நின் குறிப்பு எவனோ தோழி என் குறிப்பு
என்னொடு நிலையாதுஆயினும் என்றும்
நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே
சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்
பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப்
பீலி மஞ்ஞை ஆலும் சோலை
அம் கண் அறைய அகல் வாய்ப் பைஞ் சுனை
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி
நீர் அலைக் கலைஇய கண்ணிச்
சாரல் நாடனொடு ஆடிய நாளே
தலைமகன் வரைவு நீடிய இடத்து ஆற்றுவல் என்பது
படச் சொல்லியது மனை மருண்டு வேறுபாடாயினாய்
என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework