மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த
தொல் முது கணிகை தன் சூழ்ச்சியில் போயவன்
விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது
நெஞ்சு நடுக்குறக் கேட்டு மெய் வருந்தி
மாதவி மகள் தனை வான் சிறை நீக்கக்
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு
'அரவு ஏர் அல்குல் அருந் தவ மடவார்
உரவோற்கு அளித்த ஒருபத்து ஒருவரும்
ஆயிரம்கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள
மா இரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும்
24-010
ஆங்கு அவன் புதல்வனோடு அருந் தவன் முனிந்த
ஓங்கிய சிறப்பின் ஒருநூற்று நால்வரும்
திருக் கிளர் மணி முடித் தேவர் கோன் தன் முன்
உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும்
ஒன்று கடை நின்ற ஆறு இருபதின்மர் இத்
தோன்று படு மா நகர்த் தோன்றிய நாள் முதல்
யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர்
மாபெருந்தேவி! மாதர் யாரினும்
பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும்
24-020
பரந்து படு மனைதொறும் பாத்திரம் ஏந்தி
அரங்கக் கூத்தி சென்று ஐயம் கொண்டதும்
நகுதல் அல்லது நாடகக் கணிகையர்
தகுதி என்னார் தன்மை அன்மையின்
மன்னவன் மகனே அன்றியும் மாதரால்
இந் நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்!
உம்பளம் தழீஇய உயர் மணல் நெடுங் கோட்டு
பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல்
கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா
இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற
24-030
பூ நாறு சோலை யாரும் இல் ஒரு சிறை
தானே தமியள் ஒருத்தி தோன்ற
"இன்னள் ஆர்கொல் ஈங்கு இவள்?" என்று
மன்னவன் அறியான் மயக்கம் எய்தாக்
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும்
உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும்
உற்று உணர் உடம்பினும் வெற்றிச் சிலைக் காமன்
மயிலையும் செயலையும் மாவும் குவளையும்
பயில் இதழ்க் கமலமும் பருவத்து அலர்ந்த
மலர் வாய் அம்பின் வாசம் கமழப்
24-040
பலர் புறங்கண்டோன் பணிந்து தொழில் கேட்ப
ஒரு மதி எல்லை கழிப்பினும் உரையாள்
பொரு அறு பூங்கொடி போயின அந் நாள்
"யாங்கு ஒளித்தனள் அவ் இளங்கொடி!" என்றே
வேந்தரை அட்டோன் மெல் இயல் தேர்வுழி
நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி
சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று
"என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள்
அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள்?
24-050
சொல்லுமின்" என்று தொழ அவன் உரைப்பான்
"கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னைப்
பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய்
நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன்
வாகை வேலோன் வளைவணன் தேவி
வாசமயிலை வயிற்றுள் தோன்றிய
பீலிவளை என்போள் பிறந்த அந் நாள்
"இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய
கருவொடு வரும்" எனக் கணி எடுத்து உரைத்தனன்
ஆங்கு அப் புதல்வன் வரூஉம் அல்லது
24-060
பூங்கொடி வாராள் புலம்பல்! இது கேள்
தீவகச் சாந்தி செய்யா நாள் உன்
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம்
மணிமேகலை தன் வாய்மொழியால் அது
தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின்
ஆங்குப் பதி அழிதலும் ஈங்குப் பதி கெடுதலும்
வேந்தரை அட்டோய்! மெய் எனக் கொண்டு இக்
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல்
வாசவன் விழாக் கோள் மறவேல்" என்று
மாதவன் போயின அந் நாள் தொட்டும் இக்
24-070
காவல் மா நகர் கலக்கு ஒழியாதால்
தன் பெயர் மடந்தை துயருறுமாயின்
மன் பெருந் தெய்வம் வருதலும் உண்டு என
அஞ்சினேன் அரசன் தேவி!' என்று ஏத்தி
'நல் மனம் பிறந்த நாடகக் கணிகையை
என் மனைத் தருக' என இராசமாதேவி
'கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை
தலைமையாக் கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை
புலைமை என்று அஞ்சிப் போந்த பூங்கொடி
24-080
நின்னொடு போந்து நின் மனைப் புகுதாள்
என்னொடு இருக்கும்' என்று ஈங்கு இவை சொல்வுழி
மணிமேகலை திறம் மாதவி கேட்டு
துணி கயம் துகள் படத் துளங்கிய அதுபோல்
தௌியாச் சிந்தையள் சுதமதிக்கு உரைத்து
வளி எறி கொம்பின் வருந்தி மெய்ந் நடுங்கி
அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர் தம்முடன்
மற வேல் மன்னவன் தேவி தன்பால் வரத்
தேவியும் ஆயமும் சித்திராபதியும்
மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்
24-090
எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளைக் கையால்
தொழும்தகை மாதவன் துணை அடி வணங்க
'அறிவு உண்டாக' என்று ஆங்கு அவன் கூறலும்
இணை வளை நல்லாள் இராசமாதேவி
அருந் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி
திருந்து அடி விளக்கிச் சிறப்புச் செய்த பின்
"யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என்
காண்தகு நல்வினை நும்மை ஈங்கு அழைத்தது
நாத் தொலைவு இல்லைஆயினும் தளர்ந்து
மூத்த இவ் யாக்கை வாழ்க பல்லாண்டு!' என
24-100
'தேவி கேளாய்! செய் தவ யாக்கையின்
மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன்
பிறந்தார் "மூத்தார் பிணி நோய் உற்றார்
இறந்தார்" என்கை இயல்பே இது கேள்
பேதைமை செய்கை உணர்வே அருஉரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப் பயன்
இற்று என வகுத்த இயல்பு ஈர் ஆறும்
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர்
அறியாராயின் ஆழ் நரகு அறிகுவர்
24-110
"பேதைமை என்பது யாது?" என வினவின்
ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயற்கோடு உண்டு எனக் கேட்டது தௌிதல்
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம்
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்வினை தீவினை என்று இரு வகையான்
சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி
24-120
வினைப் பயன் விளையும்காலை உயிர்கட்கு
மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும்
"தீவினை என்பது யாது?" என வினவின்
ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய்
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ முன்றும்
பொய்யே குறளை கடுஞ் சொல் பயன் இல்
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப்
24-130
பத்து வகையால் பயன் தெரி புலவர்
இத் திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி
கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்
"நல்வினை என்பது யாது?" என வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி
சீலம் தாங்கித்தானம் தலைநின்று
மேல் என வகுத்த ஒரு மூன்று திறத்து
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
மேவிய மகிழ்ச்சி வினைப் பயன் உண்குவர்
24-140
அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர்!
புரை தீர் நல் அறம் போற்றிக் கேண்மின்
மறு பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ!
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு
இத் திறம் பலவும் இவற்றின் பகுதியும்
முத்து ஏர் நகையாய்! முன்னுறக் கூறுவல்'
என்று அவன் எழுதலும் இளங்கொடி எழுந்து
நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி
'தேவியும் ஆயமும் சித்திராபதியும்
மாதவர் நல் மொழி மறவாது உய்ம்மின்
24-150
இந் நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின்
"மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று" என்குவர்
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின் நாள்
மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி
வஞ்சியுள் புக்கு மா பத்தினி தனக்கு
எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல்
"எனக்கு இடர் உண்டு" என்று இரங்கல் வேண்டா
மனக்கு இனியீர்!" என்று அவரையும் வணங்கி
வெந்துறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த
அந்தி மாலை ஆய் இழை போகி
24-160
உலக அறவியும் முதியாள் குடிகையும்
இலகு ஒளிக் கந்தமும் ஏத்தி வலம் கொண்டு
அந்தரம் ஆறாப் பறந்து சென்று ஆய் இழை
இந்திரன் மருமான் இரும் பதிப் புறத்து ஓர்
பூம்பொழில் அகவயின் இழிந்து பொறையுயிர்த்து
ஆங்கு வாழ் மாதவன் அடி இணை வணங்கி
'இந் நகர்ப் பேர் யாது? இந் நகர் ஆளும்
மன்னவன் யார்?" என மாதவன் கூறும்
'நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன்
பூமிசந்திரன் மகன் புண்ணியராசன்
24-170
ஈங்கு இவன் பிறந்த அந் நாள் தொட்டும்
ஓங்கு உயர் வானத்துப் பெயல் பிழைப்பு அறியாது
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம்
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல்' என
தகை மலர்த் தாரோன் தன் திறம் கூறினன்
அகை மலர்ப் பூம்பொழில் அருந் தவன் தான் என்
24-176
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework