பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பாடாண். துறை: வாழ்த்தியல்.

நெடு நீர நிறை கயத்துப்
படு மாரித் துளி போல,
நெய் துள்ளிய வறை முகக்கவும்,
சூடு கிழித்து வாடுஊன் மிசையவும்,
ஊன் கொண்ட வெண் மண்டை
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும்,
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது,
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை
ஈத்தோன் எந்தை, இசைதனது ஆக;
வயலே நெல்லின் வேலி, நீடிய கரும்பின்
பாத்திப் பன்மலர்ப் பூத்த துப்பின;
புறவே , புல்லருந்து பல்லா யத்தான்,
வில்இருந்த வெங்குறும் பின்று;
கடலே, கால்தந்த கலம் எண்ணுவோர்
கானற் புன்னைச் சினைநிலக் குந்து;
கழியே, சிறுவெள் உப்பின் கொள்ளை சாற்றி,
பெருங்கல் நன்னாட்டு உமண்ஒலிக் குந்து;
அன்னநன் நாட்டுப் பொருநம், யாமே;
பொரா அப் பொருந ரேம்,
குணதிசை நின்று குடமுதற் செலினும்,
வடதிசை நின்று தென்வயிற் செலினும்,
தென்திசை நின்று குறுகாது நீடினும்,
யாண்டும் நிற்க, வெள்ளி; யாம்
வேண்டியது உணர்ந்தோன் தாள்வா ழியவே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework