புன்னாகவராளி - திஸ்ர ஏகதாளம்
ரசங்கள்: அற்புதம், கருணை

தஞ்ச முலகினில் எங்கணு மின்றித்

தவித்துத் தடுமாறி,
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்,
பார முனக் காண்டே!
ஆண்டே! - பாரமுனக் காண்டே! ... 1

துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச்
சுகமருளல் வேண்டும்;
அன்புடன் நின்புகழ் பாடிக்குதித்து நின்
ஆணை வழி நடப்பேன்;
ஆண்டே! - ஆணைவழி நடப்பேன். ... 2

சேரி முழுதும் பறையடித் தேயருட்
சீர்த்திகள் பாடிடுவேன்;
பேரிகை கொட்டித் திசைக ளதிரநின்
பெயர் முழக்கிடுவேன்;
ஆண்டே! - பெயர் முழக்கிடுவேன். ... 3

பண்ணைப் பறையர் தங் கூட்டத்தி லேயிவன்
பாங்கிய மோங்கி விட்டான்;
கண்ண னடிமை யிவனெனுங் கீர்த்தியில்
காதலுற் றிங்கு வந்தேன்;
ஆண்டே! - காதலுற் றிங்குவந்தேன். ... 4

காடு கழனிகள் காத்திடுவேன், நின்றன்
காலிகள் மேய்த்திடுவேன்;
பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென்
பக்குவஞ் சொல்லாண்டே!
ஆண்டே! - பக்குவஞ் சொல்லாண்டே! ... 5

தோட்டங்கள் கொத்திச் செடிவளர்க்கச் சொல்லிச்
சோதனை போடாண்டே!
காட்டு மழைக்குறி தப்பிச் சொன்னா லெனைக்
கட்டியடி யாண்டே!
ஆண்டே! - கட்டியடி யாண்டே! ... 6

பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்
பிழைத்திட வேண்டுமையே!
அண்டை யலுக்கென் னாலுப காரங்கள்
ஆகிட வேண்டுமையே!
உபகாரங்கள் - ஆகிட வேண்டுமையே! ... 7

மானத்தைக் காக்கவோர் நாலுமுழத்துணி
வாங்கித் தரவேணும்!
தானத்துக்குச் சில வேட்டிகள் வாங்கித்
தரவுங் கடனாண்டே!
சில வேட்டி - தரவுங் கடனாண்டே. ... 8

ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி
யொருசில பேய்கள் வந்தே
துன்பப் படுத்துது மந்திரஞ் செய்து
தொலைத்திட வேண்டுமையே!
பகையாவுந் - தொலைத்திட வேண்டுமையே! ... 9

பேயும் பிசாசுந் திருடரு மென்றன்
பெயரினைக் கேட்டளவில்,
வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க
வழி செய்ய வேண்டுமையே!
தொல்லைதீரும் - வழிசெய்ய வேண்டுமையே! ... 10

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework