பல் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரைஇன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இரும் தும்ப,
உண் துறை உடைந்த பூப் புனல் சாய்ப்பப், புலந்து ஊடிப்
பண்பு உடை நல் நாட்டுப் பகை தலை வந்தென,
அது கைவிட்டு அகன்று ஒரீஇக், காக்கிற்பான் குடை நீழல்
பதி படர்ந்து, இறைகொள்ளும் குடி போலப் - பிறிதும் ஒரு
பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான், மொய் தப
இறை பகை தணிப்ப அக் குடி பதிப் பெயர்ந்தாங்கு,
நிறை புனல் நீங்க வந்து, அத்தும்பி அம் மலர்ப்
பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர!
'நீக்கும்கால் நிறம் சாய்ந்து, புணரும்கால் புகழ் பூத்து
நாம் கொண்ட குறிப்பு, இவள் நலம்' என்னும் தகையோ தான் -
எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார்ப் புணர்ந்தமை
கரி கூறும் கண்ணியை, ஈங்கு எம் இல் வருவதை?
'சுடர் நோக்கி மலர்ந்து, ஆங்கே படின் கூம்பும் மலர் போல், என்
தொடர் நீப்பின், தொகும், இவள் நலம்' என்னும் தகையோ தான் -
அலர் நாணிக் கரந்த நோய் கைம்மிகப், பிறர் கூந்தல்
மலர் நாறும் மார்பினை, ஈங்கு எம் இல் வருவதை?
'பெயின் நந்தி, வறப்பின் சாம், புலத்திற்குப் பெயல் போல் யான்
செலின் நந்திச், செறின் சாம்பும், இவள்' என்னும் தகையோ தான்-
முடி உற்ற கோதை போல் யாம் வாட, ஏதிலார்
தொடி உற்ற வடுக் காட்டி, ஈங்கு எம் இல் வருவதை?
ஆங்க,
ஐய! அமைந்தன்று; அனைத்து ஆகப் புக்கீமோ,
வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆகக், கையின்
முகை மலர்ந்தன்ன முயக்கில் தகை இன்றே,
தண் பனி வைகல் எமக்கு?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework