முழை முகத்து இடி அரி வளைத்த அன்ன மள்ளரில்
குழை முகப் புரிசையுள் குருசில் தான் அகப்பட
இழை முகத்து எறி படை இலங்கு வாள் கடல் இடை
மழை முகத்த குஞ்சரம் வாரிஉள் வளைத்தவே.
275

 

அயிலினில் புனைந்த வாள் அழன்று உருத்து உரீஇ உடன்
பயில் கதிர்ப் பருமணிப் பன் மயிர்ச் செய் கேடகம்
வெயில் எனத் திரித்து விண் வழுக்கி வந்து வீழ்ந்தது ஓர்
கயில் அணிக் கதிர் நகைக் கடவுள் ஒத்து உலம்பினான்.
276

 

மாரியின் கடுங் கணை சொரிந்து மள்ளர் ஆர்த்த பின்
வீரியக் குரிசிலும் விலக்கி வெம் கணை மழை
வாரியில் கடிந்து உடன் அகற்ற மற்ற வன்படைப்
பேர் இயல் பெருங் களிறு பின்னி வந்து அடைந்தவே.
277

 

சீற்றம் மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்சரம் நுதல்
கூற்றரும் குருதிவாள் கோடு உற அழுத்தலின்
ஊற்று உடை நெடு வரை உரும் உடன்று இடித்து என
மாற்று அரும் மதக் களிறு மத்தகம் பிளந்தவே.
278

 

வேல் மிடைந்த வேலியும் பிளந்து வெம் கண் வீரரை
வான் மயிர்ச் செய் கேடகத்து இடித்து வாள் வலை அரிந்து
ஊன் உடைக் குருதியுள் உழக்குபு திரி தரத்
தேன் மிடைந்த தாரினான் செங்களம் சிறந்ததே.
279

 

உப்பு உடைய முந் நீர் உடன்று கரை கொல்வது
ஒப்பு உடைய தானையுள் ஒரு தனியன் ஆகி
இப்படி இறை மகன் இரும் களிறு நூற
அப் படையுள் அண்ணலும் அழன்று களிறு உந்தி.
280

 

நீடகம் இருந்த நிழல் நேமி வலன் ஏந்திக்
கேடகம் அறுப்ப நடு அற்று அரவு சேர்ந்து ஆங்கு
ஓடு கதிர் வட்டம் என ஒய் என உலம்பிக்
காடு கவர் தீயின் மிகை சீறுபு வெகுண்டான்.
281

 

நெய்ம் முகம் அணிந்து நிழல் தங்கி அழல் பொங்கி
வைம் முகம் அணிந்த நுதி வாள் அழல வீசி
மைம் முகம் அணிந்த மதயானை தவ நூறிக்
கைம் முதல் துணிந்து களிறு ஆழ அது நோனான்.
282

 

மாலை நுதி கொண்டு மழை மின் என இமைக்கும்
வேலை வலன் ஏந்தி விரி தாமம் அழகு அழியச்
சோலை மயிலார்கள் துணை வெம்முலைகள் துஞ்சும்
கோல வரை மார்பின் உறு கூற்று என எறிந்தான்.
283

 

புண் இடம் கொண்ட எஃகம் பறித்தலின் பொன் அனார் தம்
கண் இடம் கொண்ட மார்பில் தடாயின காது வெள்வேல்
மண் இடம் கொண்ட யானை மருப்பு இடை இட்டு அம்ம
விண் இடம் மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே.
284

 

ஏந்தல் வேல் திருத்த யானை இரிந்தன எரி பொன் கண்ணி
நாந்தக உழவர் நண்ணார் கூற்று என நடுங்கி மள்ளர்
சாய்ந்த பின் தறுகண் ஆண்மைக் கட்டியங் காரன் வேழம்
காய்ந்தனன் கடுக உந்திக் கப்பணம் சிதறினானே.
285

 

குன்றம் மார்பு அரிந்து வெள் வேல் குடுமி மா மஞ்ஞை ஊர்ந்து
நின்ற மால் புருவம் போல நெரி முறி புருவம் ஆக்கிக்
கொன்று அவன் வேழம் வீழ்ப்ப மற்ற போர் களிற்றில் பாய்ந்து
நின்ற மா மள்ளர்க்கு எல்லாம் நீள் முடி இலக்கம் ஆனான்.
286

 

நஞ்சு பதி கொண்ட வள நாக அணையினான் தன்
நெஞ்சு பதி கொண்டு படை மூழ்க நிலம் வீசும்
மஞ்சு தவழ் குன்று அனைய தோள் ஒசித்து மாத்தாள்
குஞ்சரங்கள் நூறிக் கொலை வாள் ஒடித்து நின்றான்.
287

 

ஆர் அமருள் ஆண் தகையும் அன்ன வகை வீழும்
வீரர் எறி வெம் படைகள் வீழ இமையான் ஆய்ப்
பேர் அமருள் அன்று பெருந் தாதையொடும் பேராப்
போர் அமருள் நின்ற இளையோனின் பொலிவு உற்றான்.
288
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework