ராகம்: காம்போதி
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதஸ்
அ - ஸநிதபமகரிஸ்

பல்லவி

கொஞ்சும் மழலை பேசி குறுநகையை வீசி
குற்றந்தனை மறைக்க பாராதே நான்
கோபங் கொண்டால் கொஞ்சத்தினில் மாறாதே (கொஞ்சும்)

சரணம்

1.
கெஞ்சினால் மிஞ்சும் கண்ணா மிஞ்சினால் கெஞ்சுவாய்
கிட்ட கிட்ட வந்த போது அஞ்சுவாய்
பஞ்சமோ இங்கு என்ன பாலுக்கும் வெண்ணைக்கும்
பாய்ந்தோட பாராதே ஆய்ந் தோய்ந்து பாராய் (கொஞ்சும்)

2.
செய்ததை செய்து விட்டு சிற்றன்னை பின்னாலே
செல்லங் கொண்டு மறைந்தாலே போதுமா
மெய் யெல்லாம் வெண்ணை பூச்சு வெட்ட வெளிச்சமாச்சு
வேணு கானம் ஊதி விட்டால் போதுமா கண்ணா (கொஞ்சும்)

3.
ஒன்றிரண்டு எண்ணுவேன் எட்டினுக்குள்ளே
ஓடோடி வந்தால் உன்னை ஒன்றும் செய்வதில்லை
பன்றி என்றும் ஆமை என்றும் பாதி மிருக மென்றும்
பற்பல வாய் வைய என்றால் பாழும் மனம் வல்லை (கொஞ்சும்)

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework