பாடியவர்: மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்.
பாடப்பட்டோன்: சிறுகுடிகிழான் பண்ணன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.

வெள்ளி தென்புலத்து உறைய, விளைவயல்
பள்ளம், வாடிய பயன்இல் காலை,
இரும்பறைக் கிணைமகன் சென்றவன், பெரும்பெயர்
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்,
தன்நிலை அறியுநன் ஆக, அந்நிலை
இடுக்கண் இரியல் போக, உடைய
கொடுத்தோன் எந்தை, கொடைமேந் தோன்றல்,
நுண்ணூல் தடக்கையின் நாமருப் பாக,
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்
பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ; அவன்
வினைப்பகடு ஏற்ற மேழிக் கிணைத்தொடா,
நாடொறும் பாடேன் ஆயின், ஆனா
மணிகிளர் முன்றில் தென்னவன் மருகன்,
பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை
அண்ணல் யானை வழுதி,
கண்மா றிலியர்என் பெருங்கிளைப் புரவே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework