தகை மதி எழிலை வாட்டும் தாமரைப் பூவின் அங்கண்
புகை நுதி அழல வாள் கண் பொன் அனாள் புல்ல நீண்ட
வகை மலி வரை செய் மார்பின் வள்ளலைக் கண்டு வண் தார்த்
தொகை மலி தொறுவை ஆளும் தோன்றல் மற்று இன்ன கூறும்.
474

 

கேட்டு இது மறக்க நம்பி கேள் முதல் கேடு சூழ்ந்த
நாட்டு இறை விசையை என்னும் நாறு பூம் கொம்பு அனாளை
வேட்டு இறைப் பாரம் எல்லாம் கட்டியங் காரன் தன்னைப்
பூட்டி மற்று அவன் தனாலே பொறி முதல் அடர்க்கப் பட்டான்.
475

 

கோல் இழுக்கு உற்ற ஞான்றே கொடு முடி வரை ஒன்று ஏறிக்
கால் இழுக்கு உற்று வீழ்ந்தே கருந் தலை களையல் உற்றேன்
மால் வழி உளது அன்று ஆயின் வாழ்வினை முடிப்பல் என்றே
ஆலம் வித்து அனையது எண்ணி அழிவினுள் அகன்று நின்றேன்.
476

 

குலத் தொடு முடிந்த கோன்தன் குடி வழி வாரா நின்றேன்
நலத் தகு தொறுவின் உள்ளேன் நாமம் கோவிந்தன் என்பேன்
இலக்கணம் அமைந்த கோதாவரி என இசையில் போந்த
நலத்தகு மனைவி பெற்ற நங்கை கோவிந்தை என்பாள்.
477

 

வம்பு உடை முலையினாள் என் மட மகள் மதர்வை நோக்கம்
அம்பு அடி இருத்தி நெஞ்சத்து அழுத்தி இட்டு அனையது ஒப்பக்
கொம்படு நுசுப்பினாளைக் குறை இரந்து உழந்து நின்ற
நம்படை தம்முள் எல்லாம் நகை முகம் அழிந்து நின்றேன்.
478

 

பாடகம் சுமந்த செம் பொன் சீறடிப் பரவை அல்குல்
சூடகம் அணிந்த முன் கைச் சுடர் மணிப் பூணினாளை
ஆடகச் செம் பொன் பாவை ஏழுடன் தருவல் ஐய
வாடலில் வதுவை கூடி மணமகன் ஆக என்றான்.
479

 

வெண்ணெய் போன்று ஊறு இனியள் மேம் பால் போல் தீம் சொல்லள்
உண்ண உருக்கிய வான் நெய் போல் மேனியள்
வண்ண வனமுலை மாதர் மட நோக்கி
கண்ணும் கருவிளம் போது இரண்டே கண்டாய்.
480

 

சேதா நறு நெய்யும் தீம்பால் சுமைத் தயிரும்
பாதாலம் எல்லா நிறைத்திடுவல் பைந்தாரோய்
போது ஆர் புனை கோதை சூட்டு உன் அடித்தியை
யாது ஆவது எல்லாம் அறிந்து அருளி என்றான்.
481

 

குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி
நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன்
நில மகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை
இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே.
482
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework