(ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி)
மாகாளி பராசக்தி உருசியநாட்
டினிற்கடைக்கண் வைத்தாள், அங்கே,
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி,
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்,
வாகான தோள்புடைத்தார் வானமரர்,
பேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம்,
வையகத்தீர், புதுமை காணீர்!

இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன்
ஜாரெனும்பே ரிசைந்த பாவி
சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும்
சான்றோரும்; தருமந் தன்னைத்
திரணமெனக் கருதிவிட்டான் ஜார்மூடன்,
பொய்சூது தீமை யெல்லாம்
அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந்த
தோங்கினவே அந்த நாட்டில்.

உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை,
பிணிகள் பலவுண்டு பொய்யைத்
தொழுதடிமை செய்வாருக்குச் செல்வங்க
ளுண்டு, உண்மை சொல்வோர்க் கெல்லாம்
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு,
தூக்குண்டே யிறப்ப துண்டு,
முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியங்லே
ஆவிகெட முடிவ துண்டு.

இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால்
வனவாசம், இவ்வா றங்கே
செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையே
அறமாகித் தீர்ந்த போதில்
அம்மைமனங் கனிந்திட்டாள், அடிபரவி
உண்மைசொலும் அடியார் தம்மை
மும்மையிலும் காத்திடுநல் விழியாலே
நோக்கினாள்ஈ முடிந்தான் காலன்.

இமயமலை வீந்ததுபோல் வீழ்ந்துவிட்டான்
ஜாரரசன் இவனைச் சூழ்ந்து
சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி
அறங்கொன்று சதிகள் செய்த
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்,
புயற்காற்றுங் குறை தன்னில்
திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்
விறகான செய்தி போலே!


குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக என்றார்,
இடிப்பட்ட சுவர்ப்போல் கலிவிழுந்தான்,
கிருத யுகம் எழுக மாதோ!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework