சுடர் சினம் தணிந்து குன்றம் சேர
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக
எல்லை பைபயக் கழிப்பி முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின் நன்றும்
அறியேன் வாழி தோழி அறியேன்
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன என்
நிறை அடு காமம் நீந்துமாறே
பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து
ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது

Add a comment

காயாங் குன்றத்துக் கொன்றை போல
மா மலை விடர் அகம் விளங்க மின்னி
மாயோள் இருந்த தேஎம் நோக்கி
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்
பெயல் தொடங்கினவே பெய்யா வானம்
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி
அழல் தொடங்கினளே ஆயிழை அதன் எதிர்
குழல் தொடங்கினரே கோவலர்
தழங்கு குரல் உருமின் கங்குலானே
வினை முற்றி மறுத்தராநின்றான் பாகற்குச் சொல்லியது

Add a comment

முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின்
ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்
களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப
உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்
முற்றையும் உடையமோ மற்றே பிற்றை
வீழ் மா மணிய புனை நெடுங் கூந்தல்
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்துஇழை அரிவைத் தேமொழி நிலையே
வினை முற்றி மீள்வான் இடைச்
சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது

Add a comment

வாராய் பாண நகுகம் நேரிழை
கடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி
புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து அவ் வரித்
திதலை அல்குல் முது பெண்டு ஆகி
துஞ்சுதியோ மெல் அம் சில் ஓதி என
பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி
உள்ளினென் உறையும் எற் கண்டு மெல்ல
முகை நாண் முறுவல் தோற்றி
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே
ஊடல் நீட ஆற்றானாய் நின்றான் பாணர்க்குச் சொல்லியது
முன் நிகழ்ந்ததனைப் பாணர்க்குச் சொல்லியதூஉம் ஆம்

Add a comment

அழிதக்கன்றே தோழி கழி சேர்பு
கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம்
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு
அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு
அன்ன வெண் மணற்று அகவயின் வேட்ட
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி
அன்னை தந்த அலங்கல் வான் கோடு
உலைந்தாங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு
இனையல் என்னும் என்ப மனை இருந்து
இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர்
திண் திமில் விளக்கம் எண்ணும்
கண்டல் வேலிக் கழி நல் ஊரே
மேல் இற்செறிப்பான் அறிந்து ஆற்றாளாகி நின்ற
தலைமகள் ஆற்ற வேண்டி உலகியல் மேல் வைத்துச்
சிறைப்புறமாகச் செறியார் எனச் சொல்லியது

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework