துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்
ஓய்ப்பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் 5
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே
மெய் மலி உவகை ஆகின்று இவட்கே
அஞ்சல் என்ற இறை கைவிட்டென
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில் 10
ஓர் எயில் மன்னன் போல
அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி
தலைவனைச் செலவு அழுங்குவித்தது

Add a comment

பொரு இல் ஆயமோடு அருவி ஆடி
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி
மனை வயின் பெயர்ந்த காலை நினைஇய
நினக்கோ அறியுநள் நெஞ்சே புனத்த 5
நீடு இலை விளை தினை கொடுங் கால் நிமிரக்
கொழுங் குரல் கோடல் கண்ணி செழும் பல
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில்
குடம் காய் ஆசினிப் படப்பை நீடிய
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து 10
செல் மழை இயக்கம் காணும்
நல் மலை நாடன் காதல் மகளே
இச்செறிப்பின் பிற்றை ஞான்று தலைமகன்
குறியிடத்து வந்து சொல்லியது

Add a comment

வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும் இவ் உலகத்து
காணீர் என்றலோ அரிதே அது நனி
பேணீர் ஆகுவிர் ஐய என் தோழி
பூண் அணி ஆகம் புலம்ப பாணர் 5
அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி
பறை அறை கடிப்பின் அறை அறையாத் துயல்வர
வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து
எவ்வம் மிகூஉம் அருஞ் சுரம் இறந்து
நல் வாய் அல்லா வாழ்க்கை 10
மன்னாப் பொருட் பிணிப் பிரிதும் யாம் எனவே
பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது

Add a comment

இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே நீயே
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே 5
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப் புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ
புலவு நாறுதும் செல நின்றீமோ
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே 10
எம்மனோரில் செம்மலும் உடைத்தே
குறை வேண்டிய தலைவனைத் தோழி சேட்படுத்தது

Add a comment

பெருங் களிறு உழுவை அட்டென இரும் பிடி
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது
நெய்தல் பாசடை புரையும் அம் செவிப்
பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் 5
கானக நாடற்கு இது என யான் அது
கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து
அன்னை அயரும் முருகு நின் 10
பொன் நேர் பசலைக்கு உதவா மாறே
சிறைப்புறமாகத் தோழி தலைமகட்கு உரைப்பாளாய்ச் சொல்லியது

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework