இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇச்,
சேடு இயல் வள்ளத்துப் பெய்த பால் சில காட்டி,
ஊடும் மெல் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போலப் ,
புது நீர புதல் ஒற்றப், புணர் திரைப் பிதிர் மல்க,
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணிக்,
கடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின்
வடி தீண்ட, வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர!
கண்ணி, நீ கடி கொண்டார்க் கனைதொறும், யாம் அழப்,
பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ -
'பேணான்' என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான்,
மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை?
நாடி நின் தூது ஆடித், துறைச் செல்லாள், ஊரவர்
ஆடை கொண்டு, ஒலிக்கும், நின் புலைத்தி காட்டு என்றாளோ -
கூடியார் புனல் ஆடப் புணை ஆய மார்பினில்,
ஊடியார் எறிதர ஒளி விட்ட அரக்கினை?
வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும்
அறிவு உடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோ -
களி பட்டார் கமழ் கோதை கயம்பட்ட உருவின் மேல்
குறி பெற்றார் குரல் கூந்தல் கோடு உளர்ந்த துகளினை?
என ஆங்கு,
செறிவுற்றேம்; எம்மை நீ செறிய, அறிவுற்று,
அழிந்து உகு நெஞ்சத்தேம், அல்லல் உழப்பக்
கழிந்தவை உள்ளாது, கண்ட இடத்தே,
அழிந்து நின் பேணிக் கொளலின் இழிந்ததோ -
இந் நோய் உழத்தல் எமக்கு?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework