விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தரப்புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி,
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் -
துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார,
இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு,
நனி விரைந்து அளித்தலின், நகுபவள் முகம் போலப் -
பனி ஒரு திறம் வாரப், பாசடைத் தாமரைத்
தனி மலர் தளை விடூஉம் தண் துறை நல் ஊர!
'ஒரு நீ, பிறர் இல்லை, அவன் பெண்டிர்' என உரைத்துத்,
தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான் கொல் -
ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண்
பாரித்துப் புணர்ந்த நின் பரத்தைமை காணிய?
'மடுத்து அவன் புகு வழி மறையேன்' என்று, யாழொடும்
எடுத்துச் சூள் பல உற்ற பாணன் வந்தீயான் கொல் -
அடுத்துத் தன் பொய் உண்டார்ப் புணர்ந்த நின் எருத்தின் கண்
எடுத்துக் கொள்வது போலும் தொடி வடு காணிய?
'தணந்தனை' எனக் கேட்டுத், தவறு ஓராது, எமக்கு நின்
குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான் கொல் -
கணம் குழை நல்லவர் கதுப்பு அறல் அணைத் துஞ்சி,
அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய?
என்று நின்,
தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர்
யார்? - நீ வரு நாள் போல் அமைகுவம் யாம்; புக்கீமோ! -
மாரிக்கு அவாவுற்றுப் பீள் வாடும் நெல்லிற்கு, ஆங்கு
ஆராத் துவலை அளித்தது போலும், நீ
ஓர் யாட்டு ஒரு கால் வரவு.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework