வராளி - திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்

கனிகள் கொண்டுதரும் - கண்ணன்

கற்கண்டு போலினிதாய்;
பனிசெய் சந்தனமும் - பின்னும்
பல்வகை அத்தர்களும்,
குனியும் வாண்முகத்தான் - கண்ணன்
குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே - வண்ணம்
இயன்ற சவ்வாதும். ... 1

கொண்டை முடிப்பதற்கே; - மணங்
கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே - கண்ணன்
மையுங் கொண்டுதரும்;
தண்டைப் பதங்களுக்கே - செம்மை
சார்த்துசெம் பஞ்சுதரும்;
பெண்டிர் தமக்கெல்லாம் - கண்ணன்
பேசருந் தெய்வமடீ! ... 2

குங்குமங் கொண்டுவரும் - கண்ணன்
குழைத்து மார்பொழுத;
சங்கையி லாதபணம் - தந்தே
தழுவி மையல் செய்யும்;
பங்கமொன் றில்லாமல் - மகம்
பார்த்திருந் தாற்போதும்;
மங்கள மாகுமடீ! - பின்னோர்
வருத்த மில்லையடி! . ... 3

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework