ராகம்: ரஸமஞ்சரி
தாளம்: ஆதி
ஆ - ஸகாமபதாநீஸ்
அ - ஸநிதபமகரிகஸ

பல்லவி

த்யானமே பரம பாவனமே
தகு மென்ற ஞானம் கனிவொடும் தந்து தானாகி நின்ற குருபதமலரடிகளின் (த்யான)

அனுபல்லவி

கானமே கண்ணா கண்ணா - என்ற
கானமே ஹரி நாமமே
கானமே கைவல்யமே தரும்
கதி உனக்கென்று நிதி எனக்கின்று துதியருள் தந்த குரு பதமலரடிகளின் (த்யான)

சரணம்

ஒன்பது வாசலாம் கோட்டை - இதற்கு
உத்தமன் போட்டான் ராஜ பாட்டை
முன்பிருந்தார் செய்த அவக்கேட்டை - போக்கி
மூவுலகம் எட்டுமாறு பாடினான் ஒரு பாட்டை

மத்யமகாலம்

அன்பு கலந்திட அழகு துலங்கிடும் ஆயிரம் தூணால் ஆனது கூடம்
ஆடியும் பாடியும் ஹரி குண மணந்த அடியவருக்கென திறந்த கவாடம்
இந்திரிய மென்னும் அஞ்சு படி ஏறி சிந்தை எனும் சிம்மாஸனம் போடும்
என்னையன் வந்து அமருவான் பாரும் இணையேது கூறும் குருபத மலரடிகளின் (த்யான)

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework