'இன்னும் கேளாய் இளங்கொடி மாதே!
அந் நாள் அவனை ஓம்பிய நல் ஆத்
தண்ணென் சாவகத் தவள மால் வரை
மண்முகன் என்னும் மா முனி இடவயின்
பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது
தன் நலம் பிறர் தொழத் தான் சென்று எய்தி
ஈனாமுன்னம் இன் உயிர்க்கு எல்லாம்
தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும்
மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த
ஆன்ற முனிவன்" அதன் வயிற்று அகத்து
15-010
மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும்
உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும்
குடர்த் தொடர் மாலை பூண்பான் அல்லன்
அடர்ப் பொன் முட்டை அகவையினான்" என
பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய
மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன்
தற்காத்து அளித்த தகை ஆ அதனை
ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின்
ஆங்கு அவ் ஆ வயிற்று அமரர் கணம் உவப்பத்
தீம் கனி நாவல் ஓங்கும் இத் தீவினுக்கு
15-020
ஒரு தான் ஆகி உலகு தொழத் தோன்றினன்
பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள் நீ
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து
ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து
மண்அகம் எல்லாம் மாரி இன்றியும்
புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது
"போதி மாதவன் பூமியில் தோன்றும்
காலம் அன்றியும் கண்டன சிறப்பு" என
15-030
சக்கரவாளக் கோட்டம் வாழும்
மிக்க மாதவர் விரும்பினர் வியந்து
"கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய
அந்தில் பாவை அருளும் ஆயிடின்
அறிகுவம்" என்றே செறி இருள் சேறலும்
"மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன்
தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன்
ஆங்கு அவன் தன் திறம் அறவணன் அறியும்" என்று
ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள்
மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும்
15-040
புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி
"மக்களை இல்லேன் மாதவன் அருளால்
பெற்றேன் புதல்வனை" என்று அவன் வளர்ப்ப
அரைசு ஆள் செல்வம் அவன்பால் உண்மையின்
நிரை தார் வேந்தன் ஆயினன் அவன் தான்
துறக்க வேந்தன் துய்ப்பிலன்கொல்லோ?
அறக் கோல் வேந்தன் அருளிலன்கொல்லோ
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும்
நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம்
அலத்தல்காலை ஆகியது ஆய் இழை!
15-050
> வெண் திரை தந்த அமுதை வானோர்
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு
வறன் ஓடு உலகின் வான் துயர் கெடுக்கும்
அறன் ஓடு ஒழித்தல் ஆய் இழை! தகாது' என
மாதவன் உரைத்தலும் மணிமேகலை தான்
தாயர் தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி
கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு
பிக்குணிக் கோலத்துப் பெருந் தெரு அடைதலும்
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர்க் குறுமாக்களும்
மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும்
15-060
கொடிக் கோசம்பிக் கோமகன் ஆகிய
வடித் தேர்த் தானை வத்தவன் தன்னை
வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய
உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன்
உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு
பரிவுறு மாக்களின் தாம் பரிவு எய்தி
'உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த
மதுமலர்க் குழலாள் வந்து தோன்றி
பிச்சைப் பாத்திரம் கையின் ஏந்தியது
திப்பியம்' என்றே சிந்தை நோய் கூர
15-070
மண மனை மறுகில் மாதவி ஈன்ற
அணி மலர்ப் பூங் கொம்பு 'அகம் மலி உவகையின்
பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம்
பிச்சை ஏற்றல் பெருந் தகவு உடைத்து' எனக்
'குளன் அணி தாமரைக் கொழு மலர் நாப்பண்
ஒரு தனிஓங்கிய திருமலர் போன்று
வான் தருகற்பின் மனை உறை மகளிரின்
தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ
ஆதிரை நல்லாள்? அவள் மனை இம் மனை
நீ புகல்வேண்டும் நேர் இழை!' என்றனள்
15-080
> வட திசை விஞ்சை மா நகர்த் தோன்றித்
தென் திசைப் பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை
மாதவன் தன்னால் வல் வினை உருப்ப
சாவம் பட்டு தனித் துயர் உறூஉம்
வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும்
காயசண்டிகை எனும் காரிகை தான் என்
15-086
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework