மானிடர் உயிர்ப்பில் வெளிவிடும் காற்று வெப்பத் தன்மையுடையது. இந்த வெப்பத்தைத் தாங்க முடியாத நிலையில் அனிச்சம் என்ற மலர் குழைந்து கெடும். அனிச்சம் நரம்புகளின் அமைவு பெறாத மென்மையான மலர். அதனால் மோப்பக் குழைகிறது. அதனால் அனிச்சமலரை முகராமல் மூகிற்குச் சற்றுத் தொலைவில் வைத்து மணத்தை அனுபவிக்கலாம்; அழகை அனுபவிக்கலாம்; தன்மையை அனுபவிக்கலாம். இங்ஙனம் ஒரு மலரை அனுபவிப்பதற்குப் பதிலாக அதனை முகர்ந்து கெடுப்பதில் என்ன பயன்?

விருந்தினர் என்பவர்கள் புதியவர்கள். அதாவது முன்பின் தெரியாதவர்கள். அதாவது நாடுவிட்டு நாடு, கற்பதற்காகவும் புதிய அனுபவங்களைப் பெருதலுக்காகவும் பயணம் செய்து வருபவர்களே விருந்தினர் (இன்று உறவினர்களை விருந்தினர் என்று அழைப்பது தவறான மரபு). இத்தகு விருந்தினர்களை, உழுவலன்புடையாரைப் போல இனிய பரிவு நிறைந்த புன்முறுவல் தாங்கிய முகத்துடன் வரவேற்க வேண்டும். அங்ஙனம் வரவேற்காது, அந்நியர் என்ற உணர்வுடன் முகத்தில் ஐயப்பாட்டுணர்வும் விருப்பமின்மையும் புலப்பட நோக்கின், வந்த விருந்தினர் மனத்துன்பம் அடைவர்; அவர்கள் சோற்றுக்காக வந்தவர்கள் அல்லர்; உறவுக்காக வந்தவர்கள். நன்மை செய்வதற்காக வந்தவர்கள்.

"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து"

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework