செல்வற்கு இன்னணம் சேறலில் தீம் புனல்
மல்கு நீர் விதையத்து அரசன் மகள்
அல்லி சேர் அணங்கிற்கு அணங்கு அன்னவள்
வில்லின் நீள் புருவத்து எறி வேல் கணாள்.
162

 

உருவும் சாயலும் ஒப்ப உரைப்பதற்கு
அரிய ஆயினும் அவ் வளைத் தோளிகண்
பெருகு காரிகை பேசுவல் பெண் அணங்கு
அரிய தேவரும் ஏத்து அரு நீரளே.
163

 

எண்ணெயும் நானமும் இவை மூழ்கி இருள் திருக்கிட்டு
ஒண்ணறும் துகில் கிழி பொதிந்து உறை கழித்தன போல்
கண் இருண்டு நெறி மல்கிக் கடைகுழன்ற கருங் குழல்கள்
வண்ணப் போது அருச்சித்து மகிழ்வு ஆனாத் தகையவே.
164

 

குழவிக் கோட்டு இளம் பிறையும் குளிர் மதியும் கூடின போல்
அழகுகொள் சிறுநுதலும் அணி வட்ட மதி முகமும்
தொழுதற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய்த் தூமுறுவல்
ஒழுகு பொன் கொடி மூக்கும் உருப்பசியை உருக்குமே.
165

 

வண் சிலையை வனப்பு அழித்து வார்ந்து ஒழுகி நிலம் பெறா
நுண் கருமை கொண்டு ஒசிந்து நுதல் இவர்ந்து போந்து உலாய்க்
கண் கூடா கடை புடைத்துக் கைவல்லான் எழுதிய போல்
பண்பு ஆர்ந்த கொடும் புருவம் பழிச்சு ஆனாப் படியவே.
166

 

சேல் அனைய சில்லரிய கடை சிவந்து கரு மணி அம்
பால் அகத்துப் பதித்து அன்ன படியவாய் முனிவரையும்
மால் உறுப்ப மகிழ் செய்வ மாண்பில் நஞ்சும் அமிர்தமுமே
போல் குணத்த பொரு கயல் கண் செவி உறப் போந்து அகன்றனவே.
167

 

மயிர் எறி கத்தரிகை அனையவாய் வள்ளை வாடு
உயிர் செகுத்து முன் ஒன்றிப் பின் பேராது உரு அமைந்த
செயிர் மகர குண்டலமும் திளைப்பு ஆனா வார் காதும்
வயிரவில் முகம் சூடி வண்ணம் வீற்று இருந்தனவே.
168

 

ஈனாத இளங் கமுகின் மரகத மணிக் கண்ணும்
ஆனாதே இருள் பருகும் அருமணி கடைந்ததூஉம்
தான் ஆகி இருளொடு ஓர் தாமரைப் பூச் சுமந்து அன்ன
கான் ஆர்ந்த திரள் கழுத்துக் கவின் சிறை கொண்டு இருந்ததே.
169

 

மணி மகரம் வாய் போழ்ந்து வாழ் முத்த வடம் சூழ்ந்து ஆங்கு
அணி அரக்கு ஆர் செம் பஞ்சி அணை அனைய ஆடு அமைத் தோள்
துணிகதிர் வளை முன் கைத் தொகுவிரல் செங் காந்தள்
மணி அரும்பு மலர் அங்கை குலிகம் ஆர் வனப்பினவே.
170

 

தாமச் செப்பு இணை முகட்டுத் தண் கதிர் விடு நீல
மா மணி தாபித்தன போல் மனம் பருகு கருங் கண்ண
ஏம் உற அடி பரந்து இளம் பிறை வடம் சூடி
ஆம் அணங்கு குடி இருந்து அஞ் சுணங்கு பரந்தனவே.
171

 

அங் கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ்
கங்கையின் சுழி அலைக்கும் கண் கொளா நுடங்கு இடையை
உண்டு எனத் தமர் மதிப்பர் நோக்கினார் பிறர் எல்லாம்
உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிதே.
172

 

மன்நாக இணைப் படமும் தேர்த் தட்டு மதி மயக்கிப்
பொன் ஆல வட்டமும் போல் கலை இமைக்கும் அகல் அல்குல்
கொன் இளம் பருதியும் குறு முயலின் குருதியும் போன்று
இன் அரத்தப் பட்டசைத்து இந்திரற்கும் புகழ்வு அரிதே.
173

 

வேழ வெண் திரள் தடக்கை வெருட்டி மற்று இளங் கன்னி
வாழைத் தண்டு எனத் திரண்டு வால் அரக்கு உண் செம்பஞ்சி
தோழமை கொண்டு என மென்மை உடையவாய் ஒளி திகழ்ந்து
மாழை கொள் மணி மகரம் கௌவி வீற்று இருந்தனவே.
174

 

பக்கத்தால் கவிழிய வாய் மேல் பிறங்காப் பாண்டிலா
ஒக்க நன்கு உணராமை பொருந்திய சந்தினவாய்
நெக்குப் பின் கூடாது நிகர் அமைந்த முழந் தாளும்
மக்களுக்கு இல்லாத மாட்சியின் மலிந்தனவே.
175

 

ஆடு தசை பிறங்காது வற்றாது மயிர் அகன்று
நீடாது குறுகாது நிகர் அமைந்த அளவினவாய்ச்
சேடு ஆவ நாழிகையின் புடை திரண்டு தேன் நெய் பெய்
வாடாத காம்பே போல் கணைக் காலின் வனப்பினவே.
176

 

பசும் பொன் செய் கிண்கிணியும் பாடகமும் பாடு அலைப்ப
நயந்து எரி பொன் சிலம்பு முத்தரி பெய்து அகம் நக
இயைந்து எழிலார் மணி ஆமை இளம் பார்ப்பின் கூன் புறம் போல்
அசைந்து உணர்வு மடிந்து ஒழியும் அடி இணை புகழ்வார்க்கே.
177

 

அரக்கு இயல் செங் கழுநீர் அக இதழ் போல் உகிர் சூடிப்
பரப்பு இன்றி நுதி உயர்ந்து பழிப்பு அறத் திரண்டு நீண்டு
ஒருக்கு உற நெருங்கிப் பொன் ஒளி ஆழி அகம் கௌவித்
திருக் கவின் கொள் மெல் விரல்கள் தேன் ஆர்க்கும் தகையவே.
178

 

என்பொடு நரம்பு இன்றி இலவம் பூ அடர் அனுக்கி
இன்புற வரம்பு உயர்ந்து இரு நிலம் உறப் புல்லி
ஒன்பதின் சாண் நடப்பினும் ஒரு காதம் என்று அஞ்சும்
மென் பஞ்சிச் சீறடியும் மேதக்க விழைவினவே.
179
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework