வேக யானை மீளி வேல் வெய்ய தானை ஐய கோல்
மாகம் நீள் மணிமுடி மாரி வண்கை மாசு இல் சீர்
ஏக ஆணை வெண் குடை இந் நகர்க்கு மன்னவன்
நாக நீர நல் நகர் நன்மை தன்னம் செப்புவாம்.
141

 

நீள் நிலம் வகுத்து நீர் நிரந்து வந்து இழிதரச்
சேண் நிலத்து இயற்றிய சித்திரச் சுருங்கை சேர்
கோள் நிலத்து வெய்யவாம் கொடும் சுறத் தடம் கிடங்கு
பூண் நிலத்து வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்ததே.
142

 

இஞ்சி மாகம் நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின்
மஞ்சு சூழ்ந்து கொண்டு அணிந்து மாக நீண்ட நாகமும்
அஞ்சு நின்னை என்றலின் ஆண்டு நின்று நீண்ட தன்
குஞ்சி மாண் கொடிக் கையால் கூவி விட்டது ஒத்ததே.
143

 

முத்து மாலை முப்புரி மூரி மா மணிக் கதவு
ஒத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்று ஒளிர்வன
சத்தி நெற்றி சூட்டிய தாம நீள் மணிவணன்
தத்து ஒளி மணிமுடி தாமம் நால்வ போலுமே.
144

 

சங்கு விம்மு நித்திலம் சாந்தொடு ஏந்து பூண் முலைக்
கொங்கு விம்மு கோதை தாழ் கூந்தல் ஏந்து சாயலார்
இங்கிதக் களிப்பினால் எய்தி ஆடும் பூம் பொழில்
செங் கண் இந்திரன் நகர்ச் செல்வம் என்னது அன்னதே.
145

 

வெள்ளி யானை மென் பிடி மின் இலங்கு பைம் பொனால்
துள்ளும் மான் ஒருத்தலும் செம் பொன் அம் பொன் மான்பிணை
உள்ளு காமம் உள் சுட வேந்தன் ஆங்கு உறைவது ஓர்
பள்ளி மாட மண்டபம் பசுங்கதிர்ப்ப வண்ணமே.
146

 

கோழ் அரை மணி மடல் கூந்தல் நெற்றி ஏந்திய
மாழையம் திரள் கனி மா மணி மரகதம்
சூழ் குலைப் பசுங்கமுகு சூலு பாளை வெண் பொனால்
ஊழ் திரள் மணிக் கயிறு ஊசல் ஆட விட்டதே.
147

 

மென் தினைப் பிறங்கலும் மிளிர்ந்து வீழ் அருவியும்
குன்று அயல் மணிச் சுனைக் குவளை கண் விழிப்பவும்
நின்று நோக்கு மான் பிணை நீல யானை மன்னவன்
கன்று காமம் வெஃகிய காமர் காம பூமியே.
148

 

தீம் குயில் மணந்து தேன் துஞ்ச வண்டு பாண் செய
வேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த சந்தனம்
ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும்
நீங்க நீங்கும் இன் உயிர் நினைப்பின் நின்று இளஃகுமே.
149

 

முத்தம் வாய் புரித்தன மொய் கதிர்ப் பசும் பொனால்
சித்திரத்து இயற்றிய செல்வம் மல்கு பன் மணி
பத்தியில் குயிற்றி வான் பதித்து வைத்த போல்வன
இத்திறத்த பந்து எறிந்து இளையர் ஆடு பூமியே.
150

 

வைத்த பந்து எடுத்தலும் மாலையுள் கரத்தலும்
கைத்தலத்தின் ஓட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும்
பத்தியில் புடைத்தலும் பை அரவின் ஆடலும்
இத்திறத்த பந்தினோடு இன்பம் எல்லை இல்லையே.
151

 

கூற்றம் அன்ன கூர் நுதிக் குருதி வான் மருப்பு இடைச்
சீற்றம் உற்ற மன்னர் தம் சென்னி பந்து அடிப்பன
ஊற்று இருந்த மும் மதத்து ஓடை யானை பீடுசால்
காற்று இயல் புரவி தேர் கலந்து கௌவை மல்கின்றே.
152

 

கவ்வை அம் கருவி சூழ்ந்து கண் படுக்கும் மாடமும்
தெவ்வர் தந்த நீள் நிதி செம் பொன் மாடமும்
மவ்வல் அம் குழலினார் மணிக்கலம் பெய் மாடமும்
இவ் வலந்த அல்லவும் இடங்கள் எல்லை இல்லையே.
153

 

பூத்த கோங்கும் வேங்கையும் பொன் இணர் செய் கொன்றையும்
காய்த்து நின்று கண் தெறூஉம் காமர் வல்லி மாதரார்
கூத்து அறாத பள்ளியும் கொற்றம் அன்ன மங்கையர்
ஏத்தல் சான்ற கோயிலும் இடைப் படுத்து இயன்றவே.
154

 

கந்து மா மணித்திரள் கடைந்து செம் பொன் நீள் சுவர்ச்
சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வேய்ந்து வெண் பொனால்
இந்திரன் திரு நகர் உரிமையோடு இவ்வழி
வந்து இருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே.
155

 

ஆடலின் அரவமும் அங்கை கொட்டி நெஞ்சு உணப்
பாடலின் அரவமும் பணை முழவு அரவமும்
கூடு கோலத் தீம் சுவைக் கோல யாழ் அரவமும்
வாடல் இல்ல ஓசையால் வைகல் நாளும் வைகிற்றே.
156
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework