கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப
நெடு நிலைக் கந்தில் நின்ற பாவையொடு
முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்
உதயகுமரற்கு உற்றதை உரைப்ப
சா துயர் கேட்டுச் சக்கரவாளத்து
மாதவர் எல்லாம் மணிமேகலை தனை
'இளங்கொடி! அறிவதும் உண்டோ இது-' என
துளங்காது ஆங்கு அவள் உற்றதை உரைத்தலும்
ஆங்கு அவள் தன்னை ஆர் உயிர் நீங்கிய
வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து
22-010
மா பெருங் கோயில் வாயிலுக்கு இசைத்து
கோயில் மன்னனைக் குறுகினர் சென்று ஈங்கு
'உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதிபோல
நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய!
வேலும் கோலும் அருட்கண் விழிக்க!
தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி!
நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம்
மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே!
இன்றே அல்ல இப் பதி மருங்கில்
கன்றிய காமக் கள்ளாட்டு அயர்ந்து
22-020
பத்தினிப் பெண்டிர்பால் சென்று அணுகியும்
நல் தவப் பெண்டிர்பின் உளம் போக்கியும்
தீவினை உருப்ப உயிர் ஈறுசெய்தோர்
பார் ஆள் வேந்தே! பண்டும் பலரால்
"மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்
தன் முன் தோன்றல் தகாது ஒழி நீ" எனக்
கன்னி ஏவலின் காந்த மன்னவன்
"இந் நகர் காப்போர் யார்?" என நினைஇ
"நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்குறக்
காவல் கணிகை தனக்கு ஆம் காதலன்
22-030
இகழ்ந்தோர்க் காயினும் எஞ்சுதல் இல்லோன்
ககந்தன் ஆம்" எனக் காதலின் கூஉய்
"அரசு ஆள் உரிமை நின்பால் இன்மையின்
பரசுராமன் நின்பால் வந்து அணுகான்
அமர முனிவன் அகத்தியன் தனாது
துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும்
ககந்தன் காத்தல்! காகந்தி" என்றே
இயைந்த நாமம் இப் பதிக்கு இட்டு ஈங்கு
உள்வரிக் கொண்டு அவ் உரவோன் பெயர் நாள்
தெள்ளு நீர்க் காவிரி ஆடினள் வரூஉம்
22-040
பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
"நீ வா" என்ன நேர் இழை கலங்கி
"மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறன் உளம் புரி நூல் மார்பன்
முத் தீப் பேணும் முறை எனக்கு இல்" என
மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள்
பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்
22-050
"கொண்டோர் பிழைத்த குற்றம் தான் இலேன்
கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன்
வான் தரு கற்பின் மனையறம் பட்டேன்
யான் செய் குற்றம் யான் அறிகில்லேன்
பொய்யினைகொல்லோ பூத சதுக்கத்துத்
தெய்வம் நீ" எனச் சேயிழை அரற்றலும்
மா பெரும் பூதம் தோன்றி "மடக்கொடி!
நீ கேள்" என்றே நேர் இழைக்கு உரைக்கும்
"தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் பெரு மழை" என்ற அப்
22-060
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!
பிசியும் நொடியும் பிறர் வாய்க் கேட்டு
விசி பிணி முழவின் விழாக் கோள் விரும்பி
கடவுள் பேணல் கடவியை ஆகலின்
மடவரல்! ஏவ மழையும் பெய்யாது
நிறை உடைப் பெண்டிர் தம்மே போல
பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை
ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய் இழை!
ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது
பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக்
22-070
கட்டாது உன்னை என் கடுந் தொழில் பாசம்
மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம்
பின்முறை அல்லது என் முறை இல்லை
ஈங்கு எழு நாளில் இளங்கொடி நின்பால்
வாங்கா நெஞ்சின் மயரியை வாளால்
ககந்தன் கேட்டு கடிதலும் உண்டு" என
இகந்த பூதம் எடுத்து உரைசெய்தது அப்
பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன்
தாதை வாளால் தடியவும் பட்டனன்
இன்னும் கேளாய் இருங் கடல் உடுத்த
22-080
மண் ஆள் செவத்து மன்னவர் ஏறே!
தருமதத்தனும் தன் மாமன் மகள்
பெரு மதர் மழைக் கண் விசாகையும் பேணித்
தெய்வம் காட்டும் திப்பிய ஓவியக்
கைவினை கடந்த கண் கவர் வனப்பினர்
"மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு
ஒத்தனர்" என்றே ஊர் முழுது அலர் எழ
புனையா ஓவியம் புறம் போந்தென்ன
மனைஅகம் நீங்கி வாள் நுதல் விசாகை
உலக அறவியினூடு சென்று ஏறி
22-090
"இலகு ஒளிக் கந்தின் எழுதிய பாவாய்!
உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ" என
"மா நகருள்ளீர்! மழை தரும் இவள்" என
நா உடைப் பாவை நங்கையை எடுத்தலும்
"தெய்வம் காட்டித் தௌித்திலேன் ஆயின்
மையல் ஊரோ மன மாசு ஒழியாது
மைத்துனன் மனையாள் மறு பிறப்பு ஆகுவேன்
இப் பிறப்பு இவனொடும் கூடேன்" என்றே
நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி
மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின்
22-100
தருமதத்தனும் தந்தையும் தாயரும்
பெரு நகர் தன்னைப் பிறகிட்டு ஏகி
"தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய்" என
நா உடைப் பாவையை நலம் பல ஏத்தி
மிக்கோர் உறையும் விழுப் பெருஞ் செல்வத்துத்
தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின்
தருமதத்தனும் "தன் மாமன் மகள்
விரி தரு பூங் குழல் விசாகையை அல்லது
பெண்டிரைப் பேணேன் இப் பிறப்பு ஒழிக!" எனக்
கொண்ட விரதம் தன்னுள் கூறி
22-110
வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி
நீள் நிதிச் செல்வன் ஆய் நீள் நில வேந்தனின்
எட்டிப் பூப் பெற்று இரு முப்பதிற்று யாண்டு
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன்
அந்தணாளன் ஒருவன் சென்று "ஈங்கு
என் செய்தனையோ இரு நிதிச் செல்வ?
'பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும்
புத்தேள் உலகம் புகாஅர்' என்பது
கேட்டும் அறிதியோ? கேட்டனைஆயின்
நீட்டித்திராது நின் நகர் அடைக!" எனத்
22-120
தக்கண மதுரை தான் வறிது ஆக
இப் பதிப் புகுந்தனன் இரு நில வேந்தே!
மற்று அவன் இவ் ஊர் வந்தமை கேட்டு
பொன் தொடி விசாகையும் மனைப் புறம்போந்து
நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண்
அல்லவை கடிந்த அவன்பால் சென்று
"நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள்
மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன
ஆறு ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என்
நாறு ஐங் கூந்தலும் நரை விராவுற்றன
22-130
இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ?
உளன் இல்லாள! எனக்கு ஈங்கு உரையாய்
இப் பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன்
அப் பிறப்பு யான் நின் அடித்தொழில் கேட்குவன்
இளமையும் நில்லாது யாக்கையும் நில்லாது
வளவிய வான் பெருஞ் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத் துணை ஆவது
தானம் செய்' என தருமதத்தனும்
மாமன் மகள்பால் வான் பொருள் காட்டி
22-140
ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம்
ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால்
குமரி மூத்த அக் கொடுங் குழை நல்லாள்
அமரன் அருளால் அகல் நகர் இடூஉம்
படு பழி நீங்கி பல்லோர் நாப்பண்
கொடி மிடை வீதியில் வருவோள் குழல்மேல்
மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன்
கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொளச்
சுரி இரும் பித்தை சூழ்ந்து புறந் தாழ்ந்த
விரி பூ மாலை விரும்பினன் வாங்கி
22-150
"தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம்" என
எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி
மாலை வாங்க ஏறிய செங் கை
நீலக் குஞ்சி நீங்காது ஆகலின்
"ஏறிய செங் கை இழிந்திலது இந்தக்
காரிகை பொருட்டு" எனக் ககந்தன் கேட்டுக்
கடுஞ் சினம் திருகி மகன் துயர் நோக்கான்
மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன்
ஊழிதோறு ஊழி உலகம் காத்து
வாழி எம் கோ மன்னவ! என்று
22-160
மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும்
வீயா விழுச் சீர் வேந்தன் கேட்டனன்
"இன்றே அல்ல" என்று எடுத்து உரைத்து
நன்று அறி மாதவிர்! நலம் பல காட்டினிர்
இன்றும் உளதோ இவ் வினை? உரைம்' என
வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப
'தீது இன்று ஆக செங்கோல் வேந்து!' என
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும்
'முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில்
கடியப் பட்டன ஐந்து உள அவற்றில்
22-170
கள்ளும் பொய்யும் களவும் கொலையும்
தள்ளாது ஆகும் காமம் "தம்பால்
ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர்" என
நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள்
நீங்கார் அன்றே நீள் நில வேந்தே!
தாங்கா நரகம் தன்னிடை உழப்போர்
சே அரி நெடுங் கண் சித்திராபதி மகள்
காதலன் உற்ற கடுந் துயர் பொறாஅள்
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள்
மற்று அவள் பெற்ற மணிமேகலை தான்
22-180
முற்றா முலையினள் முதிராக் கிளவியள்
"செய்குவன் தவம்" என சிற்றிலும் பேர் இலும்
ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள்
ஆங்கு அவள் அவ் இயல்பினளே ஆயினும்
நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும்
காரிகை பொருட்டால் காமம் காழ்கொள
ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன்
காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை
காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின்
காயசண்டிகை தன் கணவன் ஆகிய
22-190
> வாய் வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி
"ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன்" என
ஆங்கு அவன் தீவினை உருத்தது ஆகலின்
மதி மருள் வெண்குடை மன்ன! நின் மகன்
உதயகுமரன் ஒழியானாக
ஆங்கு அவள் தன்னை அம்பலத்து ஏற்றி
ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து
காயசண்டிகை தன் கணவன் ஆகிய
வாய் வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய்
"விஞ்சை மகள்பால் இவன் வந்தனன்" என
22-200
வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி
ஆங்கு அவன் தன் கை வாளால் அம்பலத்து
ஈங்கு இவன் தன்னை எறிந்தது" என்று ஏத்தி
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும்
சோழிக ஏனாதி தன் முகம் நோக்கி
'யான் செயற்பாலது இளங்கோன் தன்னைத்
தான் செய்ததனால் தகவு இலன் விஞ்சையன்
மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றுஎனின் இன்றால் `
"மகனை முறைசெய்த மன்னவன் வழி ஓர்
22-210
துயர் வினையாளன் தோன்றினான்" என்பது
வேந்தர் தம் செவி உறுவதன் முன்னம்
ஈங்கு இவன் தன்னையும் ஈமத்து ஏற்றி
கணிகை மகளையும் காவல் செய்க' என்றனன்
அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என்
22-215
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework