மீன் ஏறு உயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பில்
ஆனேறு அனையான் உளன் சீவகசாமி என்பான்
வான் ஏற நீண்ட புகழான் சரிதம் தன்னைத்
தேன் ஊற நின்று தெருண்டார் அவை செப்பல் உற்றேன்.
6

 

கோடாத செங்கோல் குளிர் வெண்குடைக் கோதை வெள்வேல்
ஓடாத தானை உருமுக் குரல் ஓடை யானை
வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப மன்னன்
வீடாத கற்பின் அவன் தேவி விசயை என்பாள்.
7

 

சேந்து ஒத்து அலர்ந்த செழுந்தாமரை அன்ன வாள் கண்
பூந்தொத்து அலர்ந்த பசும் பொன் கொடி அன்ன பொற்பின்
ஏந்து ஒத்து அலர்ந்த முலையின் அமிர்து அன்ன சாயல்
வேந்தற்கு அமுதாய் விளையாடுதற்கு ஏது வாமே.
8

 

கல்லார் மணிப் பூண் அவன் காமம் கனைந்து கன்றிச்
சொல்லாறு கேளான் நனி சூழ்ச்சியில் தோற்ற வாறும்
புல்லார் புகலப் பொறி மஞ்ஞையில் தேவி போகிச்
செல் ஆறு இழுக்கிச் சுடுகாடு அவள் சேர்ந்த வாறும்,
9

 

நாள் உற்று நம்பி பிறந்தான் திசை பத்தும் நந்தத்
தோள் உற்று ஓர் தெய்வம் துணையாய்த் துயர் தீர்த்த வாறும்
கோள் உற்ற கோன் போல் அவன் கொண்டு வளர்த்த வாறும்
வாள் உற்ற கண்ணாள் மகன் வாழ்க என நோற்ற வாறும்,
10

 

நெஞ்சம் புணையாக் கலை மாக் கடல் நீந்தி ஆங்கே
வஞ்சம் மறவர் நிரை வள்ளல் விடுத்த வாறும்
விஞ்சைக்கு இறைவன் மகள் வீணையில் தோற்ற வாறும்
நஞ்சு உற்ற காம நனி நாகரில் துய்த்த வாறும்,
11

 

முந்நீர்ப் படு சங்கு அலற முரசு ஆர்ப்ப மூதூர்ச்
செந்நீர்க் கடியின் விழவாட்டினுள் தேங்கொள் சுண்ணம்
மைந்நீர் நெடுங்கண் இரு மங்கையர் தம்முள் மாறாய்
இந்நீர்ப் படியேம் இவை தோற்றனம் என்ற வாறும்,
12

 

சுண்ணம் உடைந்து சுரமஞ்சரி சோர்ந்து தோழி
வண்ணம் நெடுங் கண் குண மாலையை வைது மாறிப்
புண் மேல் புடையில் புகைந்து ஆண் உரு யாதும் நோக்காள்
கண் நோக்கு உடைந்து கடிமாடம் அடைந்த வாறும்,
13

 

பொன் துஞ்சு மார்பன் புனல் ஆட்டிடைப் புன்கண் எய்தி
நின்று எஞ்சுகின்ற ஞமலிக்கு அமிர்து ஈந்த வாறும்
அன்றைப் பகலே குண மாலையை அச்சுறுத்த
வென்றிக் களிற்றை விரிதார் அவன் வென்ற வாறும்,
14

 

தேன் ஊறு தீம் சொல் குண மாலையைச் சேர்ந்த வாறும்
கோன் ஊறு செய்வான் கருதிச் சிறை கொண்ட வாறும்
வான் ஆறு இழிந்து மழை மின் என வந்த ஓர் தேவன்
ஊன் நாறு ஔத வேல் உரவோன் கொண்டு எழுந்த வாறும்,
15

 

தேங்காத மள்ளர் திரள் தோள் இணை சிக்க யாத்த
பூங் கச்சு நீக்கிப் பொறி மாண்கலம் நல்ல சேர்த்தி
நீங்காத காதல் உடையாய் நினைக்க என்று பின்னும்
பாங்கு ஆய விஞ்சை பணித்து ஆங்கு விடுத்த வாறும்,
16

 

பைந் நாகப் பள்ளி மணி வண்ணனின் பாயல் கொண்டு
கைந் நாகம் துஞ்சும் கமழ் காந்தள் அம் சாரல் போகி
மைந் நாக வேலி மணி பல்லவ தேயம் நண்ணிக்
கொய்ந் நாகச் சோலைக் கொடி அந் நகர் புக்க வாறும்,
17

 

அத்தம் அனைய களிற்று அந் நகர் மன்னன் மங்கை
முத்தம் உரிஞ்சும் முகிழ் மென் முலை மின் அனாளைப்
பைத்து அங்கு ஓர் நாகம் பனி மா மதி என்று தீண்டச்
சித்தம் குழையற்க எனத் தீர்த்து அவள் சேர்ந்த வாறும்,
18

 

பொன் பூண் சுமந்த புணர் மெல் முலைக் கோடு போழ
நல் பூங் கழலான் இரு திங்கள் நயந்த வாறும்
கல் பாடு அழித்த கன மா மணித் தூண் செய் தோளான்
வெற்பு ஊடு அறுத்து விரைவின் நெறிக் கொண்ட வாறும்.
19

 

தள்ளாத சும்மை மிகு தக்க நல் நாடு நண்ணி
விள்ளா விழுச்சீர் வணிகன் மகள் வேல் கண் நோக்கம்
உள் ஆவி வாட்ட உயிர் ஒன்று ஒத்து உறைந்த வாறும்
கள் ஆவி நாறும் கமழ் கோதையின் போய வாறும், 20

 

இன்னீர் அமிர்து அன்னவள் கண் இணை மாரி கற்பப்
பொன் ஊர் கழலான் பொழி மா மழைக் காடு போகி
மின்னீர் வெள் வேலவன் மத்திம தேய மன்னன்
கொன்னூர் கொடு வெம் சிலை கண்டு எதிர் கொண்ட வாறும்,
21

 

திண் தேர் அரசர் திறல் சிங்கங்கள் வில்லும் வாளும்
கண்டு ஆங்கு உவந்து கடி பெய்து இவண் காத்தும் என்று
கொண்டார் குடங்கை அளவே உள கண்ணினாளைப்
புண் தாங்கு எரிவேல் இளையோற்குப் புணர்த்த வாறும்,
22

 

மதியம் கெடுத்த வய மீன் எனத் தம்பி மாழாந்து
உதிதற்கு உரியாள் பணியால் உடன் ஆய வாறும்
நிதியின் நெறியின் அவன் தோழர் நிரந்த வாறும்
பதியின் அகன்று பயந்தாளைப் பணிந்த வாறும்,
23

 

கண் வாள் அறுக்கும் கமழ்தார் அவன் தாயொடு எண்ணி
விண் வாள் அறுக்கும் நகர் வீதி புகுந்த வாறும்
மண் மேல் விளக்காய் வரத்தில் பிறந்தாள் ஒர் கன்னிப்
பெண் ஆர் அமிர்தின் பெரு வாரியுள் பட்ட வாறும்,
24

 

துஞ்சா மணிப் பூண் சுரமஞ்சரி என்னும் நாமத்து
அம் சாயல் பூத்த அகிலார் துகிலாய் பொன் அல்குல்
எஞ்சாத இன்பக் கொடி தாழ்த்ததும் பன்றி எய்து
நஞ்சு ஊறும் வேலான் பகை நாம் அறக் கொன்ற வாறும்,
25

 

புண் தோய்த்து எடுத்த பொரு வேல் எனச் சேந்து நீண்ட
கண் போன்ற மாமன் மகள் கண் மணிப் பாவை அன்ன
பெண் பால் அமிர்தின் நலம் பெற்றதும், பொற்பச் செங்கோல்
தண் பால் மதி தோய் குடை தண் நிழல் பாய வாறும்,
26

 

திறை மன்னர் உய்ப்பத் திரு நிற்பச் செங்கோல் நடப்பக்
குறைவு இன்றிக் கொற்றம் உயரத் தெவ்வர் தேர் பணிய
உறைகின்ற காலத்து அறம் கேட்டு உரும் உற்ற பாம்பின்
அறிவன் அடிக் கீழ் அரசு அஞ்சித் துறந்த வாறும்,
27

 

கோணைக் களிற்றுக் கொடித் தேர் இவுளிக் கடல் சூழ்
வாள் மொய்த்த தானை அவன் தம்பியும் தோழன் மாரும்
பூண் மொய்த்த பொம்மல் முலையாரும் புலம் துறப்ப
வீணைக் கிழவன் விருந்து ஆர் கதிச் சென்ற வாறும்,
28

 

தேன் வாய் உமிழ்ந்த அமிர்து உண்டவன் போன்று செல்வன்
வான் வாய் வணக்கும் நலத்தார் முலை போகம் வேண்டான்
ஏனோரும் ஏத்த அவன் எய்திய இன்ப வெள்ளம்
ஈனோர்க்கு உரைப்பாம் பதிகத்துள் இயன்ற வாறே,
29
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework