அருமை மா மணி நாகம் அழுங்க ஓர்
உருமு வீழ்ந்து என உட்கினரா அவன்
கருமம் காழ்த்தமை கண்டவர் தம் உளான்
தரும தத்தன் என்பான் இது சாற்றினான்.
242

 

தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக்
குவளையே அளவுள்ள கொழுங் கணாள்
அவளையே அமிர்தாக அவ் அண்ணலும்
உவள் அகம் தனது ஆக ஒடுங்கினான்.
243

 

விண்ணி னோடு அமிர்தம் விலைச் செல்வது
பெண்ணின் இன்பம் பெரிது எனத் தாழ்ந்து அவன்
எண்ணம் இன்றி இறங்கி இவ் வையகம்
தண் அம் தாமரை யாளொடும் தாழ்ந்ததே.
244

 

தன்னை ஆக்கிய தார்ப் பொலி வேந்தனைப்
பின்னை வௌவில் பிறழ்ந்திடும் பூ மகள்
அன்னவன் வழிச் செல்லின் இம் மண்மிசைப்
பின்னைத் தன் குலம் பேர்க்குநர் இல்லையே.
245

 

திலக நீள் முடித் தேவரும் வேந்தரும்
உலக மாந்தர்கள் ஒப்ப என்று ஓதுப
குலவு தார் மன்னர்க்கு யான் இது கூறுவன்
பலவும் மிக்கனர் தேவரின் பார்த்திவர்.
246

 

அருளுமேல் அரசு ஆக்குமன் காயுமேல்
வெருளச் சுட்டிடும் வேந்து எனும் மா தெய்வம்
மருளி மற்று அவை வாழ்த்தினும் வையினும்
அருளி ஆக்கல் அழித்தல் அங்கு ஆபவோ.
247

 

உறங்கும் ஆயினும் மன்னவன் தன் ஒளி
கறங்கு தெண் திரை வையகம் காக்குமால்
இறங்கு கண் இமையார் விழித்தே இருந்து
அறங்கள் வௌவ அதன் புறம் காக்கலார்.
248

 

யாவர் ஆயினும் நால்வரைப் பின்னிடின்
தேவர் என்பது தேறும் இவ் வையகம்
காவல் மன்னவர் காய்வன சிந்தியார்
நாவினும் உரையார் நவை அஞ்சுவார்.
249

 

தீண்டினார் தமைத் தீச் சுடும் மன்னர் தீ
ஈண்டு தம் கிளையொடும் எரித்திடும்
வேண்டில் இன் அமிர்தும் நஞ்சும் ஆதலான்
மாண்டது அன்று நின் வாய் மொழித் தெய்வமே.
250

 

வேலின் மன்னனை விண் அகம் காட்டி இஞ்
ஞாலம் ஆள்வது நன்று எனக்கு என்றியேல்
வாலிது அன்று எனக் கூறினன் வாள் ஞமற்கு
ஓலை வைத்து அன்ன ஒண் திறல் ஆற்றலான்.
251

 

குழல் சிகை கோதை சூட்டிக் கொண்டவன் இருப்ப மற்று ஓர்
நிழல் திகழ் வேலினானை நேடிய நெடும் கணாளும்
பிழைப்பிலான் புறம் தந்தானும் குரவரைப் பேணல் செய்யா
இழுக்கினார் இவர்கள் கண்டாய் இடும்பை நோய்க்கு இரைகளாவார்.
252

 

நட்பு இடைக் குய்யம் வைத்தான் பிறர் மனை நலத்தைச் சேர்ந்தான்
கட்டு அழல் காமத் தீயில் கன்னியைக் கலக்கினானும்
அட்டு உயிர் உடலம் தின்றான் அமைச்சனாய் அரசு கொன்றான்
குட்ட நோய் நரகம் தம்முள் குளிப்பவர் இவர்கள் கண்டாய்.
253

 

பிறை அது வளரத் தானும் வளர்ந்து உடன் பெருகிப் பின் நாள்
குறைபடு மதியம் தேயக் குறுமுயல் தேய்வதே போல்
இறைவனாத் தன்னை ஆக்கி அவன் வழி ஒழுகின் என்றும்
நிறை மதி இருளைப் போழும் நெடும் புகழ் விளைக்கும் என்றான்.
254

 

கோள் நிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி
நீள் நிலம் மாரி இன்றி விளைவு அஃகிப் பசியும் நீடிப்
பூண் முலை மகளிர் பொற்பில் கற்பு அழிந்து அறங்கள் மாறி
ஆணை இவ் உலகு கேடாம் அரசு கோல் கோடின் என்றான்.
255
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework