தண்மதி யன்ன தமனிய நெடுங்குடை
மண்ணக நிழற்செய மறவா ளேந்திய
நிலந்தரு திருவின் நெடியோன் றனாது
வலம்படு சிறப்பின் வஞ்சி மூதூர்
ஒண்டொடித் தடக்கையின் ஒண்மலர்ப் பலிதூஉய் 5
வெண்திரி விளக்கம் ஏந்திய மகளிர்
உலக மன்னவன் வாழ்கென் றேத்திப்
பலர்தொழ வந்த மலரவிழ் மாலை
போந்தைக் கண்ணிப் பொலம்பூந் தெரியல்
வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்தர் 10
யானை வெண்கோடு அழுத்திய மார்பும்
நீள்வேல் கிழித்த நெடும்புண் ஆகமும்
எய்கணை கிழித்த பகட்டெழில் அகலமும்
வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பமும்
மைம்மல ருண்கண் மடந்தைய ரடங்காக் 15
கொம்மை வரிமுலை வெம்மை வேதுறீஇ
அகிலுண விரித்த அம்மென் கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ்
மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து
சிதரரி பரந்த செழுங்கடைத் தூதும் 20
மருந்தும் ஆயதிம் மாலையென் றேத்த
இருங்கனித் துவர்வாய் இளநிலா விரிப்பக்
கருங்கயல் பிறழுங் காமர் செவ்வியில்
திருந்தெயி றரும்பிய விருந்தின் மூரலும்
மாந்தளிர் மேனி மடவோர் தம்மால் 25
ஏந்துபூண் மார்பின் இளையோர்க் களித்துக்
காசறைத் திலகக் கருங்கறை கிடந்த
மாசில்வாள் முகத்து வண்டொடு சுருண்ட
குழலுங் கோதையுங் கோலமுங் காண்மார்
நிழல்கால் மண்டிலம் தம்மெதிர் நிறுத்தி 30
வணர்கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇப்
புணர்புரி நரம்பிற் பொருள்படு பத்தர்க்
குரல்குர லாக வருமுறைப் பாலையில்
துத்தங் குரலாத் தொன்முறை யியற்கையின்
அந்தீங் குறிஞ்சி யகவன் மகளிரின் 35
மைந்தர்க் கோங்கிய வருவிருந் தயர்ந்து
முடிபுறம் உரிஞ்சுங் கழற்காற் குட்டுவன்
குடிபுறந் தருங்கால் திருமுகம் போல
உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம்
பலர்புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க 40
மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப
ஐங்கணை நெடுவேள் அரசுவீற் றிருந்த
வெண்ணிலா முன்றிலும் வீழ்பூஞ் சேக்கையும்
மண்ணீட் டரங்கமும் மலர்ப்பூம் பந்தரும்
வெண்கால் அமளியும் விதானவே திகைகளும் 45
தண்கதிர் மதியம் தான்கடி கொள்ளப்
படுதிரை சூழ்ந்த பயங்கெழு மாநிலத்
திடைநின் றோங்கிய நெடுநிலை மேருவிற்
கொடிமதின் மூதூர் நடுநின் றோங்கிய
தமனிய மாளிகைப் புனைமணி யரங்கின் 50
வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதியேர் வண்ணங் காணிய வருவழி
எல்வளை மகளிர் ஏந்திய விளக்கம்
பல்லாண் டேத்தப் பரந்தன வொருசார்
மண்கணை முழவும் வணர்கோட் டியாழும் 55
பண்கனி பாடலும் பரந்தன வொருசார்
மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும்
கூனுங் குறளுங் கொண்டன வொருசார்
வண்ணமுஞ் சுண்ணமும் மலர்ப்பூம் பிணையலும்
பெண்ணணிப் பேடியர் ஏந்தின ரொருசார் 60
பூவும் புகையும் மேவிய விரையும்
தூவியஞ் சேக்கை சூழ்ந்தன வொருசார்
ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும்
சேடியர் செவ்வியின் ஏந்தின ரொருசார்
ஆங்கவள் தன்னுடன் அணிமணி யரங்கம் 65
வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் ஏறித்
திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவும்
செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும்
செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும் 70
பாடகம் பதையாது சூடகந் துளங்காது
மேகலை ஒலியாது மென்முலை அசையாது
வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது
உமையவள் ஒருதிற னாக ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் 75
பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க்
கூத்தச் சாக்கைய னாடலின் மகிழ்ந்தவன்
ஏத்தி நீங்க இருநிலம் ஆள்வோன்
வேத்தியன் மண்டபம் மேவிய பின்னர்
நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80
மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி
வாயி லாளரின் மன்னவற் கிசைத்தபின்
கோயில் மாக்களிற் கொற்றவற் றொழுது
தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே
செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு 85
வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய
சித்திர மண்டபத் திருக்க வேந்தன்
அமரகத் துடைந்த ஆரிய மன்னரொடு
தமரிற் சென்று தகையடி வணங்க
நீளம ரழுவத்து நெடும்பே ராண்மையொடு 90
வாளுங் குடையும் மறக்களத் தொழித்துக்
கொல்லாக் கோலத் துயிருய்ந் தோரை
வெல்போர்க் கோடல் வெற்றம் அன்றெனத்
தலைத்தேர்த் தானைத் தலைவற் குரைத்தனன்
சிலைத்தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை 95
ஆங்குநின் றகன்றபின் அறக்கோல் வேந்தே
ஓங்குசீர் மதுரை மன்னவற் காண
ஆரிய மன்னர் அமர்க்களத் தெடுத்த
சீரியல் வெண்குடைக் காம்புநனி சிறந்த
சயந்தன் வடிவில் தலைக்கோ லாங்குக் 100
கயந்தலை யானையிற் கவிகையிற் காட்டி
இமயச் சிமையத் திருங்குயி லாலுவத்
துமையொரு பாகத் தொருவனை வணங்கி
அமர்க்களம் அரசன தாகத் துறந்து
தவப்பெருங் கோலங் கொண்டோர் தம்மேல் 105
கொதியழற் சீற்றங் கொண்டோன் கொற்றம்
புதுவ தென்றனன் போர்வேற் செழியனென்
றேனை மன்னர் இருவருங் கூறிய
நீண்மொழி யெல்லாம் நீலன் கூறத்
தாமரைச் செங்கண் தழனிறங் கொள்ளக் 110
கோமகன் நகுதலும் குறையாக் கேள்வி
மாடலன் எழுந்து மன்னவர் மன்னே
வாழ்கநின் கொற்றம் வாழ்கவென் றேத்திக்
கறிவளர் சிலம்பிற் றுஞ்சும் யானையின்
சிறுகுரல் நெய்தல் வியுலூ ரெறிந்தபின் 115
ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரி வாயில் நிலைச்செரு வென்று
நெடுந்தேர்த் தானையொ டிடும்பிற்புறத் திறுத்துக்
கொடும்போர் கடந்து நெடுங்கட லோட்டி
உடன்றுமேல் வந்த ஆரிய மன்னரைக் 120
கடும்புனற் கங்கைப் பேர்யாற்று வென்றோய்
நெடுந்தார் வேய்ந்த பெரும்படை வேந்தே
புரையோர் தம்மொடு பொருந்த வுணர்ந்த
அரைச ரேறே யமைகநின் சீற்றம்
மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள் 125
தண்ணான் பெருநை மணலினுஞ் சிறக்க
அகழ்கடல் ஞாலம் ஆள்வோய் வாழி
இகழா தென்சொற் கேட்டல் வேண்டும்
வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு
ஐயைந் திரட்டிச் சென்றதற் பின்னும் 130
அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோ யாயினை
வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்துப்
போந்தைக் கண்ணிநின் னூங்கணோர் மருங்கில்
கடற்கடம் பெறிந்த காவல னாயினும் 135
விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும்
நான்மறை யாளன் செய்யுட் கொண்டு
மேல்நிலை யுலகம் விடுத்தோ னாயினும்
போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கெனக்
கூற்றுவரை நிறுத்த கொற்றவ னாயினும் 140
வன்சொல் யவனர் வளநா டாண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும்
மிகப்பெருந் தானையோடு இருஞ்செரு வோட்டி
அகப்பா எறிந்த அருந்திற லாயினும்
உருகெழு மரபின் அயிரை மண்ணி 145
இருகடல் நீரும் ஆடினோ னாயினும்
சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும்
மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின்
யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய் 150
மல்லன்மா ஞாலத்து வாழ்வோர் மருங்கில்
செல்வம் நில்லா தென்பதை வெல்போர்த்
தண்டமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின்
கண்டனை யல்லையோ காவல் வேந்தே
இளமை நில்லா தென்பதை எடுத்தீங்கு 155
உணர்வுடை மாக்கள் உரைக்க வேண்டா
திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே
நரைமுதிர் யாக்கை நீயுங் கண்டனை
விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும் 160
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும்
விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர்
கலங்கஞர் நரகரைக் காணினுங் காணும்
ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக் 165
கூடிய கோலத் தொருங்குநின் றியலாது
செய்வினை வழித்தாய் உயிர்செலு மென்பது
பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின்
எழுமுடி மார்பநீ யேந்திய திகிரி
வழிவழிச் சிறக்க வயவாள் வேந்தே 170
அரும்பொருட் பரிசிலன் அல்லேன் யானும்
பெரும்பேர் யாக்கை பெற்ற நல்லுயிர்
மலர்தலை யுலகத் துயிர்போகு பொதுநெறி
புலவரை யிறந்தோய் போகுதல் பொறேஎன்
வானவர் போற்றும் வழிநினக் களிக்கும் 175
நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய
பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்
நாளைச் செய்குவம் அறமெனில் இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினு நீங்கும் 180
இதுவென வரைந்து வாழுநா ளுணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவது மில்லை
வேள்விக் கிழத்தி யிவளொடுங் கூடித்
தாழ்கழல் மன்னர் நின்னடி போற்ற
ஊழியோ டூழி யுலகங் காத்து 185
நீடுவா ழியரோ நெடுந்தகை யென்று
மறையோன் மறைநா வுழுது வான்பொருள்
இறையோன் செவிசெறு வாக வித்தலின்
வித்திய பெரும்பதம் விளைந்துபத மிகுத்துத்
துய்த்தல் வேட்கையிற் சூழ்கழல் வேந்தன் 190
நான்மறை மரபின் நயந்தெரி நாவின்
கேள்வி முடித்த வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி
ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் 195
பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத்
தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில்
வேளா விக்கோ மாளிகை காட்டி
நன்பெரு வேள்வி முடித்ததற் பின்னாள்
தம்பெரு நெடுநகர்ச் சார்வதுஞ் சொல்லியம் 200
மன்னவர்க் கேற்பன செய்க நீயென
வில்லவன் கோதையை விருப்புடன் ஏவிச்
சிறையோர் கோட்டஞ் சீமின் யாங்கணும்
கறைகெழு நல்லூர்க் கறைவீடு செய்ம்மென
அழும்பில் வேளோடு ஆயக் கணக்கரை 205
முழங்குநீர் வேலி மூதூர் ஏவி
அருந்திற லரசர் முறைசெயி னல்லது
பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப்
பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை
பார்தொழு தேத்தும் பத்தினி யாகலின் 210
ஆர்புனை சென்னி யரசற் களித்துச்
செங்கோல் வளைய வுயிர்வா ழாமை
தென்புலங் காவல் மன்னவற் களித்து
வஞ்சினம் வாய்த்தபி னல்லதை யாவதும்
வெஞ்சினம் விளியார் வேந்த ரென்பதை 215
வடதிசை மருங்கின் மன்னவ ரறியக்
குடதிசை வாழுங் கொற்றவற் களித்து
மதுரை மூதூர் மாநகர் கேடுறக்
கொதியழற் சீற்றம் கொங்கையின் விளைத்து
நன்னா டணைந்து நளிர்சினை வேங்கைப் 220
பொன்னணி புதுநிழல் பொருந்திய நங்கையை
அறக்களத் தந்தணர் ஆசான் பெருங்கணி
சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று
மேலோர் விழையும் நூனெறி மாக்கள்
பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து 225
இமையவர் உறையும் இமையச் செவ்வரைச்
சிமையச் சென்னித் தெய்வம் பரசிக்
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப் 230
பூப்பலி செய்து காப்பக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக்
கடவுள் மங்கலம் செய்கென ஏவினன்
வடதிசை வணக்கிய மன்னவ ரேறென்.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework