பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைந்திரோ என்று.

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்
இந்நீரார் ஆகுதிர் என்று.

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும்நீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework