அகல் துறை அணிபெறப் புதலொடு தாழ்ந்தபகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை,
கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தால்
தண் கமழ் நறும் தேறல் உண்பவள் முகம் போல,
வண் பிணி தளை விடூஉம் வயல் அணி நல் ஊர!
'நோதக்காய்' என நின்னை நொந்தீவார் இல் வழித்,
'தீது இலேன் யான்' எனத் தேற்றிய வருதிமன் -
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலைத் தாது சோர்ந்து,
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையாக்கால்?
கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்வழி,
'மனத்தில் தீது இலன்' என மயக்கிய வருதிமன் -
அலமரல் உண் கண்ணார் ஆய் கோதை குழைத்த நின்
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால்?
என்னை நீ செய்யினும், உரைத்தீவார் இல் வழி,
முன் அடிப் பணிந்து, எம்மை உணர்த்திய வருதிமன் -
நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக் கொள்ளக்,
கரை இடைக் கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால்?
என ஆங்கு,
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின்
தண்டாப் பரத்தை தலைக் கொள்ள, நாளும்
புலத் தகைப் பெண்டிரைத் தேற்ற; மற்று யாம் எனின்,
தோலாமோ நின் பொய் மருண்டு?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework