புனை இழை நோக்கியும் புனல் ஆடப் புறம் சூழ்ந்தும்,அணி வரி தைஇயும், நம் இல் வந்து வணங்கியும்,
நினையுபு வருந்தும் இந் நெடுந்தகை திறத்து, இவ் ஊர்
'இனையள்' என்று எடுத்து ஓதற்கு அனையையோ, நீ? என
வினவுதி ஆயின், விளங்கு இழாய்! கேள், இனி;
'செவ் விரல் சிவப்பு ஊரச், சேண் சென்றாய்' என்று, அவன்
பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்தற்கே -
'கௌவை நோய் உற்றவர், காணாது கடுத்த சொல்
ஒவ்வா' என்று உணராய், நீ ஒரு நிலையே உரைத்ததை?
ஒடுங்கி, யாம் புகல் ஒல்லேம் பெயர்தர, அவன் கண்டு,
நெடும் கய மலர் வாங்கி, நெறித்துத் தந்தனைத்தற்கோ -
விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய் ஆகக்
கடிந்ததும் இலையாய், நீ கழறிய வந்ததை?
'வரி தேற்றாய், நீ' என, வணங்கு இறை அவன் பற்றித்,
தெரி வேய்த் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தனைத்தற்கோ -
புரிபு நம் ஆயத்தார் பொய் ஆக எடுத்த சொல்
உரிது என உணராய், நீ உலமந்தாய் போன்றதை?
என ஆங்கு,
அரிது இனி, ஆய் இழாய்! அது தேற்றல், புரிபு ஒருங்கு,
அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று, ஈங்கே,
தான் நயந்து இருந்தது இவ் ஊர் ஆயின், எவன் கொலோ -
நாம் செயற்பாலது இனி?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework