மடை அவிழ்ந்த வெள்ளி இலை வேல் அம்பு பாய மணிச்
செப்பகம் கடைகின்றவே போல்
தொடை அவிழ்ந்த மாலையும் முத்தும் தோய்ந்த துணை முலையின்
உள் அரங்கி மூழ்கக் காமன்
படை அவிழ்ந்த கண் பனிநீர் பாய விம்மாப்
பருமுத்த நா மழலைக் கிண் கிணியினார்
புடை அவிழ்ந்த கூந்தல் புலவுத் தோயப் பொழி மழையுள்
மின்னுப் போல் புலம்பினாரே.
293

 

அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழக் கிடந்து ஆங்கு
வேந்தன் கிடந்தானைத் தான்
கரிமாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான்
கண்ணீர் கலுழ்ந்து உகுத்த பின்
எரிமாலை ஈமத்து இழுதார் குடம் ஏனை நூறும்
ஏற்பச் சொரிந்து அலறி எம்
பெருமானே எம்மை ஒளித்தியோ என்னாப்
பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார்.
294

 

கையார் வளைகள் புடைத்து இரங்குவார் கதிர் முலைமேல்
ஆரம் பரிந்து அலறுவார்
நெய்யார் கருங் குழல் மேல் மாலை சிந்தி நிலத்து இடுவார்
நின்று திருவில் வீசும்
மையார் கடிப் பிணையும் வார் குழையும் களைந்திடுவார்
கையால் வயிறு அதுக்குவார்
ஐயாவே என்று அழுவார் வேந்தன் செய்த கொடுமை கொடிது
என்பார் கோல் வளையினார்.
295

 

பானாள் பிறை மருப்பின் பைங்கண் வேழம் பகுவாய்
ஓர் பை அணல் மாநாகம் வீழ்ப்பத்
தேன் ஆர் மலர்ச் சோலைச் செவ்வரையின் மேல் சிறு
பிடிகள் போலத் துயர் உழந்து தாம்
ஆனாது அடியேம் வந்து அவ் உலகினில் நின் அடி
அடைதும் என்று அழுது போயினார் எம்
கோனார் பறிப்ப நலம் பூத்த இக் கொடி
இனிப் பூவா பிறர் பறிப்பவே.
296
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework