புன் தலை மந்தி கல்லா வன் பறழ்
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது
எரி அகைந்தன்ன வீ ததை இணர
வேங்கைஅம் படு சினைப் பொருந்தி கைய
தேம் பெய் தீம் பால் வெளவலின் கொடிச்சி
எழுது எழில் சிதைய அழுத கண்ணே
தேர் வண் சோழர் குடந்தைவாயில்
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயல் உறு நீலம் போன்றன விரலே
பாஅய் அவ் வயிறு அலைத்தலின் ஆனாது
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில்
ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த
காந்தள்அம் கொழு முகை போன்றன சிவந்தே
தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை
கூறியது காப்புக் கைம்மிக்க காலத்துத்
தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்

Add a comment

அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம் எனப்
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்
கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை
யாங்கனம் தாங்குவென் மற்றே ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க
தேர் வீசு இருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள்
பருவ வரவின்கண் சொல்லியது

Add a comment

நெய்யும் குய்யும் ஆடி மெய்யடு
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும்
திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே
வால் இழை மகளிர் சேரித் தோன்றும்
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால்
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல்
கொண்டு செல் பாண நின் தண் துறை ஊரனை
பாடு மனைப் பாடல் கூடாது நீடு நிலைப்
புரவியும் பூண் நிலை முனிகுவ
விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழியே
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது

Add a comment

பைம் புறப் புறவின் செங் காற் சேவல்
களரி ஓங்கிய கவை முடக் கள்ளி
முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட
உயவு நடைப் பேடை உணீஇய மன்னர்
முனை கவர் முது பாழ் உகு நெற் பெறூஉம்
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த
நல் நாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப்
பரந்தன நடக்க யாம் கண்டனம் மாதோ
காண் இனி வாழி என் நெஞ்சே நாண் விட்டு
அருந் துயர் உழந்த காலை
மருந்து எனப்படூஉம் மடவோளையே
உடன் போகாநின்றான் மலிந்து
தன் நெஞ்சிற்குச் சொல்லியது

Add a comment

கானல் மாலைக் கழி நீர் மல்க
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த
ஆனாது அலைக்கும் கடலே மீன் அருந்தி
புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்
துறந்தோர் தேஎத்து இருந்து நனி வருந்தி
ஆர் உயிர் அழிவதுஆயினும் நேரிழை
கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்பு நீர்த்
தண்ணம் துறைவன் நாண
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே
ஒருவழித் தணந்த காலத்துப் பொழுதுபட ஆற்றாளாகி
நின்ற தலைமகளைத் தோழி ஆற்றுவிக்கல்லாள்
ஆயினாட்குத் தலைமகள் சொல்லியது

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework