கடவுள் வாழ்த்து


முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்
பழுதின்றி ஆற்றப் பணிந்து - முழுதேத்தி
நண்பாய ஞாலத்து மாந்தர்க்(கு) உறுதியா
வெண்பா உரைப்பன் சில. 1

நூல்

ஒத்த ஒழுக்கம் கொலைபோய் புலால்களவோ(டு)
ஒத்த இவையல வோர்நாலிட்(டு) - ஒத்த
உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோல் கூறீர்
சிறுபஞ்ச மூலஞ் சிறந்து. 2

பொருளுடையான் கண்ணதே போகம் அறனும்
அருளுடையான் கண்ணதே ஆகும் - அருளுடையான்
செய்யான் பழிபாவம் சேரான் புறமொழியும்
உய்யான் பிறர்செவிக்கு உய்த்து. 3

கற்புடைய பெண்ணமிர்து கற்றடங்கி னான்அமிர்து
நற்புடைய நாடமிர்து நாட்டுக்கு - நற்புடைய
மேகமே சேர்கொடி வேந்தமிர்து சேவகனும்
ஆகவே செய்யின் அமிர்து. 4

கல்லாதான் தான்காணும் நுட்பமும் காதிரண்டும்
இல்லாதாள் ஏக்கழுத்தஞ் செய்தலும் - இல்லாதான்
ஒல்லாப் பொருளில்லார்க்கு ஈந்தளியான் என்றலும்
நல்லவர்கள் கேட்பின் நகை. 5

உடம்பொழிய வேண்டின் உயர்தவம் ஆற்றீண்டு
இடம்பொழிய வேண்டுமேல் ஈகை - மடம்பொழிய
வேண்டின் அறிமடம் வேண்டேல் பிறர்மனை
யீண்டின் இயையும் திரு. 6

படைதனக்கு யானை வனப்பாகும் பெண்ணின்
இடைதனக்கு நுண்மை வனப்பாம் - நடைதனக்குக்
கோடா மொழிவனப்புக் கோற்(கு)அதுவே சேவகர்க்கு
வாடாதா வன்கண் வனப்பு. 7

பற்றினான் பற்றற்றான் நூல்தவசி எப்பொருளும்
முற்றினான் ஆகும் முதல்வன்நூல் - பற்றினால்
பாத்துண்பான் பார்ப்பான் பழியுணர்வான் சான்றவன்
காத்துண்பான் காணான் பிணி. 8

கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் - பண்வனப்புக்
கேட்டார்நன்(று) என்றல் கிளர்வேந்தன் தன்நாடு
வாட்டான் நஞ்றென்றல் வனப்பு. 9

கொன்றுண்பான் நாச்சாம் கொடுங்கரிபோ வான்நாச்சாம்
நன்றுணர்வார் முன்கல்லான் நாவுஞ்சாம் - ஒன்றானும்
கண்டுழி நாச்சாம் கடவான் குடிப்பிறந்தான்
உண்டுழி நாச்சாம் உணர்ந்து. 10

சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்நீள் கோடு
விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் - வலம்படா
மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன்பார்ப்பு
நாவிற்கு நன்றல் வசை. 11

நாணிலான் சால்பும் நடையிலான் நன்னோன்பும்
ஊணிலான் செய்யும் உதாரதையும் - ஏணிலான்
சேவகமும் செந்தமிழ் தேற்றான் சுவிச்செயலும்
நாவகமே நாடின் நகை. 12

கோறலும் நஞ்சூனைத் துய்த்தல் கொடுநஞ்சு
வேறலும் நஞ்சுமா(று) அல்லானைத் - தேறினான்
நீடாங்கு செய்தலும் நஞ்சாம் இளங்கிளியை
நாடாதே தீதுரையும் நஞ்சு. 13

இடரின்னா நட்டார்கண் ஈயாமை இன்னா
தொடர்பின்னா நள்ளார்கண் தூயார்ப் - படர்பின்னா
கண்டல் அவர்பூங் கதுப்பினாய் இன்னாதே
கொண்ட விரதம் குறைவு. 14

கொண்டான் வழியொழுகல் பெண்மகன் தந்தைக்குத்
தண்டான் வழியொழுகல் தன்கிளையஃது - அண்டாதே
வேல்வழி வெம்முனை வீடாது மன்னாடு
கோல்வழி வாழ்தல் குணம். 15

பிழைத்தல் பொறுத்தல் பெருமை சிறுமை
இழைத்ததீங்(கு) எண்ணி யிருத்தல் - இழைத்த
பகைகெட வாழ்வதும் பல்பொருளார் நல்லார்
நகைகெட வாழ்வதும் நன்று. 16

கதநன்று சான்றாண்மை தீது கழிய
மதநன்று மாண்பில்லார் முன்னர் - விதநன்றால்
கோய்வாயிற் கீழுயிர்க்(கு)ஈ துற்றுக் குரைத்தெழுந்த
நாய்வாயுள் நல்ல தசை. 17

நட்டாரை யாக்கிப் பகைபணித்து வைஎயிற்றுப்
பட்டார் அகல்அல்கு லார்படிந்து - ஓட்டித்
தொடங்கினார் இல்லகத்து அன்பில் துறவா
உடம்பினான் ஆய பயன். 18

பொய்யாமை பொன்பெறினும் கள்ளாமை மெல்லியலார்
வையாமை வார்குழலார் நச்சினும் - நையாமை
ஓர்த்துடம்பு பேருமென்று ஊனவாய் உண்ணானேல்
பேர்த்துடம்பு கோடல் அரிது. 19

தேவறே கற்றவர் கல்லாதார் தேருங்கால்
பூதரே முன்பொருள் செய்யாதார் - ஆதரே
துன்பம் இலேம்பண்டு யாமே வனப்புடையேம்
என்பார் இருகால் எருது. 20

கள்ளான்கு தென்றும் கழுமான் கரியாரை
நள்ளான் உயிரிங்க நாவாடான் - நள்ளானாய்
ஊன்மறுத்துக் கொள்ளானேல் ஊனுடம்(பு) எஞ்ஞான்றும்
தான்மறுத்துக் கொள்ளான் தளர்ந்து. 21

பூவாது காய்க்கும் மரமுள நன்றறிவார்
மூவாது மூத்தவர் நூல்வல்லார் - தாவா
விதையாமை நாறுவ வித்துள மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு. 22

பூத்தாலும் காயா மரமுள நன்றறிவார்
மூவாது மூவர்நூல் தேற்றதார் - பாத்திப்
புதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்கு
உரைத்தாலும் செல்லா(து) உணர்வு. 23

வடி(வு)இளமை வாய்த்த வனப்பு வணங்காக்
குடிகுலமென்(று) ஐந்தும் குறித்து - முடியாத்
துளங்கா நிலைகாணார் தொக்(கு)ஈர் பசுவால்
இளங்கால் துறவா தவர். 24

கள்ளுண்டல் காணில் கணவன் பிரிந்துறைதல்
வெள்(கு)இல ளாய்ப்பிறர் இல்சேறல் - உள்ளிப்
பிறர்கருமம் ஆராய்தல் தீப்பெண் கிளைமைத்
துறமதுதீப் பெண்ணின் தொழில். 25

பெருங்குணத்தார்ச் சேர்மின் பிறன்பொருள்வெள வன்மின்
கருங்குணத்தார் கேண்மை கழிமின் - ஒருங்குணர்ந்து
தீச்சொல்லே காமின் வருங்காலன் திண்ணிதே
வாய்ச்சொல்லே யன்று வழக்கு. 26

வான்குருவிக் கூ(டு)அரக்கு வால்உலண்டு கோல்தகுதல்
தேன்புரிந்து யார்க்கும் செயலாகா - தாம்புரீஇ
வல்லவர் வாய்ப்பன என்னார் ஒரோஒருவர்க்(கு)
ஒல்காதோர் ஒன்று படும். 27

அறன்நாட்டான் நன்னெறிக்கண் நிற்க அடங்காப்
புறன்நாட்டான் புன்னெறிப் போகாது - புறன்நட்டான்
கண்டெடுத்துக் கள்களவு சூது கருத்தினால்
பண்டெடுத்துக் காட்டும் பயின்று. 28

ஆண்ஆக்கம் வேண்டாதான் ஆசான் அவற்(கு)இயைந்த
மாணாக்கன் அன்பான் வழிபடுவான் - மாணாக்கன்
கற்பனைத்தும் மூன்றுங் கடிந்தான் கடியாதான்
நிற்பனைத்தும் நெஞ்சிற்கோர் நோய். 29

நெய்தல் முகிழ்த்துணை யாம்குடுமி நேர்மயிரும்
உய்தல் ஒருதிங்கள் நாளாகும் - செய்தல்
துணங்குநூல் ஓதுதல் கேட்டல்மா ணாக்கர்
வணங்கி வலங்கொண்டு வந்து. 30

ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவன் அறியா தவனும் ஒருவன்
குணன்அடங்கக் குற்றமில் லானாம் ஒருவன்
கணன்அடங்கக் கற்றானும் இல். 31

உயிர்நோய்செய் யாமை உறுநோய் மறத்தல்
செயீர்நோய் பிறன்கண்செய் யாமை - செயிர்நோய்
விழைவு வெகுளி இவைவிடுவா னாயின்
இழிவன்(று) இனிது தவம். 32

வேட்பவன் பார்ப்பான் விளங்கிழைக்குக் கற்புடைமை
கேட்பவன் கேடில் பெரும்புலவன் - பாட்டவன்
சிந்தையான் ஆகும் சிறந்தது உலகினுள்
தந்தையான் ஆகும் நலம். 33

வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிகன்
உய்ப்பானே ஆசான் உயர்கதிக்கு - உய்ப்பான்
உடம்பினார் வேலி ஒருப்படுத்(து)ஊன் ஆரத்
தொடங்கானேல் சேறல் துணிவு. 34

வைததனால் ஆகும் வசைவணக்கம் நன்றாகச்
செய்ததனால் ஆகும் செழுங்குலமுன் - செய்த
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம். 35

இல்இயலார் நல்லறமும் எனைத் துறவறமும்
நல்லியலின் நாடி உரைக்குங்கால் - நல்லியல்
தானத்தால் போதும் தவத்தால் சுவர்க்கமாம்
ஞானத்தால் வீடாக நாட்டு. 36

மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர்வனப்பும் காதின் வனப்பும் - செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு. 37

தொழீஇ அடஉண்ணார் தோழரில் துஞ்சார்
வழீஇய பிறர்பொருளை வெளவார் - கெழீஇக்
கலந்தபின் கீழ்காணார் காணாய் மடவாய்
புலந்தபின் போற்றார் புலை. 38

பொய்யாமை நன்று பொருள்நன்று உயிர்நோவக்
கொல்லாமை நன்று கொழிக்குங்கால் - பல்லார்முன்
பேணாமை பேணும் தகைய சிறிதெனினும்
மாணாமை மாண்டார் மனம். 39

பண்டாரம் பல்கணக்குக் கண்காணி பாத்தில்லார்
உண்டார் அடிசிலே தோழரில் - கொண்டாரா
யாக்கைக்குத் தக்க அறிவில்லார்க் காப்படுப்பின்
காக்கைக்குக் காப்படுத்த சோறு. 40

உடையிட்டார் புல்மேய்வார் ஓடுநீர் புக்கார்
படையிட்டார் பற்றேதும் இன்றி - நடையிட்டார்
இவ்வகை ஐவரையும் என்றும் அணுகாரே
செவ்வகைச் சேவகர் சென்று. 41

பூவாதான் பூப்புப் புறங்கொடுத் தாள்இலிங்கி
ஓவாதான் கோலம் ஒருபொழுதும் - காவாதாள்
யார்யார் பிறர்மனையாள் உள்ளிட்டில் ஐவரையும்
சாரார் பகைபோல் சலித்து. 42

வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம்
வெகுவாமை வீழ்ந்துவிருந் தோம்பித் - திருவாக்கும்
தெய்வதையும் எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடு
செய்வதே பெண்டிர் சிறப்பு. 43

நாள்கூட்டம் மூர்த்தம் அவற்றோடு நன்றாம்அக்
கோள்கூட்டம் யோகம் குணன்உணர்ந்து - தோள்கூட்டல்
உற்றானும் அல்லானும் ஐந்தும் உணர்வானால்
பெற்றால்நாள் கொள்க பெரிது. 44

பேண்அடக்கம் பேணாப் பெருந்தகைமை பீடுடைமை
நாண்ஒடுக்கம் என்றைந்தும் நண்ணின்றாப் - பூண்ஒடுக்கம்
பொன்வரைக்கோங் கேர்முலைப் பூந்திருவே யாயினும்
தன்வரைத் தாழ்த்தல் அரிது. 45

வார்சான்ற கூந்தல் வரம்புயர வைகலும்
நீர்சான் றுயரவே நெல்லுயரும் - சீர்சான்ற
தாவாக் குடியுயரத் தாங்கருஞ்சீர்க் கோவுயரும்
ஓவா(து) உரைக்கும் உலகு. 46

அழியாமை எத்துவமும் சார்ந்தாரை ஆக்கல்
பழியாமை பாத்தல்யார் மாட்டும் - ஒளியாமை
கன்றுசா வப்பால் கறவாமை செய்யாமை
மன்றுசார் வாசு மனை. 47

நசைகொல்லார் நச்சியார்க்(கு) என்றும் கிளைஞர்
மிசைகொல்லார் வேளாண்மை கொல்லார் - இசைகொல்லார்
பொன்பெறும் பூஞ்சுணங்கின் மென்முலையாய் நன்குணர்ந்தார்
என்பெறினும் கொல்லார் இயைந்து. 48

நீண்டநீர் காடு களர்நிவந்து விண்தோயும்
மாண்ட மலைமக்கள் உள்ளிட்டு - மாண்டவர்
ஆய்ந்தன ஐந்தும் அரணா உடையானை
வேந்தனா நாட்டல் விதி. 49

பொச்சாப்புக் கேடு பொருட்செருக்குத் தான்கேடு
முற்றாமை கேடு முரண்கேடு - தெற்றத்
தொழில்மகன் தன்னோடு மாறாயின் என்றும்
உழுமகற்குக் கேடென்(று) உரை. 50

கொல்லாமை நன்று கொலைதீ(து) எழுத்தினைக்
கல்லாமை தீது கதந்தீது - நல்லார்
மொழியாமை முன்னே முழுதுங் கிளைஞர்
பழியாமை பல்லார் பதி. 51

உண்ணாமை நன்றவா நீக்கி விருந்துகண்மா(று)
எண்ணாமை நன்றிகழல் தீதெளியார் - எண்ணின்
அரியரா வார்பிறரிற் செல்லாரே உண்ணார்
பெரியரா வார்பிறர் கைத்து. 52

மக்கட் பெறுதல் மடனுடைமை மாதுடைமை
ஒக்க உடனுறைதல் ஊண்அமைவு - தொக்க
அலவலை அல்லாமை பெண்மகளிர்க்(கு) ஐந்து
தலைமகனைத் தாழ்க்கு மருந்து. 53

கொண்டான் கொழுநன் உடன்பிறந்தான் தன்மாமன்
வண்டார்பூந் தொங்கல் மகன்தந்தை - வண்தாராய் !
யாப்பார்பூங் கோதை அணிஇழையை நன்கியையக்
காப்பார் கருது மிடத்து. 54

ஆம்பல்வாய் கண்மனம் வார்புருவம் என்றைந்தும்
தாம்பல்வா யோடி நிறைகாத்தல் - ஓம்பார்
நெடுங்கழைநீண் மூங்கில் எனஇகழ்ந்தார் ஆட்டும்
கொடுங்குழை போலக் கொளின். 55

பொன்பெறுங் கற்றான் பொருள்பெறும் நற்கவி
என்பெறும் வாதி இசைபெறும் - முன்பெறக்
கல்லார்கற் றாரினத்தார் அல்லார் பெறுபவே
நல்லார் இனத்து நகை. 56

நல்ல வெளிப்படுத்துத் தீய மறந்தொழிந்து
ஒல்லை உயிர்க்(கு)ஊற்றம் கோலாகி - ஒல்லுமெனின்
மாயம் பிறர்பொருட்கண் மாற்றுக மானத்தான்
ஆயின் அழிதல் அறிவு. 57

தன்நிலையும் தாழாத் தொழில்நிலையும் துப்பெதிர்ந்தார்
இல்நிலையும் ஈடில் இயல்நிலையும் - துன்னி
அளந்தறிந்து செய்வான் அரசமைச்சன் யாதும்
பிளந்தறியும் பேராற்ற லான். 58

பொருள்போகம் அஞ்சாமை பொன்றுங்கால் போந்த
அருள்போகா ஆரறம்என்(று) ஐந்தும் - இருள்தீரக்
கூறப் படுங்குணத்தான் கூர்வேல்வல் வேந்தனால்
தேறப் படுங்குணத்தி னான். 59

நன்புலத்து வையடக்கி நாளும்மா டோ போற்றிப்
புன்கலத்தைச் செய்(து) எருப் போற்றியபின் - இன்புலத்தின்
பண்கலப்பை என்றிலை பாற்படுப் பான்உழவோன்
நுண்கலப்பை நூலோது வார். 60

ஏலாமை நன்றீதல் தீதுபண்(பு) இல்லார்க்குச்
சாலாமை நன்றுநூல் சாயினும் - சாலாமை
நன்று தவநனி செய்தல்தீ(து) என்பாரை
இன்றுகா(று) யாம்கண் டிலம். 61

அரம்போல் கிளையடங்காய் பெண்வியக்கத் தொண்டு
மரம்போல் மகன்மாறாய் நின்று - கரம்போலக்
கள்ளநோய் காணும் அயல்ஐந்தும் ஆகுமேல்
உள்ளநோய் வேண்டா உயிர்க்கு. 62

நீர்அறம் நன்று நிழல்நன்று தன்இல்லுள்
பார்அறம் நன்றுபாத்(து) உண்பானேல் - பேரறம்
நன்று தளிசாலை நாட்டல் பெரும்போகம்
ஒன்றுமாம் சால வுடன். 63

பிடிப்பிச்சை பின்னிறை ஐயங்கூழ் கூற்றோ(டு)
எடுத்திரந்த உப்(பு)இத் துணையோ(டு) - அடுத்துச்
சிறுபயம் என்னார் சிதவலிப்(பு) ஈவார்
பெறுபயன்பின் சாலப் பெரிது. 64

வெந்தீங்காண் வெண்ணெய் மெழுகுநீர் சேர்மண்உப்(பு)
அந்த மகன்சார்ந்த தந்தையென்(று) - ஐந்தினுள்
ஒன்றுபோல் உள்நெகிழ்ந்து ஈயின் சிறிதெனினும்
குன்றுபோற் கூடும் பயன். 65

குளங்கொட்டுக் கோடு பதித்துவழி சீத்து
உளந்தொட்(டு) உழுவயல் ஆக்கி - வளந்தொட்டுப்
பாகு படுங்கிணற்றோ(டு) என்றிவ்ஐம் பாற்படுப்பான்
ஏகும் சுவர்க்கத்(து) இனிது. 66

போர்த்தும் உரிந்திட்டும் பூசியும் நீட்டியும்
ஓர்த்(து) பால்மறைத்(து) உண்பான்மேய் - ஓர்த்த
அறமாம்மேல் சொல்பொறுக்க அன்றேல் கலிக்கண்
துறவறம்பொய் இல்லறமே வாய். 67

தான்பிறந்த இல்நினைந்து தன்னைக் கடைப்பிடித்துத்
தான்பிற ரால்கருதற் பாடுணர்ந்து - தான்பிறரால்
சாவ எனவாழான் சான்றேரால் பல்யாண்டும்
வாழ்க எனவாழ்தல் நன்று. 68

நெடுக்கல் குறுக்கல் துறைநீர்நீ டாடல்
வடுத்தீர் பகல்வாய் உறையே - வடுத்தீரா
ஆகும்அந் நான்கொழிந்(து) ஐந்தடக்கு வானாநின்
வேகும்பம் வேண்டான் விடும். 69

கொன்றான் கொலையை உடன்பட்டான் கோடாது
கொன்றதனைக் கொண்டான் கொழுக்குங்கால் - கொன்றதனை
அட்டான் இடவுண்டான் ஐவரினும் ஆகுமெனக்
கட்டெறிந்த பாவம் கருது. 70

சிறைக்கிடந்தார் செந்தார்க்கு நோற்பார் பலநாள்
உறைக்கிடந்தார் ஒன்றிடையிட்(டு) உண்பார் - பிறைக்கிடந்து
முற்றனைத்தும் உண்ணா தவர்க்கீந்தார் மன்னவராய்க்
கற்றனைத்தும் வாழ்வார் கலந்து. 71

ஈன்றெடுத்தல் சூல்புறஞ் செய்தல் குழவியை
ஏன்றெடுத்தல் சூலேற்ற கன்னியை - ஆன்ற
அழிந்தானை இல்வைத்தல் பேரறமா ஆற்ற
மொழிந்தார் முதுநூலார் முன்பு. 72

வலியிழந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால்
நலி(பு)அழிந்தார் நாட்(டு)அறைபோய் நைந்தார் - மெலிவொழிய
இன்னவராம் என்னாராய் ஈந்த ஒருதுற்று
மன்னவராய்ச் செய்யும் மதித்து. 73

கலங்காமைக் காத்தல் கருப்பஞ் சிதைந்தால்
இலங்காமை பேரறத்தால் ஈற்றம் - விலங்காமைக்
கோடல் குழவி மருந்து வெருட்டாமை
நாடின் அறம்பெருமை நாட்டு. 74

சூலாமை சூலிற் படுந்துன்பம் ஈன்றபின்
ஏலாமை ஏற்றால் வளர்ப்பருமை - சால்பவை
வல்லாமை வாய்ப்ப அறிபவர் உண்ணாமை
கொல்லாமை நன்றால் கொழித்து. 75

சிக்கர் சிதடர் சிதலைபோல் வாயுடையார்
துக்கர் துருநாமர் தூக்குங்கால் - தொக்க
வருநோய்கள் முன்னாளில் தீர்த்தாரே இந்நாள்
ஒருநோயும் இன்றிவாழ் வார். 76

பக்கம் படாமை ஒருவர்க்குப் பாடேற்றல்
தக்கம் படாமை தவமல்லாத் - தக்கார்
இழியினர்க்கே யானும் பசித்தார்க்(கு)ஊண் ஈதல்
கழிசினங் காத்தல் கடன். 77

புண்பட்டார் போற்றுவார் இல்லாதவர் போகுயிரார்
கண்கெட்டார் காலிரண்டும் இல்லாதார் -கண்கண்பட்(டு)
ஆழ்ந்து நெகிழ்ந்தவர்க்கு ஈந்தார் கடைபோக
வாழ்ந்து கழிவார் மகிழ்ந்து. 78

பஞ்சப் பொழுதகத்தே பாத்துண்பான் காவாதான்
அஞ்சா(து) உடைபடையுள் போந்தெறிவான் - எஞ்சாதே
உண்பதுமுன் ஈவான் குழவி பலிகொடுப்பான்
எண்பதின் மேலும்வாழ் வாண். 79

வரைவில்லாப் பெண்வையார் மன்னைப்புற்(று) ஏறார்
புரையில்லார் நள்ளார்போர் வேந்தன் - வரைபோல்
கடுங்களிறு விட்டுழிச் செல்லார் வழங்கார்
கொடும்புலி கொட்கும் வழி. 80

தக்கார் வழிகெடாது ஆகுந் தகாதவர்
உக்க வழியராய் ஒல்குவர் - தக்க
இனத்தினான் ஆகும் பழியும் புகழும்
மனத்தினான் ஆகும் மதி. 81

கழிந்தவை தானிரங்கான் கைலாரா நச்சான்
இழிந்தவை இன்புறான் இல்லார் - மொழிந்தவை
மென்மொழியால் உள்நெகிழ்ந்து ஈவானேல் விண்ணோரால்
இன்மொழியால் ஏத்தப் படும். 82

காடுபோல் கட்கினிய இல்லம் பிறர்பொருள்
ஓடுபோல் தாரம் பிறந்ததாய் - ஊடுபோய்க்
கோத்தின்னா சொல்லானாய்க் கொல்லானேல் பல்லவர்
ஒத்தினால் என்ன குறை. 83

தோல்கன்று காட்டிக் கறவார் கறந்தபால்
பாற்பட்டார் உண்ணார் பழிபாவம் - பாற்பட்டார்
ஏற்றவாது இன்புற்று வாழ்வன வீடழியக்
கூற்றுவப்பச் செய்யார் கொணர்ந்து. 84

நகையொரு மந்திரம் நட்டார்க்கு வாரம்
பகையொரு பாட்டுரையென்(று) ஐந்தும் - தொகையொடு
மூத்தோர் இருந்துழி வேண்டார் முதுநூலுள்
யாத்தார் அறிந்தவர் ஆய்ந்து. 85

சத்தமெய்ஞ் ஞானம் தருக்கம் சமயமே
வித்தகர் கண்டவீ(டு) உள்ளிட்டாங்(கு) - அத்தகத்து
அந்தஇவ் ஐந்தும் அறிவான் தலையாய
சிந்திப்பிற் சிட்டன் சிறந்து. 86

கண்ணுங்கால் கண்ணும் கணிதமே யாழினோடு
எண்ணுங்கால் சாந்தே இலைநறுக்கிட்(டு) - எண்ணுதல்
இட்டஇவ் ஐந்தும் அறிவான் இடையாய
சிட்டனென்(று) எண்ணப் படும். 87

நாணிலன் நாய்நன்கு நள்ளாதான் நாய்பெரியார்ப்
பேணிலன் நாய்பிறர் சேவகன்நாய் - ஏணில்
பொருந்திய பூண்முலையார் சேரிகைத்(து) இல்லான்
பருத்தி பகர்வழி நாய். 88

நாண்எளிது பெண்மை நகையெளிது நட்டானேல்
ஏண்எளிது சேவக னேல்பெரியார் - பேண்எளிது
கொம்பு மறைக்கும் இடையாய் அளியன்மீ(து)
அம்பு பறத்தல் அரிது. 89

இன்சொலான் ஆகும் கிளமை இயல்பில்லா
வன்சொல்லின் ஆகும் பகைமைமன் - மென்சொல்லின்
ஓய்வில்லா ஆரருளாம் அவ்வருள் நன்மனத்தான்
வீவில்லா விடாய் விடும். 90

தக்க(து) இளையான் தவம்செல்வன் ஊண்மறுத்தல்
தக்கது கற்புடை யாள்வனப்புத் - தக்க(து)
தழல்தண்என் தோளான் அறிவிலன் ஆயின்
நிழற்கண் முயிறாய் விடும். 91

பொய்யால் சுவர்க்கம்வா யால்நிர யம்பொருள்
மையார் மடந்தையால் வாழ்வினிது - மெய்யென்றால்
மைத்தக நீண்ட மலர்க்கண்ணாய் தீதன்றால்
எத்தவ மானும் படல். 92

புல்லறத்தின் நன்று மனைவாழ்க்கை போற்றுடைத்தே
நல்லறத்தா ரோடு நடக்கலாம் - நல்லறத்தார்க்(கு)
அட்டிட்டுண் டாற்றவாழ்ந் தார்களே இம்மையில்
அட்டிட்டுண் டாற்றவாழ் வார். 93

ஈவது நன்றுதீ(து) ஈயாமை நல்லவர்
மேவது நன்றுமே வாதாரோ(டு) - ஓவாது
கேட்டுத் தலைநிற்க கேடில் உயர்கதிக்கே
ஓட்டுத் தவநிற்கும் ஊர்ந்து. 94

உண்இடத்தும் ஒன்னார் மெலிவிடத்தும் மந்திரங்கொண்(டு)
எண்இடத்தும் செல்லாமை தான்தலையே - எண்ணி
உரைப்பூசல் கோறல் உயர்தவமேல் கங்கைக்
கரைப்பூசை போற்றக் கடை. 95

பத்தினி சேவகன் பொத்தில் கடுந்தவசி
பொத்தில் பொருள்திறத்துச் செவ்வியான் - பொத்தின்று
வைத்தார் அதுவழக்குஞ் சான்றவர் தம்செம்மை
செத்தால் அறிக சிறந்து. 96

வழிப்படரல் வாயல் வருந்தாமை வாய்மை
குறிப்படரல் தீக்சொற்க ளோடு - மொழிப்பட்ட
காய்ந்து விடுதல் களைந்(து)உயக் கற்றவர்
ஆய்ந்து விடுதல் அறம். 97

பாயிரம்

மல்லிவர் மாக்காயன் மாணாக்கன் மாநிலத்துப்
பல்லவர் நோய்நீக்கும் பாங்கினால் - கல்லா
மறுபஞ்சம் தீர்மழைக்கை மாக்காரி யாசான்
சிறுபஞ்ச மூலம்செய் தான். 98

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework