எரி முயங்கு இலங்கு வை வேல் இளையவர் குழாத்தின் நீங்கித்
திரு முயங்கு அலங்கல் மார்பின் சீவகன் கொண்டு வேறா
விரி மலர்க் கண்ணி கட்டி விழைதக வேய்ந்த போலும்
தெரி மலர்க் காவு சேர்ந்து பிறப்பினைத் தெருட்டல் உற்றான்.
383

 

பூவையும் கிளியும் மன்னர் ஒற்றென புணர்க்கும் சாதி
யாவையும் இன்மை ஆராய்ந்து அம் தளிர்ப் பிண்டி நீழல்
பூ இயல் தவிசின் உச்சிப் பொலிவினோடு இருந்த போழ்தில்
ஏ இயல் சிலையினானை இப் பொருள் கேண்மோ என்றான்.
384

 

வையகம் உடைய மன்னன் சச்சந்தன் அவற்குத் தேவி
பை விரி பசும்பொன் அல்குல் பைந்தொடி விசையை என்பாள்
செய் கழல் மன்னன் தேர்ந்து தேவியைப் பொறியில் போக்கி
மையல் கொள் நெஞ்சில் கல்லா மந்திரி விழுங்கப் பட்டான்.
385

 

புலம்பொடு தேவி போகிப் புகற்கு அருங் காடு நண்ணி
வலம்புரி உலகம் விற்கும் மா மணி ஈன்றது என்ன
இலங்கு இழை சிறுவன் தன்னைப் பயந்து பூந் தவிசின் உச்சி
நலம் புரி நங்கை வைத்து நல் அறம் காக்க என்றாள்.
386

 

வானத்தின் வழுக்கித் திங்கள் கொழுந்து மீன் குழாங்கள் சூழக்
கானத்தில் கிடந்ததே போல் கடல் அகம் உடைய நம்பி
தானத்து மணியும் தானும் இரட்டுறத் தோன்றி னானே
ஊனத்தில் தீர்ந்த சீர்த்தி உத்திரட்டாதி யானே.
387

 

அருந் தவன் முந்து கூற அலங்கல் வேல் நாய்கன் சென்று
பொருந்துபு சிறுவன் கொண்டு பொலிவொடு புகன்று போகத்
திருந்திய நம்பி ஆரத் தும்மினன் தெய்வம் வாழ்த்திற்று
அரும் பொனாய் கேண்மோ என்றான் அலை கடல் விருப்பில் கொண்டாள்.
388

 

கரியவன் கன்னற்கு அன்று பிறப்பினைத் தேற்றி ஆங்கு அப்
பெரியவன் யாவன் என்ன நீ எனப் பேசலோடும்
சொரி மலர்த் தாரும் பூணும் ஆரமும் குழையும் சோரத்
திரு மலர்க் கண்ணி சிந்தத் தெருமந்து மயங்கி வீழ்ந்தான்.
389

 

கற்பகம் கலங்கி வீழ்ந்த வண்ணம் போல் காளை வீழச்
சொல் பகர் புலவன் வல்லே தோன்றலைச் சார்ந்து புல்லி
நல் பல குழீஇய தம்மால் நவை அறத் தேற்றத் தேறிக்
கல் புனை திணி திண் தோளான் கவலை நீர்க் கடலுள் பட்டான்.
390

 

இனையை நீ ஆயது எல்லாம் எம்மனோர் செய்த பாவம்
நினையல் நீ நம்பி என்று நெடுங் கண் நீர் துடைத்து நீவிப்
புனை இழை மகளிர் போலப் புலம்பல் நின் பகைவன் நின்றான்
நினைவு எலாம் நீங்குக என்ன நெடும் தகை தேறினானே.
391

 

மலை பக இடிக்கும் சிங்கம் மடங்கலின் மூழங்கி மாநீர்
அலை கடல் திரையின் சீறி அவன் உயிர் பருகல் உற்றுச்
சிலையொடு பகழி ஏந்திக் கூற்று எனச் சிவந்து தோன்றும்
இலை உடைக் கண்ணியானை இன்னணம் விலக்கினானே.
392

 

வேண்டுவல் நம்பி யான் ஓர் விழுப் பொருள் என்று சொல்ல
ஆண் தகைக் குரவீர் கொண்மின் யாது நீர் கருதிற்று என்ன
யாண்டு நேர் எல்லை ஆக அவன் திறத்து அழற்சி இன்மை
வேண்டுவல் என்று சொன்னான் வில் வலான் அதனை நேர்ந்தான்.
393

 

வெவ் வினை வெகுண்டு சாரா விழுநிதி அமிர்தம் இன்னீர்
கவ்விய எஃகின் நின்ற கயக்கமில் நிலைமை நோக்கி
அவ்வியம் அகன்று பொங்கும் அழல் படு வெகுளி நீக்கி
இவ் இயல் ஒருவற்கு உற்றது இற்றெனக் கிளக்கல் உற்றான்.
394
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework