குண கடல் இவர்ந்து குரூஉக் கதிர் பரப்பி
பகல் கெழு செல்வன் குடமலை மறைய
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர்
நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்ப
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து
இன்று நீ இவணை ஆகி எம்மொடு
தங்கின் எவனோதெய்ய செங்கால்
கொடு முடி அவ் வலை பரியப் போகிய
கோட் சுறாக் குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே
பகற் குறி வந்து மீள்வானை அவள் ஆற்றும் தன்மையள்
அல்லள் நீயிர் இங்குத் தங்கற் பாலீர் எமரும் இன்னது
ஒரு தவற்றினர் எனத் தோழி தலைமகற்குச் சொல்லியது
இரவுக் குறி மறுத்து வரைவு கடாயதூஉம் ஆம்

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework