"அகல் ஆங்கண் இருள் நீங்க, அணி நிலாத் திகழ்ந்த பின்பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல், நகல் இன்று
நல் நுதல் நீத்த திலகத்தள், 'மின்னி
மணி பொரு பசும் பொன் கொல்? மா ஈன்ற தளிரின் மேல்
கணிகாரம் கொட்கும் கொல்?' என்றாங்கு அணி செல,
மேனி மறைத்த பசலையள், ஆனாது
நெஞ்சம் வெறியா நினையா, நிலன் நோக்கா,
அஞ்சா, அழாஅ, அரற்றா, இ·து ஒத்தி
என் செய்தாள் கொல்?" என்பீர் - கேட்டீமின்- பொன் செய்தேன்.
மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது,
அறை கொன்று, மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச,
பறை அறைந்தாங்கு, ஒருவன் நீத்தான் - அவனை
அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின், யானும்
நிறை உடையேன் ஆகுவேன் மன்ற - மறையின் என்
மென் தோள் நெகிழ்த்தானை மேஎய், அவன் ஆங்கண்
சென்று, சேண் பட்டது என் நெஞ்சு.
'ஒன்றி முயங்கும்' என்று, என் பின் வருதிர்; மற்று ஆங்கே
'உயங்கினாள்' என்று, ஆங்கு உசாதிர்; 'மற்று அந்தோ
மயங்கினாள்!' என்று மருடிர்; கலங்கன்மின் -
இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை
என் உயிர் காட்டாதோ மற்று?
'பழி தபு ஞாயிறே! பாடு அறியாதார் கண்
கழியக் கதழ்வை' எனக் கேட்டு, நின்னை
வழிபட்டு இரக்குவேன் வந்தேன் - என் நெஞ்சம்
அழியத் துறந்தானைச் சீறும்கால் என்னை
ஒழிய விடாதீமோ என்று.
அழிதக, மாஅம் தளிர் கொண்ட போழ்தினான், இவ் ஊரார்
தாஅம் தளிர் சூடித் தம் நலம் பாடுப;
ஆஅம் தளிர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின்,
யாஅம் தளிர்க்குவேம் மன்.
நெய்தல் நெறிக்கவும் வல்லன்; நெடு மென் தோள்
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன்; இள முலை மேல்
தொய்யில் எழுதவும் வல்லன்; தன் கையில்
சிலை வல்லான் போலும் செறிவினான்; நல்ல
பல வல்லன் - தோள் ஆள்பவன்.
நினையும் என் உள்ளம் போல், நெடும் கழி மலர் கூம்ப,
இனையும் என் நெஞ்சம் போல், இனம் காப்பார் குழல் தோன்றச்
சாய என் கிளவி போல், செவ்வழி யாழ் இசை நிற்ப,
போய என் ஒளியே போல், ஒரு நிலையே பகல் மாய,
காலன் போல் வந்த கலக்கத்தோடு என் தலை
மாலையும் வந்தன்று, இனி.
இருளொடு யான் ஈங்கு உழப்ப, என் இன்றிப் பட்டாய்,
அருள் இலை! வாழி! - சுடர்!
ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின்,
மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து
வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் வாய் எனின்,
யாண்டும் உடையேன் இசை.
ஊர் அலர் தூற்றும்; இவ் உய்யா விழுமத்துப்
பீர் அலர் போல பெரியப் பசந்தன -
நீர் அலர் நீலம் என, அவர்க்கு, அஞ்ஞான்று,
பேர் அஞர் செய்த என் கண்.
தன் உயிர் போலத் தழீஇ, உலகத்து
மன் உயிர் காக்கும் இம் மன்னனும் என் கொலோ -
இன் உயிர் அன்னானைக் காட்டி, எனைத்து ஒன்றும்
என் உயிர் காவாதது?
என ஆங்கு,
மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள்,
பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேரத்,
தென்னவன் தெளித்த தேஎம் போல,
இன் நகை எய்தினள், இழந்த தன் நலனே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework