பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
துறை : முதுமொழிக் காஞ்சி. சிறப்பு : சிறந்த அறநெறிகள்.

அழல் புரிந்த அடர் தாமரை
ஐது அடர்ந்ற நூற் பெய்து,
புனை விளைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல்
பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடிப்,
பாண் முற்றுக, நின் நாள்மகிழ் இருக்கை!
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர்
தோள் முற்றுக, நின் சாந்துபுலர் அகலம்! ஆங்க
முனிவில் முற்றத்து, இனிது முரசு இயம்பக்,
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்குஅளித்தலும்,
ஒடியா முறையின் மடிவிலை யாகி
‘நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை’ என்போர்க்கு இனன் ஆகி லியர்!
நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்
ஒழி மடல் விறகின் கழுமீன் சுட்டு,
வெங்கள் தொலைச்சியும் அமையார், தெங்கின்
இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு
பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்துக்,
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்,
சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்று ஆக, நின் செய்கை! விழவின்
கோடியர் நீர்மை போல முறை முறை
ஆடுநர் கழியும்இவ் உலகத்துக், கூடிய
நகைப் புறனாக, நின் சுற்றம்!
இசைப்புற னாக, நீ ஓம்பிய பொருளே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework