அம்ம வாழி தோழி காதலர்
நிலம் புடைபெயர்வதாயினும் கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே வானம்
நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து கடுங் குரல் பயிற்றி
கார் செய்து என் உழையதுவே ஆயிடை
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல
அருள் இலேன் அம்ம அளியேன் யானே
பிரிவிடைப் பருவம் கண்டு சொல்லியது

Add a comment

ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன
அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்
சென்றோர்மன்ற செலீஇயர் என் உயிர் என
புனை இழை நெகிழ விம்மி நொந்து நொந்து
இனைதல் ஆன்றிசின் ஆயிழை நினையின்
நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய
நின் தோள் அணி பெற வரற்கும்
அன்றோ தோழி அவர் சென்ற திறமே
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது

Add a comment

அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு
ஞாங்கர் இள வெயில் உணீஇய ஓங்கு சினைப்
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்
குன்ற நாடன் பிரிவின் சென்று
நல் நுதல் பரந்த பசலை கண்டு அன்னை
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ
கட்டின் கேட்கும்ஆயின் வெற்பில்
ஏனற் செந் தினைப் பால் ஆர் கொழுங் குரற்
சிறு கிளி கடிகம் சென்றும் இந்
நெடு வேள் அணங்கிற்று என்னும்கொல் அதுவே
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு
உரைப்பாளாய் வெறி அறிவுறீஇ வரைவு கடாயது

Add a comment

விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த
நல் எயிலுடையோர் உடையம் என்னும்
பெருந் தகை மறவன் போல கொடுங் கழிப்
பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன்
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்
காமம் பெருமையின் வந்த ஞான்றை
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும்
தேர் மணித் தௌ இசைகொல் என
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது

Add a comment

வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெ·கினை ஆயின் என் சொல்
கொள்ளல்மாதோ முள் எயிற்றோயே
நீயே பெரு நலத்தையே அவனே
நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு என மொழிப மகன் என்னாரே
பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை
நெருங்கிச் சொல்லியது பரத்தையிற்பிரிய வாயிலாய்ப்
புக்க பாணன் கேட்ப தோழி சொல்லியதூஉம் ஆம்

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework