருத்த லதனோ டெதிர்செறுப்பக்
கான்யாற் றொலியிற் கடுமான்றே ரென்றோழி
மேனி தளிர்ப்ப வரும். 10

இதுவுமது
புணர்தரு செல்வந் தருபாக்குச் சென்றார்
வணரொலி யைம்பாலாய் வல்வருதல் கூறும்
அணர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்கோடல்
பூங்குலை யீன்ற புறவு. 11

இதுவுமது
மையெழி லுண்கண் மயிலன்ன சாயலாய்
ஐயந்தீர் காட்சி யவர்வருதல் திண்ணிதாம்@
நெய்யணி குஞ்சரம் போல விருங்கொண்மூ
வைகலு மேரும் வலம். 12
@ திண்ணிதால்

இதுவுமது
ஏந்தெழி லல்குலா யேமார்ந்த@ காதலர்
கூந்தல வனப்பிற் பெயறாழ - வேந்தர்
களிறெறி வாளரவம் போலக்கண் வெளவி
ஒளிறுபு மின்னு மழை. 13
@ ஏமாந்த

இதுவுமது
செல்வந் தரவேண்டிச் சென்றநங் காதலர்
வல்லே வருத றெளிந்தாம் வயங்கிழாய்
முல்லை யிலங்கெயி றீன நறுந்தண்கார்
மெல்ல வினிய நகும். 14

இதுவுமது
திருந்திழாய் காதலர் தீர்குவ ரல்லர்
குருந்தின் குவியிண ருள்ளுறை யாகத்
திருந்தி னிளிவண்டு பாட விருந்தும்பி
இன்குழ லூதும் பொழுது. 15

இதுவுமது
கருங்குயில் கையற மாமயி லாலப்
பெருங்கலி வான முரறும் - பெருந்தோள்
செயலை@ யிளந்தளி ரன்னநின் மேனிப்
பசலை பழங்கூண் கொள். 16
@ அசோகினிளந்தளிர்

இதுவுமது
அறைக்க லிறுவரைமேற் பாம்பு சவட்டிப்
பறைக்குர லேறோடு பெளவம் பருகி
உறைத்திருள் கூர்ந்தன்று வானம் பிறைத்தகை
கொண்டன்று பேதை நுதல். 17

இதுவுமது
கல்பயில் கானங் கடந்தார் வரவாங்கே
நல்லிசை யேறொடு வான நடுநிற்பச்
செல்வர் மனம்போற் கவினீன்ற நல்கூர்ந்தார்
மேனிபோற் புல்லென்ற காடு. 18

வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது
நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச்
செங்கான் மராஅந் தகைந்தன - பைங்கோற்
றொடிபொலி முன்கையாள் தோடுணையா வேண்டி
நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு. 19

இதுவுமது
வீறுசால் வேந்தன் வினையு முடிந்தன
ஆறும் பதமினிய வாயின - |ஏறோ
டருமணி நாக மனுங்கச் செருமன்னர்
சேனைபோற் செல்லு மழை. 20

இதுவுமது
பொறிமாண் புனைதிண்டேர் போந்த வழியே
சிறுமுல்லைப் போதெல்லாஞ் செவ்வி - நறுநுதற்
செல்வ மழைந்தடங்கட் சின்மொழிப் பேதைவாய்
முள்ளெயி றேய்ப்ப வடிந்து. 21

இதுவுமது
இளையரு மீர்ங்கட் டயர வுளையணிந்து
புல்லுண் கலிமாவும் பூட்டிய - நல்லார்
இளநலம் போலக் கவினி வளமுடையார்
ஆக்கம்போற் பூத்தன காடு. 22

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது
கண்டிரண் முத்தங் கடுப்பப் புறவெல்லாந்
தண்டுளி யாலி புரளப் புயல்கான்று
கொண்டெழில் வானமுங் கொண்டன் றெவன் கொலோ
ஒண்டொடி யூடுநிலை. 23

வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது
எல்லா வினையுங் கிடப்ப வெழுநெஞ்சே
கல்லோங்கு கானங் களிற்றின் மதநாறும்
பல்லிருங் கூந்தல் பணிநோனாள் கார்வானம்
மெல்லவுந்@ தோன்றும்% பெயல். 24
@ எல்லியும் ஃ செயல்

பருவங்கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி
தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது
கருங்கால் வரகின் பொரிப்போ லரும்புவிழ்ந்
தீர்ந்தண் புறவிற் றெறுழிவீ மலர்ந்தன
சேர்ந்தன செய்குறி வாரா ரவரென்று
கூர்ந்த பசலை யவட்கு. 25

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது
நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட
தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி@
தூதொடு வந்த மழை. 26
@ தோன்றிசின் மென்மொழி

ஊடுதலாற் பசலைமிகும் எனத் தோழி தலைமகட்குக் கூற
வற்புறுத்தது
முருகியம்போல் வான முழங்கி யிரங்கக்
குருகிலை பூத்தன கானம் - பிரிவெண்ணி
உள்ளா தகன்றாரென் றூடியாம் பாராட்டப்@
பள்ளியுட் பாயும் பசப்பு. 27
@ பாராட்டில்

வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது
இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப்@
பொன்செய் குழையிற் றுணர் தூங்கத் தண்பதஞ்
செவ்வி யுடைய சுரநெஞ்சே காதலியூர்
கவ்வை யழுங்கச் செலற்கு. 28
@ குமிழிணைப்பூ & குமிழிணர்ப்பூ

இதுவுமது
பொங்கரு ஞாங்கர் மலர்ந்தன தங்காத்
தகைவண்டு பாண்முரலுங் கானம் - பகைகொண்ட
லெவ்வெத் திசைகளும் வந்தன்று சேறுநாஞ்
செவ்வி யுடைய கரம். 29

இதுவுமது
வரைமல்க வானஞ் சிறப்ப வுறைபோழ்ந்
திருநிலந் தீம்பெய றாழ - விரைநாற@
ஊதை யுளரு நறுந்தண்கா பேதை
பெருமட நம்மாட் டுரைத்து. 30
@ திரைநாற

வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது
கார்ச்சே ணிகந்த கரைமருங்கி னீர்ச்சேர்ந்
தெருமை யெழிலே றெறிபவர் சூடிச்
செருமிகு மள்ளரிற் செம்மாக்குஞ் செவ்வி
திருநுதற் கியாஞ்செய் குறி. 31

இதுவுமது
கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே
கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போற்
பாடஅ மகிழ்வண்டு பாண்முரலுங் கானம்
பிடாஅப் பெருந்தகை நற்கு. 32

இதுவுமது
கடனீர் முகந்த கமஞ்சூ லெழிலி
குடமலை யாகத்துக் கொள்ளப் பிறைக்கும்@
இடமென வாங்கே குறிசெய்தேம் பேதை
மடமொழி யெவ்வங் கெட. 33
@ கொள்ளப் பிறக்கும்

பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித்
தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது
விரிதிரை வெள்ளம் வெறுப்பப் பருகிப்
பெருவிறல் வானம் பெருவரை சேருங்
கருவணி காலங் குறித்தார் திருவணித்த
ஒண்ணுதல் மாதர் திறத்து. 34

இதுவுமது
சென்றநங்@ காதலர் சேணிகந்தா ரென்றெண்ணி
ஒன்றிய நோயோ டிடும்பை பலகூர
வென்றி முரசி னிரங்கி யெழில்வானம்
நின்று மிரங்கு மிவட்கு. 35

வினைமுற்றி மீளுந் தலைமகள் பாகற்குச் சொல்லியது
சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்ப
ஈர்ந்தண் தளவந் தகைந்தன - சீர்த்தக்க
செல்வ மழைமதர்க்கட் சின்மொழிப் பேதையூர்
நல்விருந் தாக நமக்கு. 36

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது
கருங்கடல் மேய்ந்த கமஞ்சூ லெழிலி
இருங்க லிறுவரை யேறி யியுர்க்கும்
பெரும்பதக் காலையும் வாரார்கொல் வேந்தன்
அருந்தொழில் வாய்த்த நமர். 37

தலைவர் பொய்த்தாரெனக் கூறித் தோழி தலைவியை
ஆற்றுவித்தது
புகர்முகம் பூழிப்@ புரள வுயர்நிலைய%
வெஞ்சின் வேழம் பிடியோ டிசைந்தாடுந்&
தண்பதக் காலையும் வாரா ரெவன்கொலோ
ஒண்டொடி யூடு நிலை. 38
@ பூமி புரள ஃ உயர்நிலை & இணைதாழ

இதுவுமது
அலவன்க ணேய்ப்ப வரும்பீன் றவிழ்ந்த
கருங்குர@ னொச்சிப் பசுந்தழை சூடி
இரும்புன மேர்க்கடி கொண்டார் பெருங்கெளவை
ஆகின்று நம்மூ ரவர்க்கு. 39
@ கருங்கதிர்

பருவம் வந்தமையால் தலைவர் வருதல் ஒருதலையெனக் கூறித்
தோழி தலைமகளை ஆற்றுவித்தது
வந்தன செய்குறி வாரா ரவரென்று
நொந்த வொருத்திக்கு நோய்தீர் மருந்தாகி
இந்தின் கருவண்ணங்@ கொண்டன் றெழில்வானம்
நந்துமென் பேதை நுதல். 40
@ களிவண்ணம் கொண்டது

Add a comment

ஆசாரக்கோவை

 

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.

பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. இவ்வொழுக்கங்களின் பட்டியல்:

 

  1. ஆசார வித்து
  2. ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
  3. தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்
  4. முந்தையோர் கண்ட நெறி
  5. எச்சிலுடன் தீண்டத் தகாதவை
  6. எச்சிலுடன் காணக் கூடாதவை
  7. எச்சில்கள்
  8. எச்சிலுடன் செய்யக் கூடாதவை
  9. காலையில் கடவுளை வணங்குக
  10. நீராட வேண்டிய சமயங்கள்
  11. பழைமையோர் கண்ட முறைமை
  12. செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
  13. செய்யத் தகாதவை
  14. நீராடும் முறை
  15. உடலைப்போல் போற்றத் தக்கவை
  16. யாவரும் கூறிய நெறி
  17. நல்லறிவாளர் செயல்
  18. உணவு உண்ணும் முறைமை
  19. கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை
  20. உண்ணும் விதம்
  21. ஒழுக்கம் பிழையாதவர் செய்வது
  22. பிற திசையும் நல்ல
  23. உண்ணக்கூடாத முறைகள்
  24. பெரியோருடன் இருந்து உண்ணும் முறை
  25. கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை
  26. உண்ணும் கலங்களைக் கையாளும் முறை
  27. உண்டபின் செய்ய வேண்டியவை
  28. நீர் குடிக்கும் முறை
  29. மாலையில் செய்யக் கூடியவை
  30. உறங்கும் முறை
  31. இடையில் செல்லாமை முதலியன
  32. மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள்
  33. மலம் சிறுநீர் கழிக்கும் முறை
  34. மலம், சிறுநீர் கழிக்கும் திசை
  35. வாய் அலம்பாத இடங்கள்
  36. ஒழுக்க மற்றவை
  37. நரகத்துக்குச் செலுத்துவன
  38. எண்ணக்கூடாதவை
  39. தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க
  40. சான்றோர் இயல்பு
  41. சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்
  42. மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்
  43. உடன் உறைதலுக்கு ஆகாத காலம்
  44. நாழி முதலியவற்றை வைக்கும் முறை
  45. பந்தலில் வைக்கத் தகாதவை
  46. வீட்டைப் பேணும் முறைமை
  47. நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்
  48. அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்
  49. நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்
  50. கேள்வியுடையவர் செயல்
  51. தம் உடல் ஒளி விரும்புவார் செய்யத் தக்கவை
  52. தளராத உள்ளத்தவர் செயல்
  53. ஒழுக்கமுடையவர் செய்யாதவை
  54. விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு
  55. அறிஞர் விரும்பாத இடங்கள்
  56. தவிர்வன சில
  57. நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை
  58. ஒருவர் புறப்படும் போது செய்யத் தகாதவை
  59. சில தீய ஒழுக்கங்கள்
  60. சான்றோருடன் செல்லும் போது செய்யத் தக்கவை
  61. நூல்முறை உணர்ந்தவர் துணிவு
  62. சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்
  63. கற்றவர் கண்ட நெறி
  64. வாழக்கடவர் எனப்படுவர்
  65. தனித்திருக்கக் கூடாதவர்
  66. மன்னருடன் பழகும் முறை
  67. குற்றம் ஆவன
  68. நல்ல நெறி
  69. மன்னன் செய்கையில் வெறுப்படையாமை முதலியன
  70. மன்னன் முன் செய்யத் தகாதவை
  71. மன்னன் முன் சொல்லக் கூடாதவை
  72. வணங்கக்கூடாத இடங்கள்
  73. மன்னர் முன் செய்யத் தகாதவை
  74. ஆசிரியரிடம் நடக்கும் முறைமை
  75. சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை
  76. சொல்லும் முறைமை
  77. நல்ல குலப்பெண்டிர் இயல்பு
  78. மன்னர் அவையில் செய்யக் கூடாதவை
  79. பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்
  80. சான்றோர் பெயர் முதலியவை கூறாமை
  81. ஆன்றோர் செய்யாதவை
  82. மனைவியின் உள்ளம் மாறுபடுதல்
  83. கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை
  84. பழகியவை என இகழத் தகாதவை
  85. செல்வம் கெடும் வழி
  86. பெரியவரை உண்டது யாது என வினவக் கூடாது
  87. கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை
  88. பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்
  89. கிடைக்காதவற்றை விரும்பாமை
  90. தலையில் சூடிய மோத்தல்
  91. பழியாவன
  92. அந்தணரின் சொல்லைக் கேட்க
  93. சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை
  94. ஐயம் இல்லாத அறிவினர் செய்கை
  95. பொன்னைப் போல் காக்கத் தக்கவை
  96. எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்
  97. சான்றோர் முன் சொல்லும் முறை
  98. புகக் கூடாத இடங்கள்
  99. அறிவினர் செய்யாதவை
  100. ஒழுக்கத்தினின்று விலகியவர்
Add a comment
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது.
  1. காப்பு
  2. நூல்
  3. ஒழுக்கமுடையார் தொழில்கள்
  4. அறியாமையால் வரும் கேடு
  5. சாவதற்குரியவன் தொழில்கள்
  6. அருந்துன்பம் காட்டும் நெறி
  7. ஆண்மைச் செல்வங்கள்
  8. ஊமை கண்ட கனா
  9. பேசக்கூடாத இயல்பு உடையவை
  10. மூடர் விரும்புபவை
  11. நன்மை அளிக்காதவை
  12. ஊரவர் துன்பப்படும் குற்றம் உடையவை
  13. நன்மை அளிப்பவை
  14. பெறற்கு அரியார்
  15. அறிவுடையார் அடையாதவை
  16. நட்புக் கொள்ளத் தகாதவர்
  17. இறவாத உடம்பை அடைந்தவர்
  18. கல்வித் தோணியைக் கைவிட்டவர்
  19. கள்வர் போல் அஞ்ச வேண்டியவர்
  20. பழி முதலியவற்றினின்று நீங்காதவர்
  21. எல்லார்க்கும் இன்னாதன
  22. நல்லவரின் கொள்கைகள்
  23. வீடு அடையலாம்
  24. பற்றறா தோடும் அவாத்தேரும் - தெற்றெனப்
  25. அறப்பயனைக் கட்டும் கயிறு
  26. நரகத்தைப் போன்றவை
  27. அறிஞர் கொள்ளாத உணவுகள்
  28. உயர்ந்தவர் எனப்படுபவர்
  29. தூயவரின் செயல்கள்
  30. உமி குத்திக் கை வருந்துவார்
  31. கற்றவர் கருத்து
  32. நிலைத்த புகழை உடையவர்
  33. தலை சிறந்தவை
  34. கற்றவர் கடமை
  35. மன்னன் கைவிடலாகாதவை
  36. உலகம் எனப்படுவார்
  37. முக்தியுலகை அடைபவர்
  38. நூல்களின் உண்மை உணராதவர்
  39. வாய்மையாளர் வழக்கம்
  40. செல்வம் உடைக்கும் படை
  41. அறம் அற்றவரின் செயல்கள்
  42. தொல்லறிவாளர் தொழில்கள்
  43. அறங்களுள் சிறந்தவை
  44. வேளாண்குடிக்கு அழகாவன
  45. வாயின் அடங்குதல்
  46. அறிவுடையார்க்கு நோய் ஆவன
  47. நரகத்தில் விழுபவர்
  48. அறிவுடையார் குறுகாதவை
  49. காக்கப்பட வ‡ண்டியவை
  50. மெய்ப்பொருள் உணர்ந்தவர்
  51. எவருக்கும் பயனற்றவர்
  52. மழையைக் குறைப்பவர்
  53. ஆராய்ந்து சொல்லப்பட வேண்டியவை
  54. ஆராயுமிடத்தவர் உள்ளவை
  55. தெரியாத பொருள்கள்
  56. அறிவற்ற செயல்கள்
  57. ஒற்றரைப் போன்றவர் எனக் கூறப்படுவர்
  58. உயர்ந்த நெறியைத் தூர்க்காதவை
  59. கொட்டி அளந்தமை
  60. இளவரசனின் செயல்கள்
  61. உள்ளவை போல் கெடுபவை
  62. துன்பப் பிறப்புகள்
  63. அமைச்சர்களின் கோள்
  64. மக்களை இழப்பவர்
  65. நன்மையைத் தாராதவை
  66. கற்புடையாளின் கடமைகள்
  67. மிக்க வருத்தத்தைத் தருவன
  68. சிறப்பில்லாதவை
  69. செய்யக்கூடிய திண்மை
  70. அறவுணர்வு உடையாரிடத்து உள்ளவை
  71. கிடைத்தற்கு அரியவை
  72. செல்வம் உடையார் எனப்படுவர்
  73. காணக் கூடாதவை
  74. அஞ்சுபவை
  75. வாழ்வார் போல் தாழ்பவர்
  76. அறத்தைக் கடைப்பிடிக்காதவர் இயல்புகள்
  77. மரம்போல் அசைவற்றவர்
  78. பாதுகாத்தற்கு அரியவர்
  79. குடிப்பிறப்பில் குற்றம் அற்றவர் செயல்
  80. நற்றவமுடையார் செயல்கள்
  81. நெஞ்சுக்கு ஒரு நோய்
  82. புதரில் விதைத்த விதை
  83. ஆசைக் கடலுக்குள் மூழ்குபவர்
  84. நல்லவர் வழிகள்
  85. நல்வழியைக் கெடுக்காதவை
  86. வறுமையால் பற்றப்பட்டார்
  87. ஒற்றரின் இயல்புகள்
  88. குற்றங்களை உண்டாக்கும் பகைகள்
  89. மூடரின் செயல்கள்
  90. மனவுறுதியை நிலைகுலையச் செய்வன
  91. பிறந்தும் பிறவாதவர்
  92. நரக உலகைச் சேராமைக்குரிய வழிகள்
  93. உடல் பற்றுடைய மூடர் செய்கை
  94. பிறப்பின் பயனை அடையாதவர்
  95. உயிர்க்கு அறியாமையை அளிப்பவை
  96. நல்லொழுக்கம் இல்லாதவர்
  97. நல்வினையை நீக்கும் ஆயுதங்கள்
  98. பெய்யெனப் பெய்யும் மழை
  99. பாவச் செயல்கள்
  100. மும்மாரிக்கு வித்து
  101. நல்லுலகம் சேராதவர்
  102. மன்னர்க்கு உறுப்புகள்
Add a comment

உட்பிரிவுகள்

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework