வடபே ரிமயத்து வான்றகு சிறப்பிற்
கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின்
சினவேல் முன்பிற் செருவெங் கோலத்துக்
கனக விசயர்தங் கதிர்முடி யேற்றிச்
செறிகழல் வேந்தன் தென்றமி ழாற்றல் 5
அறியாது மலைந்த ஆரிய மன்னரைச்
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக
உயிர்த்தொகை யுண்ட வொன்பதிற் றிரட்டியென்று
யாண்டும் மதியும் நாளுங் கடிகையும்
ஈண்டுநீர் ஞாலங் கூட்டி யெண்கொள 10
வருபெருந் தானை மறக்கள மருங்கின்
ஒருபக லெல்லை உயிர்த்தொகை உண்ட
செங்குட் டுவன்றன் சினவேற் றானையொடு
கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து
பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை 15
நூற்றிறன் மாக்களி னீர்ப்படை செய்து
மன்பெருங் கோயிலும் மணிமண் டபங்களும்
பொன்புனை யரங்கமும் புனைபூம் பந்தரும்
உரிமைப் பள்ளியும் விரிபூஞ் சோலையும்
திருமலர்ப் பொய்கையும் வரிகாண் அரங்கமும் 20
பேரிசை மன்னர்க் கேற்பவை பிறவும்
ஆரிய மன்னர் அழகுற அமைத்த
தெள்ளுநீர்க் கங்கைத் தென்கரை யாங்கண்
வெள்ளிடைப் பாடி வேந்தன் புக்கு
நீணில மன்னர் நெஞ்சுபுக லழித்து 25
வானவர் மகளிரின் வதுவைசூட் டயர்ந்தோர்
உலையா வெஞ்சமம் ஊர்ந்தமர் உழக்கித்
தலையுந் தோளும் விலைபெறக் கிடந்தோர்
நாள்விலைக் கிளையுள் நல்லம ரழுவத்து
வாள்வினை முடித்து மறத்தொடு முடிந்தோர் 30
குழிகட் பேய்மகள் குரவையிற் றொடுத்து
வழிமருங் கேத்த வாளொடு மடிந்தோர்
கிளைக டம்மொடு கிளர்பூ ணாகத்து
வளையோர் மடிய மடிந்தோர் மைந்தர்
மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடியத் 35
தலைத்தார் வாகை தம்முடிக் கணிந்தோர்
திண்டேர்க் கொடுஞ்சியொடு தேரோர் வீழப்
புண்டோய் குருதியிற் பொலிந்த மைந்தர்
மாற்றருஞ் சிறப்பின் மணிமுடிக் கருந்தலைக்
கூற்றுக்கண் ணோட அரிந்துகளங் கொண்டோர் 40
நிறஞ்சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து
புறம்பெற வந்த போர்வாள் மறவர்
வருக தாமென வாகைப் பொலந்தோடு
பெருநா ளமயம் பிறக்கிடக் கொடுத்துத்
தோடார் போந்தை தும்பையொடு முடித்துப் 45
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தன்
ஆடுகொள் மார்போ டரசுவிளங் கிருக்கையின்
மாடல மறையோன் வந்து தோன்றி
வாழ்க வெங்கோ மாதவி மடந்தை
கானற் பாணி கனக விசயர்தம் 50
முடித்தலை நெரித்தது முதுநீர் ஞாலம்
அடிப்படுத் தாண்ட அரசே வாழ்கெனப்
பகைபுலத் தரசர் பலரீங் கறியா
நகைத்திறங் கூறினை நான்மறை யாள
யாதுநீ கூறிய உரைப்பொரு ளீங்கென 55
மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்
கானலந் தண்டுறைக் கடல்விளை யாட்டினுள்
மாதவி மடந்தை வரிநவில் பாணியோடு
ஊடற் காலத் தூழ்வினை யுருத்தெழக்
கூடாது பிரிந்து குலக்கொடி தன்னுடன் 60
மாட மூதூர் மதுரை புக்காங்கு
இலைத்தார் வேந்தன் எழில்வான் எய்தக்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
குடவர் கோவே நின்னாடு புகுந்து
வடதிசை மன்னர் மணிமுடி யேறினள் 65
இன்னுங் கேட்டருள் இகல்வேற் றடக்கை
மன்னர் கோவே யான்வருங் காரணம்
மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு
குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன்
ஊழ்வினைப் பயன்கொல் உரைசால் சிறப்பின் 70
வாய்வாட் டென்னவன் மதுரையிற் சென்றேன்
வலம்படு தானை மன்னவன் றன்னைச்
சிலம்பின் வென்றனள் சேயிழை யென்றலும்
தாதெரு மன்றத்து மாதரி யெழுந்து
கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான் 75
அடைக்கல மிழந்தேன் இடைக்குல மாக்காள்
குடையும் கோலும் பிழைத்த வோவென
இடையிருள் யாமத் தெரியகம் புக்கதும்
தவந்தரு சிறப்பிற் கவுந்தி சீற்றம்
நிவந்தோங்கு செங்கோல் நீணில வேந்தன் 80
போகுயிர் தாங்கப் பொறைசா லாட்டி
என்னோ டிவர்வினை உருத்த தோவென
உண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும்
பொற்றேர்ச் செழியன் மதுரை மாநகர்க்கு
உற்றது மெல்லாம் ஒழிவின் றுணர்ந்தாங்கு 85
என்பதிப் பெயர்ந்தேன் என்துயர் போற்றிச்
செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க் குரைக்க
மைந்தற் குற்றதும் மடந்தைக் குற்றதும்
செங்கோல் வேந்தற் குற்றதுங் கேட்டுக்
கோவலன் தாதை கொடுந்துய ரெய்தி 90
மாபெருந் தானமா வான்பொரு ளீத்தாங்கு
இந்திர விகாரம் ஏழுடன் புக்காங்கு
அந்தர சாரிகள் ஆறைம் பதின்மர்
பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று
துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும் 95
துறந்தோன் மனைவி மகன்துயர் பொறாஅள்
இறந்ததுய ரெய்தி இரங்கிமெய் விடவும்
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணலம் பெருந்தவத் தாசீ வகர்முன்
புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும் 100
தானம் புரிந்தோன் றன்மனைக் கிழத்தி
நாள்விடூஉ நல்லுயிர் நீத்துமெய் விடவும்
மற்றது கேட்டு மாதவி மடந்தை
நற்றாய் தனக்கு நற்றிறம் படர்கேன்
மணிமே கலையை வான்துயர் உறுக்குங் 105
கணிகையர் கோலங் காணா தொழிகெனக்
கோதைத் தாமம் குழலொடு களைந்து
போதித் தானம் புரிந்தறங் கொள்ளவும்
என்வாய்க் கேட்டோர் இறந்தோ ருண்மையின்
நன்னீர்க் கங்கை யாடப் போந்தேன் 110
மன்னர் கோவே வாழ்க ஈங்கெனத்
தோடார் போந்தை தும்பையொடு முடித்த
வாடாவஞ்சி வானவர் பெருந்தகை
மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின்
தென்னவன் நாடு செய்ததீங் குரையென 115
நீடு வாழியரோ நீணில வேந்தென
மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின்
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் 120
வளநா டழிக்கும் மாண்பின ராதலின்
ஒன்பது குடையும் ஒருபக லொழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்
பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு
வேம்புமுதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப் 125
போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள்
கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன்
பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு
ஒருபக லெல்லை யுயிர்ப்பலி யூட்டி 130
உரைசெல வெறுத்த மதுரை மூதூர்
அரைசுகெடுத் தலம்வரும் அல்லற் காலை
தென்புல மருங்கில் தீதுதீர் சிறப்பின்
மன்பதை காக்கும் முறைமுதற் கட்டிலின்
நிரைமணிப் புரவி ஓரேழ் பூண்ட 135
ஒருதனி யாழிக் கடவுட் டேர்மிசைக்
காலைச் செங்கதிர்க் கடவுளே றினனென
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்
ஊழிதொ றூழி உலகங் காத்து
வாழ்க எங்கோ வாழிய பெரிதென 140
மறையோன் கூறிய மாற்ற மெல்லாம்
இறையோன் கேட்டாங் கிருந்த எல்லையுள்
அகல்வாய் ஞாலம் ஆரிருள் விழுங்கப்
பகல்செல முதிர்ந்த படர்கூர் மாலைச்
செந்தீப் பரந்த திசைமுகம் விளங்க 145
அந்திச் செக்கர் வெண்பிறை தோன்றப்
பிறையேர் வண்ணம் பெருந்தகை நோக்க
இறையோன் செவ்வியிற் கணியெழுந் துரைப்போன்
எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது
மண்ணாள் வேந்தே வாழ்கென் றேத்த 150
நெடுங்காழ்க் கண்டம் நிரல்பட நிரைத்த
கொடும்பட நெடுமதிற் கொடித்தேர் வீதியுள்
குறியவும் நெடியவுங் குன்றுகண் டன்ன
உறையுள் முடுக்கர் ஒருதிறம் போகி
வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச் 155
சித்திர விதானத்துச் செம்பொற் பீடிகைக்
கோயி லிருக்கைக் கோமகன் ஏறி
வாயி லாலரின் மாடலற் கூஉய்
இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர்
வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு 160
செங்கோற் றன்மை தீதின் றோவென
எங்கோ வேந்தே வாழ்கென் றேத்தி
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும்
வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப
எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும் 165
குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க
அரிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும்
திரிந்துவே றாகுங் காலமு முண்டோ
தீதோ இல்லைச் செல்லற் காலையுங் 170
காவிரி புரக்கும் நாடுகிழ வோற்கென்று
அருமறை முதல்வன் சொல்லக் கேட்டே
பெருமகன் மறையோற் பேணி யாங்கவற்கு
ஆடகப் பெருநிறை யையைந் திரட்டித்
தோடார் போந்தை வேலோன் றன்னிறை 175
மாடல மறையோன் கொள்கென் றளித்தாங்கு
ஆரிய மன்னர் ஐயிரு பதின்மரைச்
சீர்கெழு நன்னாட்டுச் செல்கவென் றேவித்
தாபத வேடத் துயிருய்ந்து பிழைத்த
மாபெருந் தானை மன்ன குமரர் 180
சுருளிடு தாடி மருள்படு பூங்குழல்
அரிபரந் தொழுகிய செழுங்கயல் நெடுங்கண்
விரிவெண் தோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச்
சூடக வரிவளை ஆடமைப் பணைத்தோள்
வளரிள வனமுலைத் தளரியல் மின்னிடைப் 185
பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு
எஞ்சா மன்னர் இறைமொழி மறுக்கும்
கஞ்சுக முதல்வர் ஈரைஞ் ஞூற்றூவர்
அரியிற் போந்தை அருந்தமி ழாற்றல்
தெரியாது மலைந்த கனக விசயரை 190
இருபெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவித்
திருந்துதுயில் கொள்ளா அளவை யாங்கணும்
பரம்புநீர்க் கங்கைப் பழனப் பாசடைப்
பயிலிளந் தாமரைப் பல்வண்டு யாழ்செய
வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக் 195
குணதிசைக் குன்றத் துயர்மிசைத் தோன்றக்
குடதிசை யாளுங் கொற்ற வேந்தன்
வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத்
தென்றிசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு
நிதிதுஞ்சு வியன்நகர் நீடுநிலை நிவந்து 200
கதிர்செல வொழித்த கனக மாளிகை
முத்துநிரைக் கொடித்தொடர் முழுவதும் வளைஇய
சித்திர விதானத்துச் செய்பூங் கைவினை
இலங்கொளி மணிநிரை யிடையிடை வகுத்த
விலங்கொளி வயிரமொடு பொலந்தகடு போகிய 205
மடையமை செறுவின் வான்பொற் கட்டில்
புடைதிரள் தமனியப் பொற்கா லமளிமிசை
இணைபுண ரெகினத் திளமயிர் செறித்த
துணையணைப் பள்ளித் துயிலாற்றுப் படுத்தாங்கு
எறிந்துகளங் கொண்ட இயறேர்க் கொற்றம் 210
அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர்
தோட்டுணை துறந்த துயரீங் கொழிகெனப்
பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்தச்
சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று
பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான் 215
நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென
அமைவிளை தேறல் மாந்திய கானவன்
கவண்விடு புடையூஉக் காவல் கைவிட
வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த
ஓங்கியல் யானை தூங்குதுயி லெய்த 220
வாகை தும்பை வடதிசைச் சூடிய
வேக யானையின் வழியோ நீங்கெனத்
திறத்திறம் பகர்ந்து சேணோங் கிதணத்துக்
குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்
வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக் 225
கவடி வித்திய கழுதையே ருழவன்
குடவர் கோமான் வந்தான் நாளைப்
படுநுகம் பூணாய் பகடே மன்னர்
அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும்
தொடுப்பேர் உழவ ரோதைப் பாணியும் 230
தண்ணான் பொருநை யாடுந ரிட்ட
வண்ணமுஞ் சுண்ணமும் மலரும் பரந்து
விண்ணுறை விற்போல் விளங்கிய பெருந்துறை
வண்டுண மலர்ந்த மணித்தோட்டுக் குவளை
முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின் 235
முருகுவிரி தாமரை முழுமலர் தோயக்
குருகலர் தாழைக் கோட்டுமிசை யிருந்து
வில்லவன் வந்தான் வியன்பே ரிமயத்துப்
பல்லான் நிரையொடு படர்குவிர் நீரெனக்
காவலன் ஆனிரை நீர்த்துறை படீஇக் 240
கோவலர் ஊதுங் குழலின் பாணியும்
வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக்
குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை
வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம்
கழங்காடு மகளி ரோதை யாயத்து 245
வழங்குதொடி முன்கை மலர ஏந்தி
வானவன் வந்தான் வளரிள வனமுலை
தோள்நலம் உணீஇய தும்பை போந்தையொடு
வஞ்சி பாடுதும் மடவீர் யாமெனும்
அஞ்சொற் கிளவியர் அந்தீம் பாணியும் 250
ஓர்த்துடன் இருந்த கோப்பெருந் தேவி
வால்வளை செறிய வலம்புரி வலனெழ
மாலைவெண் குடைக்கீழ் வாகைச் சென்னியன்
வேக யானையின் மீமிசைப் பொலிந்து
குஞ்சர ஒழுகையிற் கோநக ரெதிர்கொள 255
வஞ்சியுட் புகுந்தனன் செங்குட் டுவனென்.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework