நமது வாழ்க்கையில் நாம் ஒன்றைச் செய்யும்போது அச்செயலைச் சார்ந்து சில பண்புகளும் திறன்களும் வளர்கின்றன. அதுபோலவே செய்யத்தகாதனவற்றைச் செய்யும் பொழுதும் திறமைக் குறைவுகளும் தீய குணங்களும் வந்தடைகின்றன. சான்றாக நமது வாழ்வு நுகர் பொருள்களைச் சார்ந்து அமைகின்றது. அப்பொருள்களை வழங்கும் பண வசதி அடிப்படை இன்றியமையாதது ஆகிறது.

நாம் ஒவ்வொருவரும் உழைத்துப் பொருளீட்டி நுகர்ந்து வாழ்தலே முறையான வாழ்க்கை. உழைத்துப் பொருளீட்டி வாழும் வாழ்வியலில் சார்பின்றித் தனித்து வாழும் பேறு கிடைக்கும். நாமே பொருளீட்டி வாழும் வளமான வாழ்வு தொடர் வரலாறாக நீடிக்கும்.

உழைப்பின் வழி அறிவறிந்த ஆள்வினை செயல் திறன் கைகூடும்! அறிவு வளரும்; ஆற்றல் பெருகி வளரும். ஆதலால், உழைத்துப் பொருளீட்டி உண்டு வாழ்தலே வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை.

அங்ஙனமின்றி நமக்குத் தேவையானவைகளை மற்றவர்களிடம் வங்கி வாழும் இரத்தல் வாழ்வு வளராது. தன்னம்பிகையுடையதாக விளங்காது. உழைப்பாற்றல் வற்றி, சோம்பலில் வாழும் வாழ்க்கை அறிமுகமாகும்! அறிவும் வளராது. ஆதலால், இரத்தலும் நல்லதே என்றால் வாழ்வு வளராது; பயனுடையதாக அமையாது.

"நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று" (திருக்குறள் – 222)

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework