ஒலி அவிந்து அடங்கி யாமம்
நள்ளென
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும்
துஞ்சாக் கண்ணள் துயர் அடச் சாஅய்
நம்வயின் வருந்தும் நன்னுதல் என்பது
உண்டுகொல் வாழி தோழி தெண் கடல்
வன் கைப் பரதவர் இட்ட செங் கோல்
கொடு முடி அவ் வலை பரியப் போக்கி
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே
வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள்
சொல்லியது சிறைப்புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம்

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework