தெரி இணர் ஞாழலும் தேம் கமழ் புன்னையும்,புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும்,
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப, இரும் தும்பி இயைபு ஊதச் -
செரு மிகு நேமியான் தார் போலப் பெரும் கடல்
வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப;
கொடும் கழி வளைஇய குன்று போல், வால் எக்கர்,
நடுங்கு நோய் தீர, நின் குறி வாய்த்தாள் என்பதோ -
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க,
இடும்பையோடு இனைபு ஏங்க, இவளை நீ துறந்ததை!
குறி இன்றிப் பல்நாள், நின் கடும் திண் தேர் வருபதம் கண்டு,
எறி திரை இமிழ் கானல், எதிர்கொண்டாள் என்பதோ -
அறிவு அஞர் உழந்து ஏங்கி, ஆய் நலம் வறிது ஆகச்
செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை!
காண்வர இயன்ற இக் கவின் பெறு பனித் துறை,
யாமத்து வந்து, நின் குறி வாய்த்தாள் என்பதோ -
வேய் நலம் இழந்த தோள் விளங்கு இழை பொறை ஆற்றாள்,
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை!
அதனால்;
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர,
'உரவுக் கதிர் தெறும்' என, ஓங்கு திரை விரைபு, தன்
கரை அமல் அடும்பு அளித்தாஅங்கு -
உரவு நீர்ச் சேர்ப்ப! - அருளினை அளிமே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework