இறைவன் உயிர்க்குலதிற்குக் கொடுத்த ஒரே ஒரு வரம் அன்புதான். அன்பே உயிர்க்குலத்தின் வளர்ச்சிக்கு ஊற்று; அன்பே உயிர்க்குலத்தின் பாதுகாப்புக் கவசம், மானுடத்தில் உயிரியல் அடிப்பண்பு விரிந்து, வளர்ந்து வாழ்வது விரிவன எல்லாம் வாழும். சுருங்குவன எல்லாம் அழியும்.

தன்னலம் ஆக்கம் போலத் தோன்றும். தன்னலம் இன்பம் போலத் தோன்றும். ஆனால் இதனிலும் துன்பம் மற்றொன்று இல்லை. ஆதலால் அன்புடையவராக விளங்க, காண்பவர்கள் அனைவரையும் நேசித்த பிறகு கடைசியாக நம்மை நேசித்துக் கொள்ள வேண்டும். அதுவும் வாழ்தலுக்காகவேயாம். அன்பு இல்லையேல் பிறதுறைகளில் பெற்றவை அதாவது அறிவு யோகம் முதலியன கூட பயனற்றுப் போகின்றன.

அன்பு இயற்கையாக அமைந்த ஒரு நியதி. நல் வாழ்க்கையின் வரிச்சட்டம், தாவரங்கள், விலங்குகள் இந்த அன்பு என்ற அடிப்படைச் சட்டதினின்று விலக இயலாமை ஒரு காரணமாகவும் இருக்கலாம். ஆனால் மானுடசாதி அன்பு என்ற வரிச்சட்டதினின்று விலக இயலாமை ஒரு காரணமாகவும் இருக்கலாம். ஆனால் மானுடசாதி அன்பு என்ற வரிச்சட்டத்திலிருந்து விலகிச் செல்கிறது. இது முற்றிலும் தவறு. பகுத்தறிவு நன்மையை வளர்க்கவே; தீமையை அகற்றவேயாம். மேலும் வாழ்க்கைப் போக்கை வளர்ப்பதற்கே பகுத்தறிவு. அணு ஆயுதங்களால் உலகை அழிப்பது எங்கனம் பகுத்தறிவு ஆகும்?

இன்று இயற்கை உலகம் விரிந்து கிடக்கிறது. மனிதன் படைத்துள்ள கருவிகள், விரிந்த உலகை இணைக்கின்றன. ஆனால் மனிதன் சுருங்குகிறான். தன் வீடு, தன் நாடு, தன் மொழி, தன் மதம் என்று சுருங்கி விடுகின்றான். அதன் காரணமாகக் கெட்ட போரிடும் உலகமே தோன்றியுள்ளது. கெட்ட போரிடும் உலகத்தை மாற்றி அமைத்திடுதல் வேண்டும்.

வீட்டிற்கும் வீட்டிற்கும் இடையே வைத்த சுவர்களை இடித்துவிட வேண்டும். வீதிகளுக்கு இடையே உள்ள திரைகளை அகற்ற வேண்டும், நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையே உள்ள எல்லைகளை அகற்றிவிட வேண்டும். இவர் தேவர் அவர் தேவர் என்று சண்டை போடும் உலகத்தை அறவே தவிர்த்திடுதல் வேண்டும். ஆன்ம நேய ஒருமைப் பாட்டைக் காணல் வேண்டும். ஒரு குலமாக வேண்டும். இதற்கு அன்பு செய்தலே வழி! ஆதலால், வையத்தீர் அன்பு செய்வீர்!

கதிரொளி பரவுகிறது. காய்கிற கதிரொளியாக மாறுகிறது. குளிர்க்காய்தலுக்காக வெயிலில் படுத்திருந்த புழு, காய்கிற கதிரோளியால் சுடப்பட்டு இறந்து போகிறது; அழிந்து போகிறது. வெயிலின் வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் புழுக்களுக்கு இல்லை. ஏன் எலும்பு இல்லாததால்! மனிதன், எலும்பு உள்ள மனிதன்! அதிலும் முதுகெலும்பு உள்ள மனிதன். வலிமையான படைப்பு. ஆயினும் ஏன்? அன்பில்லாத மனிதன் அழிவான்! அறக்கடவுள் அன்பில்லாத மனிதனைச் சுடும். வாழ்வு பாழாகும்!

"என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்"

இதனால் பெறப்படுவது, மானுடத்திற்கு உண்மையான வலிமை அன்பினால் மட்டுமே என்பது. அன்பில்லையேல் மானுடம் வாழ்தல் அரிது. ஆதலால் அன்பு செய்வீர்! அன்பே இந்த உலகத்தினை இன்ப உலகமாக்க உள்ள ஒரே வழி!

Add a comment

மனிதன் விரிந்த பரந்த உலகத்தோடு பழகும்பொழுது விரிவு அடைகிறான். சுருங்குவன எல்லாம் அழியும். விரிவன எல்லாம் வளரும். சுருங்குவன எல்லாம் ஆவது போல் காட்டி அழியும். விரிவன எல்லாம் அழிவது போல் காட்டி சால ஆக்கம் தரும்.

மனிதன் மானுடத்தின் பரப்பெல்லை முழுதும் உறவு கொண்டு பழகுதல் நல்லது; விரும்பத்தக்கது. இத்தகு விரிந்த பரந்த உறவுக்கு – நட்பாடலுக்கு நாட்டெல்லைகள், அரசியல் எல்லைகள் தடையாக இருத்தல் கூடாது. மொழிகளும், சமய நெறிகளும் துணையாகவே அமைவன; மொழியின் பெயரால், சமய நெறிகளின் பெயரால், மனிதன் சுருங்குவது அறம் அல்ல. அதுமட்டுமல்ல, மொழியின் குறிக்கோளுக்கும் மாறுபட்டது; சமய நெறிகளின் நோக்கத்திற்கும் முரண்பட்டது.

இத்தகு விரிந்த பரந்த உலகத் தொடர்பை, கொள்வதற்கு விஞ்ஞான வளர்ச்சி மூலம் மனிதன் ஆர்வத்துடன் முயன்றிருக்கிறான். தொன்மைக் காலத்தில் யாத்திரை என்ற பெயரில் இந்த முயற்சி அமைந்திருந்தது. ஏசுவின் யாத்திரை, முகம்மது நபியவர்களின் யாத்திரை, ஆழ்வார்கள், நாயன்மார்களின் யாத்திரை, காந்தியடிகளின் யாத்திரை ஆகியன எடுத்துக்காட்டுகள். மிகப் பழங்காலத்தில் நாடு விட்டு நாடு யாத்திரை – பயணம் சென்றால் உணவு முதலியன கிடைப்பதற்கு வழியில்லை. திருக்கோயில் நாகரிகம் தலையெடுத்த பிறகு இப்படிப் பயணத்தில் வருவோருக்கு உணவளிக்கும் பொறுப்பை திருக்கோயில்கள் ஏற்றுக்கொண்டன.

இப்பொழுது எங்கும் உணவுச் சாலைகள் வணிகத்தொழில் அடிப்படையில் அமைந்துவிட்டன. ஆனால் விழுமிய பயனைத் தரவில்லை. மிகப்பழைய காலத்தில் வீடுகளில்தான், இத்தகு பயணிகளுக்கு உணவு வழங்கப் பெற்றது. வீடுகளில் உணவு வழங்கப் பெறுதலே சிறப்பு. இங்ஙனம் இல்லத்திற்கு வருபவர்கள் ‘விருந்தினர்’ என்றழைக்கப் பெற்றனர்.

இன்றோ உறவினர்களும் சுற்றத்தினரும் விருந்தினர் என்று அழைக்கப்படுகின்றனர். இது முறையன்று. முன்பின் தெரியாத அறிமுகம் இல்லாத அயலாரே விருந்தினர் எனப்படுவர். இவர்கள் இல்லங்களில் வந்து தங்கிப் போவதினாலே மொழி – கலை வழிபட்ட உறவுகளும் வளரும். தொழில், பொருள் வழிபட்ட உறவுகளும்கூட வளரும். இத்தகு பயணங்களைத்தான் இன்றைய அரசு, சுற்றுலாத்துறை என்று ஒரு துறை அமைத்து வளர்த்து வருகிறது. இத்துறை பல நாடுகளுக்கு அதிகப் பொருள் ஈட்டத்தையும் தருகிறது.

மனையறம் பேசும் திருவள்ளுவர் விருந்தோம்பல் என்ற நெறியையும் எடுத்துக் கூறுகிறார். விருந்தோம்பல் அதிகாரம் முழுமையும் படித்தால் விருந்தோம்பலினும் சிறந்த அறம் இல்லை என்று தெரிய வரும். அதுமட்டுமல்ல, தமிழகத்தின் இல்லங்களில் நாள்தோறும் விருந்தினர் வந்த வண்ணம் இருந்தனர் என்று தெரிய வருகிறது. இந்த விருந்தோம்பும் பண்பைத் தமிழர்கள் பேரறமாகப் போற்றி வளர்த்ததினாலேயே தமிழ்ப் பண்பு உலகந் தழீஇய பண்பாக வளர்ந்து வந்துள்ளது. "யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்ற உயர் நெறி முகிழ்ப்பதற்கு விருந்தோம்பும் பண்பே காரணமாக அமைந்திருக்கும் என்று கருதவேண்டியிருக்கிறது.

விருந்தோம்பல் பண்பு சிறந்து விளங்கும் வீட்டுக்கும் நாட்டுக்கும் பொருள் புழக்கம் அதிகமாவதற்குரிய வாயில்கள் மிகுதி. ஒருநாடு விருந்தோம்பும் பண்பில் சிறந்து விளங்கினால் அந்த நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்பர்; முதலீடு செய்வர்.

அதுபோல ஒரு வீட்டினர் விருந்தோம்பும் பண்பில் சிறந்து விளங்கினால் அந்த வீட்டினருடைய வளர்ச்சியில் விருந்தினர் பங்கேற்பர். ஒரு குடும்பத்தினர் விருந்தோம்பலில் சிறந்து விளங்குகின்றனர். அவர்கள் வயலில் விதை பாவவில்லை. விதியில்லை அல்லது காலம் கிடைக்கவில்லை. வந்த விருந்தினர்கள் வாளாவிருக்க மாட்டார்கள். விருந்தினர்களும், அந்தக் குடும்பச் செல்வத்தின் பயனை நுகர்ந்தவர்களும் வாளாவிருக்க மாட்டார்கள். தாமே வலியச்சென்று அக்குடும்பத்தினரின் வயலில் விதையை விதைப்பார்கள். இஃது அறஞ்சார்ந்த வாழ்வியல் முறை. இதனைத் திருக்குறள்

"வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்"

என்று கூறும், ஆதலால் எல்லைகளைக் கடந்து பழகுக. நட்பினைக் கொள்க; உறவாகுக; உவந்து உண்பித்துப் பழகுக. இதுவே மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை.

Add a comment

இன்பம் மனிதனால் உருவாக்கப் பெற்று அவனே துய்த்து மகிழும் ஓர் உணர்வு. இந்த இன்பம் என்பது அணுகும் வகையால் மனிதனுக்கு மனிதன் மாறும். ஒரு மனிதனுடைய வாழ்நாள்களிலே கூட பருவத்திற்குப் பருவம் மாறும். ஒரோர் வழி சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் மாறக்கூடும். அப்படியானால் இன்பம் நிலையான ஒன்றில்லையா? இன்பம் நிலையான ஒன்றுதான். எங்கும் எப்பொழுதும் எல்லோருக்கும் இன்பமாக இருக்கின்ற ஒன்றே இன்பம். மற்றவை எல்லாம் துன்பம்.

ஆனால் மானுடம் தற்சார்பிலே பழகிப் பழகி, துன்பந்தழீஇய இன்பத்தையே இன்பம் என்று கருதுகிறது. இன்பம் போலக் காட்டித் துன்பம் தரும் இவற்றிற்காகவே மானிடர் போராடுகின்றனர். இன்பம் சமூக நலத்தில் உருவாவது; தோழமையில் வளர்வது; காதலில் நிலைப்பது. எல்லாவற்றிற்கும் அடிப்படை சமூக நலம். நம் ஒவ்வொருடைய உள்ள நலமும் உடல் நலமும் கூட சமூக நலத்தினையே அடிப்படையாகக் கொள்வது.

ஆன்மாவின் உறுப்புகளான மனம், புத்தி, சித்தம் அகத்துறுப்புக்கள், பிரிக்கப்படாத உறுப்புகள், அகத்து உறுப்புக்களே. இவைகளே அறியும் கருவிகள். அறிவுக் கருவிகளுமாம். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன உடலுக்கு வாய்த்த பொறிகள். இப்பொறிகள் செயலுக்குரியன. அறிவும் செயலும் நிகழும் களம் சமூகம்தானே! ஆதலால் சமூகத்தையும் தனது வாழ்நிலையின் உறுப்பாக எண்ண வேண்டும். உறுப்பாக மட்டுமல்ல. சமுகநலனே இன்பத்தின் ஊற்றுக்களன் என்று கருதி சமூக நலனைப் பேணி வளர்க்க வேண்டும். சமூகத்துடன் பிணக்கிலாத நிலையைப் பராமரிக்க வேண்டும். நெஞ்சு நெகிழத்தக்க உறவு நிலைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சமூக நலன் எப்போது கெடுகிறது? ஏன் கெடுகிறது? அன்பின்மையின் காரணமாக சமூகத்திலிருந்து தனிமனிதன் அந்நியப் படுத்தப்படுகிறான். அந்நியமான நிலை நன்றன்று, அன்பு அடக்கதினைத்தரும். வளர்ந்த அறிவு அடக்கத்தைத் தரும். அன்பின்மையும் அறிவின்மையும் தனி மனிதனைத் தற்சார்புடையவனாக்கி அகந்தைக்காரனாக வளர்த்து விடுகிறது. அறியாமையின் முகட்டில் வாழ்பவர்கள் அகந்தையே வடிவமாக வாழ்வர். இவர்கள் யார் மாட்டும் அடக்கத்தைப் பேணார். பணிவு என்பதே இவர்கள் வாழ்க்கை அகராதியில் இல்லை. ஆர்ப்பரவம் செய்வர். எல்லோரையும் இழித்தும் பழித்தும் பேசுவர். இத்தகு வாழ்க்கைப் போக்கு சமூக நலனைக்கெடுக்கிறது. உள்ளமும் கெட்டு உடலும் கெட்டு நாட்டின் நிலை இரங்கத் தக்கதாகிறது.

நல்வாழ்க்கைக்கு அடக்கம் தேவை, பணிவு தேவை. யார் மாட்டும் அடக்கம் தேவை, பணிவு தேவை. அடக்கமும் பணிவும் இருந்தால் இனிய சொற்களே பிறக்கும். ஒருவர் வாழ்க்கையில் அவர் வழங்கும் இனிய சொற்கள் தரும் பயன் அளப்பரியது. இனிய சொற்களால் பாராட்டுவதின் மூலமும் எண்ணற்ற காரியங்களைச் சாதிக்கலாம். மானுடத்தின் இயற்கையமைப்பு இன்சொல் வழங்குவதேயாம். ஆனால் முயன்று குருதியைச் சூடேற்றிக் கொண்டு மூச்சுக் காற்றினை நிறையச் செலவழித்துக் கடுஞ்ச்சொற்களை பிறருக்கும் தனக்கும் இன்னாதான விளைவிக்கும் சொற்களைக் கூறுகின்றனர்.

இனிமை பயவாத இன்னாத கடுஞ் சொற்களைக் கூறின் இரத்தக் கொதிப்பு நோய் வருகிறது. மூச்சுக் காற்று அதிகம் செலவாவதால் மூப்புத் தன்மை இளமையிலேயே வந்து விடுகிறது. மற்றவர்களுடைய பகையே வளர்கிறது. காரியக் கேட்டினைச் செய்கிறது. அது மட்டுமல்ல வன்சொல் திருட்டுத்தன்மையுடையது என்பது வள்ளுவத்தின் கருத்து. எப்படி வன்சொல் திருடு? விலங்கினத்திடமிருந்து கவர்ந்து கொண்ட விலங்கியல் தன்மையின் விளைவு வன்சொல். அதனால் வன்சொல் திருடு ஆகும். இனிய சொல் அன்பினை இருபாலும் ஊற்றெடுக்கச் செய்கிறது; தோழமையை வளர்க்கிறது. வாழ்க்கைப் பணியில் ஆற்றல் மிக்க ஒத்துழைப்பை நல்குகிறது. ஆதலால் பணிவும் இன்சொல்லும் வெற்றி பொருந்திய நல்வாழ்க்கையின் இரட்டை நாடிகள். ஒன்றின்றிப் பிரிதொன்று இல்லை. இன்சொல்லை என்றும், எங்கும் வழங்கி வாழ்வித்து வாழ்வோமாக!

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற"

Add a comment

ஒழுக்கம் உடையராதல் அரிது. ஆயினும் ஒழுக்கம் உடையராக வாழ்தலே வாழ்தல். "ஒழுக்கம்" என்ற சொல் பலராலும் கேட்கப் பெறும் சொல். ஆயினும் ஒழுக்கம் என்ற சொல்லுக்கு மக்கள் மன்றத்தில் கற்பிக்கப் பெற்றுள்ள பொருள் மிகச் சுருங்கியது. அதாவது ஆண் பெண் உறவுகளில் குற்றம் ஏற்படாமல் வாழ்வதே ஒழுக்கமுடமையாகும் என்பது வலிமை சான்ற ஒரு கருத்து. இதில் தவறில்லை; உண்மை இருக்கிறது. ஆயினும் பெண் வழி நேரிடும் பிழைகளைத் தவிர்த்தல் மட்டுமே ஒழுக்கமுடமையாகாது. இது ஒழுக்கமுடைமையின் ஒரு கூறு.

மேலும் கள்ளுண்ணல், கவறாடல் முதலியன செய்யாமை ஒழுக்கம் என்று கூறுவாரும் உளர். இதிலும் உண்மை இருக்கிறது. ஆயினும் கள்ளுண்ணாதிருத்தல், கவறாடாதிருத்தல் மட்டும் ஒழுக்கமுடைமையாகாது. இவையும் ஒழுக்கத்தின் கூறுகளே! இந்த அளவில் மட்டும்தான் ஒழுக்கம்பற்றி நமது நட்டு மக்கள் அறிந்திருக்கின்றனர். கள்ளுண்ணாதிருத்தல் கவறு (சூது) ஆடாதிருத்தல், முறை தவறான பால் ஒழுக்கங்கள் மேற்கொள்ளாதிருத்தல் மட்டும் உடையவரே ஒழுக்கமுடையவர் என்று கருதும் கருத்து நமது சமுதாய அளவில் மேம்பட்டிருக்கிறது. இவைகள் ஒழுக்கத்தின் கூறுபாடுகளே. ஆனால் நிறை நலம் மிக்க ஒழுக்கம் எது?

நாம் இந்த உலகத்தில் வாழ்கின்றோம். இந்த உலக சமுதாயம் நம் கண்முன்னே இயங்கிக் கொண்டிருக்கிறது; வளர்ந்து கொண்டிருக்கியது; நாம் இந்த மானுட சமுதாயத்துக்குள் சங்கமமாக வேண்டும். மானுட சமுதாயத்தின் நடைமுறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப ஒழுகி வெற்றி பெறுதல் வேண்டும். உலக நடைமுறை தீயதாக இருக்கலாம். அத்தீய ஒழுக்கமும் ஏற்புக்குரியதா என்ற கேள்வி தோன்றும். இல்லை. இல்லை. தீயஒழுக்கத்தை ஏற்றுக் கொள்ளல் இல்லை! உலகத்தைப் புரிந்து கொண்டு அதற்குத்தக ஒழுகுதல் என்பதே பொருள். உலக இயலுக்குத் தக்கவாறு என்றால் ஒத்து ஒழுகுதல் என்று மட்டுமே பொருள் கொள்ளுதல் வேண்டா. உலக நடையினைப் புரிந்து கொண்டு அதனோடு மோதாமல் ஒத்துப் போகக் கூடியதாயின் ஒத்து ஒழுகுதல் வேண்டும். ஒத்து ஒழுக இயலாதது எனில் அதனை நாம் விரும்பும் நிலைக்கு மாற்ற முயலுதல் வேண்டும். இங்ஙனமின்றி முரண்பட்டு நின்றும், கலகங்களை வளர்த்தும் வாழ்தல் கூடாது.

இந்த உலகில் எல்லாவற்றுக்கும் மேலானது மனித நேயமே ஆதலால் உலக மாந்தர்க்கு நல்லது செய்யும் வழியில் வாழ்தலே ஒழுக்கமுடைய வாழ்க்கை. உலக மானுட சமுதாயத்துடன் ஒத்து உடன் நின்று வாழ்தலே ஒழுக்கமுடைமை.

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்"

Add a comment

காதற் கடமை பூண்ட வாழ்வியலிலும் அறிவியல் உண்டு. உளவியல் ஒரு சிறந்த அறிவியல். இன்று நடைபெறும் சமூகத் தீங்குகள் பலவற்றிற்கும் காரணம் உளவியல் அறியாமை. ஏன், வாழ்க்கையையே அறிவியலடிப்படையில் இயக்கினால் எண்ணற்ற இன்பங்கள் கிடைக்கும். இதனைத் தமிழ் மக்கள் பண்டே உணர்ந்து வாழ்வியலுக்கும் அகத்திணை இலக்கணம் செய்தனர்.

காதல் மலரினும் மெல்லியது; அதன் செவ்வி உணர்ந்தார் சிலரே என்பது வள்ளுவத்தின் முடிவு. காதல் மனையறத்தில் நம்பிக்கையும் நல்லெண்ங்களும் ஊற்றுக் கண்களாகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலும், ஒத்துழைத்தலும் இன்றியமையாக் கடமை; மனையறத்தின் இணைகள்; மாண்புகளை ஒருவருக்கொருவர் சேர்க்கும் இணைகளாகும். ஆதலால் நமது அறத்தில் மனை வாழ்க்கை, பிரிவினைக்குரியது அல்ல. இஃதோர் ஒப்பந்த அளவில் அமைந்ததும் அல்ல. இஃதொரு தியாக வேள்வி.

"செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை"

என்பது வள்ளுவம்.

ஆதலால், காதல் மனைவாழ்க்கையின்பம் ஆன்ம இன்பம்; ஆன்ம அனுபவம். ஆதலால் கற்புக்கடம் பூண்ட பெண்ணே வாழ்க்கைக்குத் துணை நிற்க முடியும்; மற்றவர்களால் இயலாது. ஒருவர், இருவருக்குச் சேவை செய்ய இயலாது. இங்ஙனம் விரும்புதல் புலால் சுவையேயாம். இது கொடிதினும் கொடிது. இத்தகு தவறுகள் செய்யாத வாழ்க்கையையே, பேராண்மை நிறைந்தது என்றும், கற்பென்னும் திண்மை கொண்ட வாழ்க்கை என்றும் வள்ளுவம் போற்றுகிறது.

Add a comment

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework