உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்
திறம் புரி கொள்கையடு இறந்து செயின அல்லது
அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல் என
வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த
வினை இடை விலங்கல போலும் புனை சுவர்ப்
பாவை அன்ன பழிதீர் காட்சி
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்
முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய்
நல் நாப் புரையும் சீறடி
பொம்மல் ஓதி புனைஇழை குணனே
பொருள்வயிற் பிரியும் எனக் கவன்ற
தலைமகட்குத் தோழி சொல்லியது

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework