சுடர் சினம் தணிந்து குன்றம் சேர
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக
எல்லை பைபயக் கழிப்பி முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின் நன்றும்
அறியேன் வாழி தோழி அறியேன்
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன என்
நிறை அடு காமம் நீந்துமாறே
பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து
ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework