பாடியவர்: உலோச்சனார்.
பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி.
திணை: பாடாண். துறை: வாழ்த்தியல்.

பனி பழுநிய பல் யாமத்துப்
பாறு தலை மயிர் நனைய,
இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின்,
இனையல் அகற்ற என் கிணைதொடாக் குறுகி,
‘அவி உணவினோர் புறங் காப்ப,
அற, நெஞ்சத்தோன் வாழ, நாள்’ என்று,
அதற் கொண்டு வரல் ஏத்திக்
கரவு “இல்லாக் கவிவண் கையான்,
வாழ்க!” எனப் பெயர் பெற்றோர்
பிறர்க்கு உவமம் பிறர் இல், என
அது நினைத்து, மதி மழுகி,
அங்கு நின்ற எற் காணூஉச்
‘சேய் நாட்டுச் செல் கிணைஞனை!
நீபுரவலை எமக்கு’ என்ன,
மலைபயந்த மணியும், கடறுபயந்த பொன்னும்,
கடல் பயந்த கதிர் முத்தமும்,
வேறுபட்ட உடையும், சேறுபட்ட தசும்பும்,
கனவிற் கண்டாங்கு, வருந்தாது நிற்ப,
நனவின் நல்கியோன், நகைசால் தோன்றல்;
நாடுஎன மொழிவோர் அவன் நாடென மொழிவோர்
வேந்தென மொழிவோர், ‘அவன் வேந்தென மொழிவோர்
. . . . . பொற்கோட்டு யானையர்
கவர் பரிக் கச்சை நன்மான்
வடி மணி வாங்கு உருள
. . . . நல்தேர்க் குழுவினர்,
கத ழிசை வன்க ணினர்,
வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டிக்,
கடல் ஒலி கொண்ட தானை
அடல்வெங் குருசில்! மன்னிய நெடிதே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework