மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்தமுறம் செவி வாரணம் முன் குளகு அருந்திக்
கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும்
பிறங்கு இரும் சோலை நல் மலை நாடன்
மறந்தான்; மறக்க; இனி, எல்லா! நமக்குச்
சிறந்தமை நாம் நற்கு அறிந்தனம்; ஆயின், அவன் திறம்
கொல் யானைக் கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்.
வள்ளை அகவுவம் வா, இகுளை! நாம்
வள்ளை அகவுவம், வா;
காணிய வா - வாழி தோழி! - வரைத் தாழ்பு -
வாள் நிறம் கொண்ட அருவித்தே, நம் அருளா
நாண் இலி நாட்டு மலை;
ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ -
ஓர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல்
அறம் புரி நெஞ்சத்தவன்?
தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம்
பொன் அணி யானை போல் தோன்றுமே - நம் அருளாக்
கொன்னாளன் நாட்டு மலை;
கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ? - தன் மலை
நீரினும் சாயல் உடையன், நயந்தோர்க்குத்
தேர் ஈயும் வண் கையவன்;
வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல்
மழை நுழை திங்கள் போல் தோன்றும் - இழை நெகிழ
எவ்வம் உறீஇயினான் குன்று;
எஞ்சாது, எல்லா! கொடுமை நுவலாதி -
அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன், என்
நெஞ்சம் பிணிக்கொண்டவன்!
என்று யாம் பாட, மறை நின்று கேட்டனன்;
தாழ் இரும் கூந்தல் என் தோழியைக் கை கவியாச்,
சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர,
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என்
ஆய் இழை மேனிப் பசப்பு.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework