நச்சு நாகத்தின் ஆர் அழல் சீற்றத்தன்
அச்சம் உற்று அடைந்தார்க்கு அமிர்து அன்னவன்
கச்சு உலாம் முலையார்க்கு அணங்கு ஆகிய
சச்சந்தன் எனும் தாமரைச் செங் கணான்.
157

 

வண் கையால் கலி மாற்றி வை வேலினால்
திண் திறல் தெவ்வர் தேர்த் தொகை மாற்றினான்
நுண் கலைக்கு இடனாய்த் திரு மா மகள்
கண்களுக்கு இடன் ஆம் கடி மார்பனே.
158

 

கோதை நித்திலம் சூழ் குளிர் வெண் குடை
ஓத நீர் உலகு ஒப்ப நிழற்றலால்
தாதையே அவன் தாள் நிழல் தங்கிய
காதலால் களிக்கின்றது இவ் வையமே.
159

 

தருமன் தண் அளியால் தனது ஈகையால்
வருணன் கூற்று உயிர் மாற்றலின் வாமனே
அருமையால் அழகின் கணை ஐந்து உடைத்
திருமகன் திரு மா நில மன்னனே.
160

 

ஏனை மன்னர் தம் இன் உயிர் செற்ற வேல்
தானை மன்னரில் தான் இமில் ஏறு அனான்
தேனை மாரி அன்னான் திசை காவலன்
வானம் தோய் புகழான் மலிவு எய்தினான்.
161
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework